மரணம் தீர்வாகுமா?

திரு. ஜகதானந்த் பாண்டா அவர்களது மரணம் பற்றிய இந்த செய்தி படிக்கையில் எனக்கு மிகவும் வருத்தமாகவே இருந்தது.

பாண்டா அவர்கள் M.Phil(Intnl Relations), M.A.(Political Sc.) படித்திருக்கிறார். பாண்டா 1983-batch IAS officer ஆவார். அவர் ஒரிசாவில் பல முக்கியப் பொறுப்புக்களை வகித்திருந்து, டெல்லி-க்கு central deputation-னில் 2006 ஆண்டு சென்றார். அன்னாருக்கு இப்படி ஒரு மரணம் வந்ததில் எனக்கு நிறைய வருத்தம். அவர் மீது சி.பீ.ஐ. என்கொயரி இருந்ததாக தெரிகிறது. முறைதவறிய வருமான ஆசையாலோ, இல்லை வேறு எந்த காரணமோ தெரியவில்லை.

ஒரு ..எஸ். ஆபிசர் உருவாக எவ்வளவு உழைக்கவேண்டும் தெரியுமா? அவர் தவறோ சரியோ, ஆனால் மரணம் எதற்குமே தீர்வு இல்லை. :(

red tapism, corruption என்றெல்லாம் ஐ.ஏ.எஸ்-கள் மீது தொடர்ந்து பழி போடப்பட்டாலும், நான் (நிஜமாகவே நல்ல) ஐ.ஏ.எஸ்-களுக்கு எடுபிடியாக இருந்ததால் கூறுகிறேன். அவர்களுக்கு அப்படிப்பட்ட அதிசய அறிவாற்றல் எப்படி வந்திருக்கிறது என்று வியந்திருக்கிறேன். படிப்பு தந்ததோ அல்லது சொந்த அறிவோ தெரியவில்லை, இவர்கள் எந்த விஷயத்தையுமே, futuristic vision-னோடு கூர்ந்து கவனித்து, சரியான முடிவெடுப்பது போன்றவற்றில் அவர்களுக்கு நிகர் இல்லை என்றே நம்புகிறேன். இதெல்லாம் நான் வியந்து admire செய்த விஷயங்கள்.
..எஸ். பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சுட்டவும்.





.

பைத்தியம் - 3

பைத்தியம் - 2

பைத்தியம் - பாகம் 1

கல்லாங்காய் விளையாட்டுப் பாடல்கள்

இன்று இக்கவிதை படித்ததும்:

சரியா தப்பா எனக் கேட்டு சரியாகவே
தாண்டி தாண்டி பாண்டி விளையாடும்,
பத்து வயதில் 'உக்கார்ந்து' குழந்தை பருவத்தைத் தொலைத்து
'பெரியவள்' ஆகிப்போன பட்டணத்துப் பாப்பாக்களை
விளையாடத் தடைவிதித்து வீட்டுக்குள் உக்காரவைக்கும்
உலகில் எல்லாம் தெரிந்த உள்ளம் உள்ளவர்களுக்கு,
உங்களுக்குத் தெரியுமா?அந்த நாள் உபாதைகளை
அடியோடு போக்கிடவே நம் முன்னோர்கள் கண்ட
முழுத்தீர்வு தான் இந்த விளையாட்டோடு சேர்ந்த
வினை தீர்க்கும் மருந்து உணர்ந்து கொள் உடனே,
தொடரச் சொல் அதனை.
--துரை.ந.உ தூத்துக்குடி

எனக்குள் நிறைய நினைவலைகள். சில்லு விளையாட்டு, பல்லாங்குழி, கல்லாங்காய் அல்லது கல்லாங்கல் அல்லது கழங்காடுதல் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் இந்த விளையாட்டுக்கள் தரும் மகிழ்ச்சிக்கு வேறு பெயரே கிடையாது.

கல்லாங்கா விளையாட்டு, ஒண்ணாங்கா, ரெண்டாங்கா, மூணாங்கா, நாலாங்கா, அஞ்சாங்கா என்று போகும். இந்த விளையாட்டு விளையாட கருங்கல் பொறுக்குவதில் போட்டியே நடக்கும். அழகான உருண்டையான ஒரே அளவிலான கற்களை சேமித்தல் ஒரு கலை.

புளியங்கொட்டை, கூழாங்கற்கள் அல்லது ஜல்லிகற்கள் கரடும் முரடுமாக, சொரசொரவென்று ஆரம்பத்தில் இருக்கும். நாளடைவில் விளையாட விளையாட வழவழப்பாகிவிடும். நிறைய கருங்கற்களை தரையில் பரப்பி கற்களை கையால் மேலே எறிந்து சுழற்றிப் பிடிப்பது, புறங்கையில் பிடிப்பது, வாரிப் பிடிப்பது, போன்று பல விதங்கள். எனக்கு கொஞ்சம் மறந்து விட்டது. நினைவிருப்பவர்கள் பகிரலாம்.

விளையாடும் போது பாடும் பாடல்கள் இவை.

