don't break the rules...

நம் வீட்டுப் பெரியவர்கள் ஏற்படுத்திய கட்டுப்பாடுகள், சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் உடைக்க விரும்பும் நாம், உடைத்து வெளியேறிவிட்ட நாம், நமக்கும் அடுத்த சந்ததி, நாம் மதிக்கும் சில சம்பிரதாயங்களை உடைப்பதில் நமக்கு ஏன் வருத்தம் ஏற்படுகிறது?

இந்த மாற்றங்கள் எல்லாம் ஒரே இரவில் வந்து விடவில்லை.

"நீயாவது வெளியே போய் சாதி" என்று எள்ளுப்பாட்டி கொள்ளுப் பாட்டியிடம் சொல்லி வரும் தலைமுறைகளின் தாய்மார்கள் தன்னை விட தன் குழந்தை பெரியதாக சமூகத்தில் மதிக்கப் படவேண்டும் என்ற ஆதங்கத்தின் ஆசிகளோடு வெளியேறி வந்தவர்கள் சரி வர வழிநடத்தப் படாமல், பாதை மாறி, இன்று தரம் இல்லாத ஒன்றை கலாச்சாரம் ஆக்கி கொண்டிருக்கிறோம். டிவி திரையில் தோன்றும் நிழல் புகழ் அவர்கள் கண்களை மறைக்கிறது. இதற்கு யார் காரணம்? நாம் தானே.

அட. உன் பையன் இன்னிக்கி "டப்பா" டி வீ ல சூப்பர் ஆக பாடினான். என்ற முதல் வாழ்த்து போதையாகிறது. பின்பு, one is too many, and thousand is not enough என்கிறா மாதிரி, இது தீராத ஆசை ஆகிறது. ஏணியில் ஏறிய பின் கீழ் இறங்கத் தெரியாத குழந்தை போல தவிக்கிறது மனம். அல்லது, இறங்க விடாமல் அந்தப் புகழ் ஆசை அவர்களை அந்தரத்தில் தொங்க விட்டிருக்கிறது.

அரைகுறை ஆடைகளை ஒரு கலாச்சாரமாக ஏற்ற பிறகு, இன்று spencer plaza-வில் அல்லது சத்யம் தியேட்டரில், பெசன்ட் நகர் பீச்சில், ஈ சி ஆரில், ஆண்களும் பெண்களும் அணிந்து செல்லும் மரியாதை குறைவான உடைகள் நமக்கு சகஜமான ஒன்றாகி விட்டன. நமக்கு அது தவறென்றும் தெரியவில்லை.

வெஸ்டர்ன் வெஸ்டர்ன் என்று நாம் அஸ்தமனத்தை நோக்கி பயணிக்கிறோம். அவர்கள் வேண்டாம் என்று வீசும் குப்பைகளை தேடி தேடி எடுத்து நம் வீட்டு கூடத்தில் வைத்து அழகு பார்க்கிறோம். என்ன சொல்ல?

நம் வீட்டு பெரியவர்களுக்கு, மது அருந்துவது, ஒரு பாவச் செயலாக இருந்தது. இப்போது, மது அருந்துபவன் அடுத்தவனுக்கு தொல்லை இல்லாமல் இருந்தால் போதும் என்று சொல்லும் மனபக்குவம் பெற்று விட்டோம்.

திடீரென்று பெட்ரோல் விலை நாலு ரூபாய் ஏற்றினாலும் நமக்கு சகஜமாகி விட்டது. அதன் எதிரொலியாக கீரை முதல் எண்ணெய் வரை விலை ஏறி வரும் மாத பட்ஜெட் எகிறும் போதும் ஏற்றுக் கொண்டு செல்கிறோம்.

கெட்ட வார்த்தைகள் பேசுவது மட்டமானதாக நினைக்கப்பட்டது. ஆனால், சர்வ சாதாரணமாக இன்று எங்கும் அவற்றை கேட்க முடிகிறது. தொலைக் காட்சியை தப்பித் தவறி ஏதேனும் நல்ல நாட்களில் போட்டு விட்டால், பேச்சாளர்கள் ஒருவருக்கொருவர் குடும்ப சமாச்சாரங்களையும், தம் மனைவி அல்லது கணவரை பொதுச் சபையில் ரங்கமணி, தங்கமணி என்று கிண்டல் செய்து கொண்டும் ஓர் அசட்டு பட்டிமன்றம், இல்லை என்றால் நமீதா-வின் புராணங்கள், சீரியல்களில் சராமாரியாக ஒருவர் குடும்பத்தை மற்றவர் அழிக்கவும், மண்ணோடு மண் ஆக்கவும், வேறு வேலையே இல்லாத மாதிரி மாற்றான் மனைவியையோ, மாற்றாள் கணவனையோ அபகரிக்க ஒருவர் திட்டம் போட்டுக் கொண்டே இருப்பார். இதெல்லாம் நமக்கு சகஜம் ஆகி விட்டது.

நாளைக்கு வேலை நம் கையில் இருக்கிறதா இல்லையா என்ற திரிசங்கு சொர்கத்தில் வாழும் நாம் ராமன் ஆண்டா என்ன ராவணன் ஆண்டா என்ன, என் பிழைப்பு ஓடினால் போதும் என்ற நிலையில் தான் இருக்கிறோம்.