கொக்குச்சி கொக்குகுச்சி, ரெட்டை ரெட்டை சிலாக்கு
முக்குக்குச் சிலந்தி கடிபடுடி, நான்கு வந்தா வாரணும்
ஐயப்பன் சோலை, ஆறுமுக தாளம் போட்டு
ஏழுக்குக் கூழு குடி, எட்டுக்கு முட்டி போடு
ஒன்பது கம்பளம் விரிச்சு படு, பத்துக்கு பழம் கொடு.
கட்டை வச்சேன் கால் நீட்டி, கல்லெடுத்து ஆடினேன்,
ஈரிரண்டைப் போடடி, இறுக்கி மாட்டைக் கட்டடி
பருத்திக் கட்டி வையடி, பட்டு கட்ட முடியாம
முக்கட்டி வாணியன் சொல்லாட, சொல்லுஞ் சொல்லும் சேர்ந்தாட
வாணியன் வந்து வழக்காட, வாணிச்சி வந்து வசைபாட
நாலை வைச்சு நாலெடு, நாராயணன் பேரச் சொல்லு
பேரச் சொல்லி வாழ்ந்து நில்லு, ஐவரளி பசுமஞ்சள்
அரைக்க அரைக்கப் பத்தாது, பத்தாத மஞ்சள் பசுமஞ்சள்
ஆக்குருத்தலம் குருத்தலம், அடுப்புத் தண்டலம் தண்டலம்
வேம்பு கட்டால் வெண்கலம், ஏழு புத்திர சகாயம்,
புத்திர சகாயம் வேணாண்டி, மாடு கட்டினா மகராஜி.
எட்டும் பொட்டும் போடட்டும், ஒன்பதுநரி சித்திரத்தை
பேரன் பிறந்தத சொல்லத்தான், பேரிடவாடி பெரியக்கா
பத்திர சித்திர கோலாட்டம், பங்குனி மாசம் ஆடடி
வெள்ளிக்கிழமை அம்மன் கொண்டாட்டம்.

என்னை மறந்து இதை முணுத்த போது, எங்கள் வீட்டில் வீட்டு வேலை செய்யும் (பத்துப் பாத்திரம் தேய்ப்பது போன்ற) மீனாம்மா "இது என்ன பட்டிகாட்டு பாட்டு போல?" என்று என்னை அவங்க கிண்டல் பண்ணிட்டு போனாங்க... ஹ்ம்ம்..


..

ஆர்த்தர், லான்செட் மற்றும் சூனியக்காரி

விடை பெறுகிறேன் தோழர்களே

சைக்கிள் - 2

நேரமில்லை

கரும்பு தின்னக் கூலி

விரும்பாத கவிதை

எறும்பு, லட்டு, அப்பளக் குழவி மற்றும் பூதம்

நல்ல இலக்கியத்தின்/கவிதையின் அடையாளங்களில் ஒன்று நினைவில் தங்கிவிடுவது.

திருப்பதிக்குப் போன ஒருவர் பலமணி நேரம் வரிசையில் காத்திருந்து கடவுளைப் பார்த்து விட்டு வெளியே வந்தார். நல்ல பசியாக இருந்ததால் ஒரு புளியோதரைப் பொட்டலம் வாங்கிக் கொண்டார். பேருந்தில் ஏறிக் கீழே வந்து பொட்டலத்தைப் பிரித்தார். உள்ளே சோற்றோடு ஒரு எறும்பு. ஒரு நிமிடம் திகைத்துப் போனார்: இந்த மலையில் ஒரு படியாகக் கிடவேனா? தூணாக நில்லேனா? புல்லாக இருக்கமாட்டேனா? 'எம் பெருமான் பொன் மலையில் ஏதேனும் ஆகேனோ' என்று ஒருவர் உருகி உருகிப் பாடினாரே அவர்தான் இந்த எறும்பாகப் பிறந்திருப்பாரோ, அவரைத்தான் நான் கீழே எடுத்து வந்து விட்டேனோ, என்ன பாவம் செய்துவிட்டேன் எனப் பதறிப் போய் அப்படியே அந்தச் சோற்றுப் பொட்டலத்தை மறுபடியும் கால் நடையாய் மலையேறிப் போய் அங்கேயே போட்டுவிட்டு வந்தார் என ஒருவரைப் பற்றி பேராசிரியர் தொ.பரமசிவம் ஒருமுறை சொன்னார்.

பசி நேரத்திலும் கட்டெறும்பைப் பார்த்த போது அவருக்குக் குலசேகர ஆழ்வாரது பாட்டு ஞாபகம் வந்தது. அதன் பின் எறும்பைச் சாதாரண எறும்பாக எண்ண முடியவில்லை. நல்ல இலக்கியம் இப்படியெல்லாம் இம்சிக்கும் என்று படித்தேன்.

அதே போலத்தான், யாத்ராவின் கவிதைகளும். எதைப் படித்துக் கொண்டிருந்தாலும் குறுக்கே வந்து (கவி) தை தை என்று குதித்து நிற்கிறது.

ஐயாயிரம் மைல்கள்

காற்றாக ஆதல்
நகரும் அகவை

இவை மூன்றையும் நான் தந்திருக்கிறேன். மிகுதியை நீங்களே தேடி எடுங்கள் இங்கே.
=========================

அதே போல அருட்பெருங்கோ. என்றோ எங்கோ படித்திருக்கிறேன். எனக்கு லிங்க் நினைவில்லை. ஆனால் வரிகள் மட்டும்...

ஆறு மணிக்கு வரச்சொன்னால்
ஆறு மணிக்கே வந்துவிடுவதா
காத்து இருப்பவனுக்குத்தான்
அதன் சுகம் தெரியும்.

“எப்போதென்னைக்
காதலிக்க ஆரம்பித்தாய்?”
எத்தனை முறை
கேட்டாலும் உதட்டுப் பிதுக்கலே பதிலாய்…
எப்போது மலர்ந்தோமென
எந்த மலருக்குதான் தெரிகிறது?

=========================

கோவி.கண்ணனின் கொலைவெறி கவுஜையும் இங்கே பார்க்க. (நேயர் விருப்பம் by my beloved Bhaskar).

=========================
கிணறு வெட்ட பூதம்...! -- இதை படித்து நொந்தேன். ஆளுமை உள்ளவர்களே...ஏதாவது செய்யுங்க ப்ளீஸ்.



.

இரகுவீர கத்யம் - ஒரு பார்வை

சிவனும் அம்புய மலரில் அயனும் இந்திரை கொழுநன்
அவனும் வந்திட உதவும் அரி எனும் பிரமம் அது
துவளும் அஞ்சன உருவு தொடரு செங் கமல மலர்
உவமை கொண்டு இதில் ஒருவன் உலகில் வந்ததுகொல்
(கம்பராமாயணம், அனுமபடலம்)

"பல்லாண்டு" பாடிய பெரியாழ்வாரைப் போல, இராமனை நாம் தெய்வமாக பார்த்தால் தெய்வம். மனிதனாகப் பார்த்தால் மனிதன். அவன் அவதாரம், மனிதர்களாகிய நாம் எப்படிப் பார்க்கிறோமோ அப்படியே பார்க்கிறவர்களுக்கு தகுந்த வகையில் ஒரு உயர்வுத் தன்மையை எடுத்து வைக்கிறது. ராமாயணத்தில் ராமன் மட்டும் அல்ல, அதில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு தர்மத்தை எடுத்து நடத்திக் காட்டுகிறார்கள்.

“நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி!” என்று விஸ்வாமித்திரர் தசரதனிடம் 16 வயது நிரம்பாத பாலகனான இராமனை – கரிய செம்மலை தா! என்று கேட்பதில் தொடங்குகிறது, இராமனுக்கு வாழ்வின் சவால்கள். ஒவ்வொன்றிலும் அவனுக்கு வெற்றியே.

நல்லவனாக இருப்பது மட்டும் போதாது, வல்லவனாகவும் இருக்க வேண்டும் என்று எடுத்துக்காட்டியது ராமாயணம்.

மஹாதீ⁴ர தௌ⁴ரெயா! (மகாவீர வைபவம்(2))

மஹாதீ⁴ர என்றால் மிகுந்த தைரியத்தை உடையவன், தௌ⁴ரெயா! – துணிச்சல் மிகுந்த வீரர்களுள் முதன்மையானவன்!

தான் நாடு நகரம் அனைத்தும் அழிந்த போதும், தன் தந்தை, தம்பிகள், தன் சொந்த பிள்ளைகள் என்று உறவுகளையெல்லாம் பிரிந்தும் இழந்தும் விட்ட போதும் இராமன் பின் வாங்கவில்லை.

உடலில் எத்தனை வலிமை இருந்தாலும் மனதில் அடிபட்டால் தளர்ந்து போகும். பாரதத்தில் துரோணாசார்யரை அவரது பிள்ளை ‘அசுவத்தாமன் இறந்தான்‘ என்று சொல்லி மனக்கலக்கம் அடையச் செய்து வென்றான் அர்ச்சுனன். பெரும் வீராதி வீரனாக இருந்தாலும் மனச்சோர்வு அடையும் போது உடலும் தளர்ந்து போய் விடுகிறது.

சிதை பெரிதா? சிந்தை பெரிதா “சிதை உயிரற்ற சடலத்தைத் தான் எரிக்கிறது. சிந்தையோ (கவலையோ) உயிருள்ள உடலையும் எரித்து விடுகிறது. ”

ராமாயணத்தை வெறும் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே எழுந்த போராட்டம் என்றும் ஒதுக்கி விட முடியாது. வாழ்க்கையின் மர்ம சுழற்சியில் தர்மத்துக்கும் தர்மத்துக்குமே போராட்டம் வந்து விடுகிறது.

சொன்ன சொல்லைக் காப்பாற்ற பெற்ற மகனைக் காட்டுக்கு அனுப்புவதா அல்லது அதை விடுத்து ராஜநீதிப்படி நல்லவனான மகனை அரசமர்த்துவதா?

தந்தை சொல்லைக் காப்பாற்றுவதற்காக காட்டுக்கு செல்வதா அல்லது தர்ம சாத்திரங்கள் சொன்னபடி இறந்து போன தந்தைக்கு ஈமக்கடன்களை தலைப்பிள்ளையாக இருந்து செய்வதா?

ஏங்கி தவித்து அடைந்த மனைவியை சேர்ந்திருப்பதா அல்லது அதே அரசநீதிப்படி மனைவியை துறந்து நேர்மையை நிலை நிறுத்துவதா?

என்று வெவ்வேறு விதமான தர்மங்கள் எல்லாமே ஒவ்வொரு வகையில் நல்ல நோக்கத்தைக் கொண்டிருந்தாலும் எதை பின்பற்றுவது என்ற குழப்பங்கள் எழுந்து அதில் நமக்கு வழிகாட்டுதலாக நல்ல எடுத்துக்காட்டுகளை அள்ளித்தருவது ராமாயணம் என்னும் இந்த மஹா காவியம்!

பக்தியே வடிவாக அனுமன், சேவையே வடிவாக இலக்குவன், கருணையே வடிவாக சீதை, அநேகம் பேர் சொல்ல மறந்த, சொல்லத் தவறிய ஊர்மிளையின் தவம், விரகம் மற்றும் உண்மையானத் தியாகம் (உண்மையில் எனக்கு சீதையை விட ஊர்மிளை மேல் தனி மரியாதை உண்டு), வேதம் காட்டிய தர்மத்தின் இலக்கணமாக இராமன்.

பரந்து விரிந்த பாரத நாட்டில் ஓரிடத்திலிருந்து சில நூறு மைல்கள் பிரயாணம் செய்தோமானால் மக்கள் பேசுகிற மொழியே மாறிப்போய்விடும். ஒவ்வொரு மொழியும் தனித்தனியாக அடையாளங்களைக் கொண்டு புரியவே புரியாது. ஆனால் “ராமா” என்ற ஒற்றை மந்திரம் இமயம் முதல் குமரி வரை எல்லோருக்கும் புரியும்!

அனாயேனம் ஹரிஸ்ரேஷ்ட தத்தம் அஸ்யா அபயம் மம: விபீஷனோவா சுக்ரீவ யதி வா ராவண ஸ்வயம் (வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம்)

விபீஷண சரணாகதியின் போது, விபீஷணனை ஏற்க வேண்டாம் என்று தடுக்கும் சுக்ரீவனிடம் "என்னை அண்டி விபீஷணன் என்ன அந்த ராவணனே வந்து சரணாகதி செய்தாலும், அவனையும் காப்பேன்" என்று ராமன் சொல்கிறான்.