மடிசார் கட்டியபடியே புழுக்கத்தில் வெந்த என் கொள்ளுப் பாட்டி என் பாட்டிக்கு ஆறு கஜத்தின் சுதந்திரத்தையும், என் பாட்டி என் அம்மாவுக்கு சுடிதாரையும், என் அம்மா எனக்கும் ஜீன்சையும் தந்தார். நான் என் மகளுக்கு எதுவும் தரும் வரை என் அனுமதிக்காகக் கூட அவள் காத்திருக்கப் போவதில்லை.

விரிசல் விழுந்த ஆரம்பம் இன்று படு பாதாளத்திற்கு நம்மை இட்டுச் சென்று கொண்டிருக்கிறது. இவற்றையும் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு மரத்து விட்டது மனம்.

கட்டுப்பாடுகளும் நியமங்களும் நம்மை நல்லப் பாதையில் இட்டுச் செல்லவே அன்றி, அவை நம்மைக் கட்டுப்படுத்துவது இல்லை. நீங்கள் கட்டப்பட்டு இருக்கும் போது உங்கள் சந்ததிகளுக்கும் அந்த கட்டின் மகிழ்ச்சியைக் கூறுங்கள். pass on the happiness.

இவ்வளவு சுதந்திரம் ஏனோ எரிச்சல் தரும் ஒன்றாக இருக்கிறதே?

கட்டுக்குள் கட்டப்பட்டு இருப்பதில் தவறென்ன இருக்கிறது. எல்லாம் என்னிஷ்டம் என்று உங்கள் மனம் சொன்னால், அதனிடம் உங்கள் மகள் அல்லது மகன் தவறு செய்யும் போது துடிக்ககவும் கூடாது என்றே "கட்டாயமாய்" சொல்லிவையுங்கள். அவர்கள் போக்கும் இரசிக்கும் அளவுக்கு நம் மனம் மரத்தே போய் விடும்.



.

7 comments:

நசரேயன் said...

என்னாச்சி திடீர்னு, ரெம்ப கோபமா எழுதின மாதிரி இருக்கு, வீட்டுல சுக்கு காப்பி போட்டு குடிங்க, எல்லாம் சரியாகி விடும்

அகநாழிகை said...

வித்யா,
பதிவை வாசித்தேன். கோர்வையாக வந்து இறுதியில் ஏதோவொன்று முற்றுப்பெறாதது போல் இருக்கிறது

//கட்டுப்பாடுகளும் நியமங்களும் நம்மை நல்லப் பாதையில் இட்டுச் செல்லவே அன்றி, அவை நம்மைக் கட்டுப்படுத்துவது இல்லை//

இது எதிர்மறை சிந்தனையாக இருக்கிறது. அறம் என்பதும் ஒழுக்கம் என்பது நாமாக விதித்துக்கொண்டவைதானே. அதுபோலத்தான் கட்டுப்பாடுகளும் நியமங்களும்.

இறுதிப்பகுதியை சட்டென முடித்து விட்டது போல இருக்கிறது. இன்னும் எழுதியிருக்கலாம்.

நல்ல சிந்தனைப் பகிர்வு.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

Vidhoosh said...

நன்றி/ எனக்கு கோபமெல்லாம் இல்லை நசரேயன்.

ஆம் வாசு. பதிவு கொஞ்சம் நீளமாக போனதால் சுருக்கினேன். சிறிது இடைவெளியில், மீதும் ரிலீஸ் செய்கிறேன்.

மாமியாரும் மருமகளும் கலந்து கொள்ளும் ஹிந்தி ரியாலிட்டி ஷோவில் அரங்கேறிய கூத்துக்களைக் கண்டு எழுந்த உணர்வுகள்.

நந்தாகுமாரன் said...

முதலில் இம்மாதிரி reality show nonsense எல்லாம் பார்பதற்காகவே உங்களைத் திட்ட வேண்டும்

Vidhoosh said...

சும்மா சேனல் மாத்தும் போது flash ஆனது. அட!ஏதோ tom and jerry ஷோ போல இருக்கும் என்றே நம்பினேன். ரொம்ப கேலிக் கூத்து நந்தா!! இதப் பாத்த பிறகு ரெண்டு நாளா டிவீ பக்கமே போகலை.

Anonymous said...

இவ்வளவு சுதந்திரம் ஏனோ எரிச்சல் தரும் ஒன்றாக இருக்கிறதே?

கட்டுக்குள் கட்டப்பட்டு இருப்பதில் தவறென்ன இருக்கிறது. எல்லாம் என்னிஷ்டம் என்று உங்கள் மனம் சொன்னால், அதனிடம் உங்கள் மகள் அல்லது மகன் தவறு செய்யும் போது துடிக்ககவும் கூடாது என்றே "கட்டாயமாய்" சொல்லிவையுங்கள். அவர்கள் போக்கும் இரசிக்கும் அளவுக்கு நம் மனம் மரத்தே போய் விடும்.//


நெத்தியடி...

Anonymous said...

நாளைக்கு வேலை நம் கையில் இருக்கிறதா இல்லையா என்ற திரிசங்கு சொர்கத்தில் வாழும் நாம் ராமன் ஆண்டா என்ன ராவணன் ஆண்டா என்ன, என் பிழைப்பு ஓடினால் போதும் என்ற நிலையில் தான் இருக்கிறோம்.//

நிதர்சனமான உண்மை...

Post a Comment