கடைசியில் இராவணன்
‘தம்மந்யே ராகவம் வீரம் நாராயணம் அநாமயம்!‘
என்று "இந்த வீரன் – இராகவன், உண்மையில் அந்த நாராயனே" என்றும் ஒப்புக் கொள்கிறான்.

வேதாந்த தேசிகர் சம்ஸ்க்ருதத்தில் இயற்றிய மிக கம்பீரமாக, ஆனால் சுருக்கமாக இயற்றப்பட்ட காவியம் தான் மஹா வீர வைபவம் அல்லது, ரகுவீர கத்யம்.

'பத்யம்' என்பது கவிதை; கத்யம் உரைநடை. இரண்டும் கலந்து அங்கங்கே தெளித்தார்ப் போல இருக்கும் அமைப்பு ‘சம்பூ’. போஜனின் சம்பூ ராமாயணம் புகழ் பெற்றது. இவை எல்லாம் வெண்பாவிற்கான இலக்கணமும், புதுக்கவிதையின் வீச்சும் கொண்ட ஒரு ஒட்டு மாம்பழம்.

கத்யம் என்பது சம்ஸ்க்ருதத்தில் உரை நடை வடிவில் இயற்றப்படும் காவியம் ஆகும். இதில் ஓசை நயம் மிகுந்து சொல்வதற்கு மிக அழகாக இருக்கும். இதற்கு இணையாக தமிழில் வசன கவிதையை ஒப்பிடலாம்.

சரியானபடி உச்சரித்தால், வார்த்தை லயத்தில் ஒருவித அதிர்வலை (vibration) உண்டாகி, வார்த்தைகளின் உணர்ச்சியும் மனதிற்குள் எழும் - இது சமஸ்கிருத மொழியின் சிறப்பு மட்டும் அல்ல - எழுதியவரின் திறமையும் தான் வெளிப்படுகிறது.

இங்கே கேட்டு மகிழுங்கள். மிக கம்பீரமான இப்பாடலை தெளிவான சமஸ்கிருத உச்சரிப்புக்கு, சுந்தர் கிடாம்பி போன்றவர்களின் சேவையால், இதை கேட்டு மகிழும் பேறு நமக்கு கிடைத்திருக்கிறது.

வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும்
நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

ஆம், இவற்றைக் காப்பது நம் கடமை ஆகிறது.

நான் படித்து அறிந்து, அதிசயித்து மகிழ்தவைகளை, முடிந்த வரை பகிர்ந்து கொள்கிறேன். இன்னும் தேடிக்கொண்டே இருப்பேன்.



.

மூன்று கேள்விகளும் ஒரே ஒரு பதிலும்

என்னுடைய இந்தக் கவிதை படித்த நேசமித்ரன், கோபி, மற்றும் அகநாழிகை வாசு கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறவே இந்தப் பதிவு.

நன்றி வாசு, கோபி, நேசமித்ரன்.

நேசமித்ரன் பின்னூட்டத்தில் குறிப்பிட்ட அவ்வரிகள் சமஸ்கிருத மொழி, பகவத் கீதையில், நான்காவது அத்தியாயத்தில் வரும் 24வது சுலோகம்.

ப்ரஹ்மார்ப்பநம் ப்ரஹ்ம ஹவிர்
ப்ரக்மாஞு ப்ரஹ்மணா ஹுதம்
ப்ரக்மைவ தேன கந்தவ்யம்
ப்ரஹ்ம கர்ம ஸமாதினஹ.

இறைவனுக்கு (ப்ரஹ்மா) இடப்பட்டவை எல்லாமே பிரம்மன்தான்,
இறைவனால் இறைவனுக்கு அக்னியில் இடப்படும் ஹவிசாக அளிக்கப்படும் (ஆஹுதம்-அளித்தல்) பிரம்மன்தான். அந்த அக்னியும் பிரம்மன்தான்.
(நெருப்பில் இடப்பட்ட நிவேதனங்கள்/பலி - ஹவிஸ் எனப்படும்)
எவன் எல்லா உயிரிலும் இறைவனைப் பார்க்கிறானோ,
இறைவனாய் கருதி மற்ற உயிர்களின் நன்மைக்கு மட்டும் செயல் படுகிறானோ (கர்மா-செயல்) அவன் மட்டுமே இறைவனை அடைய முடியும் (ஸமாதின:)

நான் ஓதுகிறேன் உலகம் உய்ய
ஓதுவதால் தீரவில்லை எம் தாகம்,
தாகம் தீராது, நடக்கிறது நிதம்
ஒரு ஊமைச் சிலைக்கு
அபிஷேகம்! அதையேதான்
பருகுகிறார் எம்மக்கள்.
உணவெல்லாம் ஹவிசாக..
பட்டாடைப் படையலிட்டு
எறியுங்கள் ஹோமத் தீயில்
நன்கு எரியட்டும் பசித்தீயில்
என்னுடல், என் ஆன்மா
என் மனம் இவையெல்லாம்...


இந்தப் பத்தி கவிதையோடு ஒட்டாமல் இருக்கிறது என்று சொன்னார்கள். இந்தப் பத்தியில் நான் சொல்ல வந்தது என்னவென்றால் நாமெல்லாம் (நம்மில் பலர்) ஒரு வாய் சாப்பிடக்கூட நேரம் இல்லாமல், குழந்தைகள் மற்றும் குடும்பத்தோடு பேசக் கூட நேரமில்லாமல், ஆத்ம வஞ்சனை செய்து கொண்டு, எதை தேடி அலைகிறோம்.

ஒரு பிச்சைக்காரன் நேரடியாய் பிச்சை கேட்கிறான். அறிவை அடகு வைத்து ஞானப் "பிட்சை" அளித்து நாம் பணம் (ஊதியம்) பெறுகிறோம். சும்மா வாயால் தெய்வம் தெய்வம் என்று சுலோகங்கள் ஓதுவதும், பூஜைகள் செய்வது மட்டும் வழக்கமாக்கிக் கொண்ட நாம், அடுத்த மனிதரின் நிலையை பற்றிய நினைத்துக் கூடப் பாராத அளவுக்கு மனத்தால் ஏழையாய் இருக்கிறோம்.

மனிதனே இறைவன் என்று பரமாத்மா கிருஷ்ணன் அறிவுறுத்தியதை, நாம் நம் சௌகரியத்துக்கு, எப்போதும் போல, மாற்றிக் கொண்டு, விரதம் என்ற பெயரில் பட்டினி கிடந்தும், பூஜை என்ற பெயரில் மலர்களைக் கொன்றும் வருகிறோம். உண்மையில் விரதம் என்றால் celibacy/abstinence, அதாவது - காமம், குரோதம், ஆசை, வெறுப்பு ஆகி உணர்வுகளில் இருந்து மனத்தால் விலகி இருத்தல். பூஜை என்றால் குறித்து இருத்தல்-அதாவது, தெளிந்த நோக்கம் மற்றும் நேரான பார்வை கொண்டு நம் இலட்சியம் குறித்து இருத்தல் என்பதே ஆகும்.

ஆனால், நாமோ மாறாக, விரதம் என்ற பெயரில் நம் உடலையும், உறவுகளின் அன்பை மறந்து மனதையும், நோக்கமில்லா ஒன்றன் பின் ஓடி நம் ஆன்மாவையும் வஞ்சிக்கிறோம்.

மனிதனே இறைவன், அவன் மற்ற உயிர் ஒன்றிலும் இறைவனைப் பார்க்கும் போது, அவன் மற்ற உயிரிடமிருந்து மாற்றாக அன்பெனும் பேறு பெற்று இறை நிலை அடைகிறான்.

அன்பின் நேசமித்ரன். நாம் தான் ஏற்கனவே "பிரம்ம" என்ற இடத்தில் கார்பனை நிரப்பி விட்டோமே???? Science-சில் ஏதும் human மிச்சம் இருக்கிறதா என்ன?


.

கேட்காத பிட்சை

டி கே பட்டம்மாள் - இசையின் பைரவி

பிரபல கர்நாடக இசை மேதையும், இசைத் திலகம் எம்.எஸ். சுப்புலட்சுமி, எம்.எல். வசந்தகுமாரி ஆகியோருடன் இணைத்து போற்றப்பட்டவருமான முதுபெரும் இசைக்கலைஞர் டி.கே. பட்டம்மாள் காலமானார். அவருக்கு வயது 90.


அவருக்கு என் பணிவான நமஸ்காரங்களை அஞ்சலியாக்குகிறேன்.

====================

1919ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி காஞ்சீபுரம் தாமல் கிருஷ்ணசாமி தீட்‌‌சிதருக்கும், காந்திமதிக்கும் பிறந்த பட்டம்மாளின் இயற்பெயர் அலமேலு. அவருடைய தந்தையார் பட்டு என்று அழைத்ததே பிறகு அவுருடைய பெயராக நிலைத்தது என்று கூறுவர்.

தனது சகோதரர்கள் டி.கே. ரங்கநாதன், டி.கே.ஜெயராமன் போல இவரும் இளம் வயதிலேயே இசையில் சிறந்து விளங்கினார். துவக்கத்தில் பக்திப் பாடல்களை மட்டுமே பாடி வந்த பட்டம்மாள், பிறகு முறையாக இசையைக் கற்றார். தனது 10வது வயதிலேயே வானொலியில் பாடினார்.

13வது வயதில் சென்னை ரசிக ரஞ்சனி சபாவில் இவரது இசை அரங்கேற்றம் நடந்தது. அதற்குப் பிறகே பட்டம்மாள் சென்னைக்கு குடியேறினார்.

பைரவி இராகத்தில் இவரைப் போல் பாட யாருமில்லை என்ற அளவிற்கு தனிப் புகழ் பெற்றார்.

இன்றைக்கு உச்ச ஸ்தாயில் பாடும் பெண் இசைக் கலைஞர்களுக்கெல்லாம் முன்னோடி டி.கே.பட்டம்மாள்தான் என்று கூறுவார்கள். இவருடைய பக்திப் பாடல்களும், பாரதியாரின் விடுதலைப் பண்களை இவர் பாடியதும் ரசிகர்கள் இன்றும் மறக்காதவையாகும்.



.

இதில் நீ எது?

இதய நாற்காலியில் இருந்த ஆணிகள்

ஏ கொசுவே! என்னை கடித்தாய் நீ!
அது உன் குணம்!
உன்னை அடிக்க முடியாமல்
நீ கடித்த இடத்தை பளீரென
நானே அடித்துத் தவிக்கிறேன்!
நீ தப்பித்ததன் காரணம்
பறந்து போய் விட்டதால் மட்டுமே என
கர்வப் படாதே! நீ திமிர் வளர்க்கும்
உன் உடம்பில் என் இரத்தம்!
===============================
உன்னை யாரும் கவர்ந்து சென்று விடக்கூடாதென
தினமும் தினமும் இரவில் வருவேன்
நீ இருக்கும் தெருவிற்கு.
whistle-லும் அடிப்பேன் சத்தமாய்
உன் வீட்டு வாசலில் நின்று.
பிறகு பெருங்குரலெடுத்து கத்தி
அழைப்பேன் உன்னை நான்
"watchman வந்திருக்கேன்மா!"
==================================
என் இதயம், kidney, liver எல்லாம் நீயே
நான் தினம் தினம் மூழ்கும் அன்பெனும் river நீயே
என் வாழ்வில் இனிமேல் forever நீயே
நேரம் கெட்ட நேரத்தில் வரும் fever நீயே
===================================
ஏதும் காலடி ஓசை கேட்கும் போதெல்லாம்
அது நீதான் என்றே நம்புகிறேன்
காற்று இலேசாய் சலசலக்கும் போதெல்லாம்
அது நீதான் என்றே நம்புகிறேன்
மல்லிகை மணம் வீசும் போதெல்லாம்
அது நீதான் என்றே நம்புகிறேன்
கல கலவென்ற சிரிப்பொலி கேட்டால்
அது நீதான் என்றே நம்புகிறேன்.
எனக்கு நீ ஒரு (செல்லப்) பேய்!!!
============================================
என் இதயத்தை மட்டும் தான்
திருடி என்னை காலி செய்தாய்
என்றே நான் நினைத்தேன்
என் வீட்டுக்கு நீ வரும் வரை!!!
============================================



.

பிரளயம் வேண்டாம்

கனவு

don't break the rules...

நம் வீட்டுப் பெரியவர்கள் ஏற்படுத்திய கட்டுப்பாடுகள், சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் உடைக்க விரும்பும் நாம், உடைத்து வெளியேறிவிட்ட நாம், நமக்கும் அடுத்த சந்ததி, நாம் மதிக்கும் சில சம்பிரதாயங்களை உடைப்பதில் நமக்கு ஏன் வருத்தம் ஏற்படுகிறது?

இந்த மாற்றங்கள் எல்லாம் ஒரே இரவில் வந்து விடவில்லை.

"நீயாவது வெளியே போய் சாதி" என்று எள்ளுப்பாட்டி கொள்ளுப் பாட்டியிடம் சொல்லி வரும் தலைமுறைகளின் தாய்மார்கள் தன்னை விட தன் குழந்தை பெரியதாக சமூகத்தில் மதிக்கப் படவேண்டும் என்ற ஆதங்கத்தின் ஆசிகளோடு வெளியேறி வந்தவர்கள் சரி வர வழிநடத்தப் படாமல், பாதை மாறி, இன்று தரம் இல்லாத ஒன்றை கலாச்சாரம் ஆக்கி கொண்டிருக்கிறோம். டிவி திரையில் தோன்றும் நிழல் புகழ் அவர்கள் கண்களை மறைக்கிறது. இதற்கு யார் காரணம்? நாம் தானே.

அட. உன் பையன் இன்னிக்கி "டப்பா" டி வீ ல சூப்பர் ஆக பாடினான். என்ற முதல் வாழ்த்து போதையாகிறது. பின்பு, one is too many, and thousand is not enough என்கிறா மாதிரி, இது தீராத ஆசை ஆகிறது. ஏணியில் ஏறிய பின் கீழ் இறங்கத் தெரியாத குழந்தை போல தவிக்கிறது மனம். அல்லது, இறங்க விடாமல் அந்தப் புகழ் ஆசை அவர்களை அந்தரத்தில் தொங்க விட்டிருக்கிறது.

அரைகுறை ஆடைகளை ஒரு கலாச்சாரமாக ஏற்ற பிறகு, இன்று spencer plaza-வில் அல்லது சத்யம் தியேட்டரில், பெசன்ட் நகர் பீச்சில், ஈ சி ஆரில், ஆண்களும் பெண்களும் அணிந்து செல்லும் மரியாதை குறைவான உடைகள் நமக்கு சகஜமான ஒன்றாகி விட்டன. நமக்கு அது தவறென்றும் தெரியவில்லை.

வெஸ்டர்ன் வெஸ்டர்ன் என்று நாம் அஸ்தமனத்தை நோக்கி பயணிக்கிறோம். அவர்கள் வேண்டாம் என்று வீசும் குப்பைகளை தேடி தேடி எடுத்து நம் வீட்டு கூடத்தில் வைத்து அழகு பார்க்கிறோம். என்ன சொல்ல?

நம் வீட்டு பெரியவர்களுக்கு, மது அருந்துவது, ஒரு பாவச் செயலாக இருந்தது. இப்போது, மது அருந்துபவன் அடுத்தவனுக்கு தொல்லை இல்லாமல் இருந்தால் போதும் என்று சொல்லும் மனபக்குவம் பெற்று விட்டோம்.

திடீரென்று பெட்ரோல் விலை நாலு ரூபாய் ஏற்றினாலும் நமக்கு சகஜமாகி விட்டது. அதன் எதிரொலியாக கீரை முதல் எண்ணெய் வரை விலை ஏறி வரும் மாத பட்ஜெட் எகிறும் போதும் ஏற்றுக் கொண்டு செல்கிறோம்.

கெட்ட வார்த்தைகள் பேசுவது மட்டமானதாக நினைக்கப்பட்டது. ஆனால், சர்வ சாதாரணமாக இன்று எங்கும் அவற்றை கேட்க முடிகிறது. தொலைக் காட்சியை தப்பித் தவறி ஏதேனும் நல்ல நாட்களில் போட்டு விட்டால், பேச்சாளர்கள் ஒருவருக்கொருவர் குடும்ப சமாச்சாரங்களையும், தம் மனைவி அல்லது கணவரை பொதுச் சபையில் ரங்கமணி, தங்கமணி என்று கிண்டல் செய்து கொண்டும் ஓர் அசட்டு பட்டிமன்றம், இல்லை என்றால் நமீதா-வின் புராணங்கள், சீரியல்களில் சராமாரியாக ஒருவர் குடும்பத்தை மற்றவர் அழிக்கவும், மண்ணோடு மண் ஆக்கவும், வேறு வேலையே இல்லாத மாதிரி மாற்றான் மனைவியையோ, மாற்றாள் கணவனையோ அபகரிக்க ஒருவர் திட்டம் போட்டுக் கொண்டே இருப்பார். இதெல்லாம் நமக்கு சகஜம் ஆகி விட்டது.

நாளைக்கு வேலை நம் கையில் இருக்கிறதா இல்லையா என்ற திரிசங்கு சொர்கத்தில் வாழும் நாம் ராமன் ஆண்டா என்ன ராவணன் ஆண்டா என்ன, என் பிழைப்பு ஓடினால் போதும் என்ற நிலையில் தான் இருக்கிறோம்.

மடிசார் கட்டியபடியே புழுக்கத்தில் வெந்த என் கொள்ளுப் பாட்டி என் பாட்டிக்கு ஆறு கஜத்தின் சுதந்திரத்தையும், என் பாட்டி என் அம்மாவுக்கு சுடிதாரையும், என் அம்மா எனக்கும் ஜீன்சையும் தந்தார். நான் என் மகளுக்கு எதுவும் தரும் வரை என் அனுமதிக்காகக் கூட அவள் காத்திருக்கப் போவதில்லை.

விரிசல் விழுந்த ஆரம்பம் இன்று படு பாதாளத்திற்கு நம்மை இட்டுச் சென்று கொண்டிருக்கிறது. இவற்றையும் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு மரத்து விட்டது மனம்.

கட்டுப்பாடுகளும் நியமங்களும் நம்மை நல்லப் பாதையில் இட்டுச் செல்லவே அன்றி, அவை நம்மைக் கட்டுப்படுத்துவது இல்லை. நீங்கள் கட்டப்பட்டு இருக்கும் போது உங்கள் சந்ததிகளுக்கும் அந்த கட்டின் மகிழ்ச்சியைக் கூறுங்கள். pass on the happiness.

இவ்வளவு சுதந்திரம் ஏனோ எரிச்சல் தரும் ஒன்றாக இருக்கிறதே?

கட்டுக்குள் கட்டப்பட்டு இருப்பதில் தவறென்ன இருக்கிறது. எல்லாம் என்னிஷ்டம் என்று உங்கள் மனம் சொன்னால், அதனிடம் உங்கள் மகள் அல்லது மகன் தவறு செய்யும் போது துடிக்ககவும் கூடாது என்றே "கட்டாயமாய்" சொல்லிவையுங்கள். அவர்கள் போக்கும் இரசிக்கும் அளவுக்கு நம் மனம் மரத்தே போய் விடும்.



.

மனு நீதியில் சமூக வேறுபாடு மற்றும் பெண்ணடிமைத்தனம் - ஒரு பெண்ணின் பார்வை


பெண்ணடிமைப்பட வேண்டும் என்றும் சமூக வேறுபாடுகளையும் மனுநீதி (மனுஸ்ம்ரிதி) வலியுறுத்துகிறதா?

சரியான பார்வையில் மனு ஸ்மிருதி: எந்த விஷயத்தையும் பார்க்க வேண்டிய கோணத்தில் பார்க்காமல், அதைத் தவறான முறையில் அணுகுவதே நாம் காலம் காலமாய்ச் செய்து வந்த தவறாக இருக்கிறது. மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன், நம் வேதங்களும், புராணங்களும் கிடைக்கதற்க்கரிய கலைப் பொக்கிஷங்கள். மனிதனாக, மனுஷியாக பிறந்த ஒவ்வொரு ஜீவனும் படித்தறிய வேண்டிய ஒன்று.

ஓரு குலத்துக்கொரு நீதி என்பதுவே மனுநீதி என்று ஓசை நயத்திற்காகப் பேசிப் பேசி, சமுதாயத்தைப் பிளவு படுத்தி, மக்களிடையே ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் பழங்காலத்துப் பிற்போக்கான சட்ட நூல்தான் மனு நீதி என்கிற எண்ணம் நம்மில் பலரிடையே நிச்சயமாகிவிட்டிருக்கிறது. விருப்பு வெறுப்பின்றி, முன்கூட்டியே ஓர் அபிப்பிராயத்துடன் அணுகாமல் ஆராய்ந்து பார்த்தால்தான் மனு நீதி என்கிற மனு ஸ்மிருதி வகுத்திருக்கும் விதிமுறைகள் எத்தகையன என்னும் முடிவுக்கு வரமுடியும்.

முதலில் ஸ்மிருதி என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆதியிலிருந்து தொடர்ந்து வருபவை ஸ்ருதி என்கிற செவி வழியாகத் தலைமுறை தலைமுறையாய் மிகுந்த மரியாதையுடன் ஏற்கப்பட்டு வரும் கோட்பாடுகள்.

நான்மறைகளும் அவற்றின் அடியற்றி வரும் உபநிடதங்களும் இவ்வகையைச் சேர்ந்தவை. பகவான் கிருஷ்ணன் அருளியதாக அறியப்படும் பகவத் கீதையையுங்கூட ஸ்ருதி என்று கூற இயலாதுதான். ஆனால் போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு வாய்மொழியாக அது உபதேசிக்கப்பட்டமையால் அதையும் ஸ்ருதியெனக் கொள்வதில் தவறில்லை எனக் கருதுவோர் உண்டு.

ஸ்மிருதி எனப்படுபவை ஏட்டில் பதிவு செய்யப்பட்ட விதிமுறைகள்.

வேத காலத்திற்குப் பின் வெகு காலங் கழிந்த பிறகுதான் இவை உருவாயின. பொதுவாக தர்ம சாஸ்திரங்கள் எனக் கருதப்படுபவைதாம் ஸ்மிருதி என்று அழைக்கப்படுகின்றன.

மாறும் அவ்வாறு மாற்றங்கொள்ளாமல் சில விதிமுறைகள் முரண்டுபிடித்தால் மூலாதாரமான ஸ்ருதிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து, ஸ்ருதிகள் என்ன சொல்கின்றனவோ அவற்றை ஏற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட ஸ்மிருதியின் கூற்றைத் தள்ளிவிட வேண்டும் என்று தர்ம சாஸ்திரங்களான ஸ்மிருதிகளே அறிவுறுத்தியிருக்கின்றன. ஸ்மிருதிக்கும் ஸ்ருதிக்கும் ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு காணப்படுமானால் ஸ்ருதியில் சொல்லப்பட்டிருப்பதைத்தான் சரியென்று கொள்ளவேண்டும் என மனு ஸ்மிருதியும் தனது இரண்டாவது சருக்கத்தின் பனிரெண்டாவது, பதிமூன்றாவது செய்யுள்களில் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

ஆக, சமுதாயத்திற்கு ஸ்ருதிகளான வேதங்கள்தாம் வழிகாட்டும் அறநெறிகள். மனு ஸ்மிருதியே ஒப்புக்கொண்டுள்ளவாறு, ஸ்மிருதிகள் இரண்டாம் பட்சந்தான். மனு நீதி எனப்படும் மனு ஸ்மிருதியானது சமுதாயத்தின் ஒரேயரு ஸ்மிருதியல்ல. மொத்தம் உள்ள பதினெட்டு ஸ்மிருதிகளுள் ஒன்றுதான் அது. ஒரு தனி நபர், ஒரு குடும்பம், ஒரு சமுதயம், ஒரு தேசம் ஆகியவை கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க விதிகளை, தான் எழுதப்பட்ட காலத்திற்கேற்ப வகுத்துள்ளது, மனு ஸ்மிருதி. விண்ணியல், மருத்துவம் முதலான விஷயங்கள் குறித்தும் அது பேசுகிறது.

மனு ஸ்மிருதி எப்பொழுது எழுதப்பட்டது என்பதற்கு வரலாற்றுப் பூர்வமான ஆதாரம் ஏதும் இல்லை. எந்தக் கால கட்டத்தில் அது ஹிந்து சமூகத்தால் வார்த்தை பிசகாமல் அனுசரிக்கப்பட்டது என்பதற்கும் ஆதாரம் இல்லை.

ஸ்ருதிகளான வேதங்கள் தோன்றி நீண்ட நெடுங்காலம் கழிந்த பிறகுதான் ஸ்மிருதிகளுள் ஒன்றான மனு ஸ்மிருதி தோன்றியது. மனு ஸ்மிருதிக்குப் புராண அந்தஸ்தை அளிப்பதற்காக அதனை இயற்றியவர் மனு என்கிற ஆதி புருஷன் என்று கற்பிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் பதினான்கு மன்வந்தரங்கள் கொண்டது ஒரு கல்ப காலம் என்றும், ஒவ்வொரு மன்வந்தரத்திற்கும் ஒரு மனு ஆதியானவர் என்றும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. தற்சமயம் நடப்பது ஏழாவது மன்வந்தரம். இதன் ஆதிபுருஷர் வைவஸ்த மனு என்கிறது, புராணம். இந்த மனு எழுதி வைத்ததுதான் மனு ஸ்மிருதி என்று எவரும் கூறினால் அதை ஏற்பது எளிதல்ல.

வரலாற்றுக் கண்ணோட்டப்படிப் பார்த்தால் சுங்க வம்சத்துப் பேரரசர் புஷ்யமித்திரர் காலத்தில்தான் மனு ஸ்மிருதி என்கிற பெயரில் ஒரு சாஸ்திரம் எழுதப்பட்டது என்று ஒரு தரப்பினரால் கருதப்படுகிறது. ஆனால் இதற்கும் உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை. ஆக, புராதன வேத காலத்து ஹிந்து சமுதாயம் இந்த மனு ஸ்மிருதியை அனுசரித்திருக்க வாய்ப்பில்லை. மனு ஸ்மிருதி எழுதப்பட்ட காலம் கி. மு. முதல் நூற்றாண்டு என ஒரு கருத்து நிலவுகிறது.

மனு ஸ்மிருதியைப் பற்றிய பிரதான கருத்துகள் ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர்தான் வெளிப்படலாயின. இவை பெரும்பாலும் ஹிந்து சமய நம்பிக்கைகளையும் ஹிந்து சமூக நடைமுறைகளையும் இழிவானவை என நிறுவவேண்டும் என்கிற நோக்கத்துடன்தான் தெரிவிக்கப்பட்டன. மேலும் மனு ஸ்மிருதியின் மீதான கடுமையான விமர்சனங்கள் பெரும்பாலும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்துவிட்டுத்தான் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த மொழிபெயர்ப்புகள் ஐரோப்பியர்களால், அவர்களின் கண்ணோட்டத்திற்கும் புரிந்துகொள்ளும் ஆற்றலுக்கும் பயிற்சிக்கும் ஏற்பவே இருக்கும் என யூகிப்பதில் தவறிருக்காது.

மனு ஸ்மிருதியில் மொத்தம் 2031 செய்யுள்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு ஒழுக்க விதியை வலியுறுத்துகிறது. ஆனால் இந்த 2031 விதிமுறைகளும் எந்தக் கால கட்டத்திலேனும் ஹிந்து சமூகத்தால் பாரத தேசம் முழுவதும் ஒட்டுமொத்தமாகக் கடைப்பிடிக்கப்பட்டதாகக் கூறுவதற்கில்லை.

மனு ஸ்மிருதியை ஆதாரம் காட்டிப் பேசப்படுகின்ற விதிமுறைகள் பலவும் அவரவர் கண்ணோட்டப் படியான விளக்கவுரைகளேயன்றி நேரடியான மொழிபெயர்ப்புகள் அல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த தலை சிறந்த சமூக சீர்திருத்தத் துறவியும், ஆரிய சமாஜம் என்னும் அமைப்பை உருவாக்கியவருமான சுவாமி தயானந்த சரஸ்வதி மனு ஸ்மிருதிக்கு ஒரு விளக்கம் தந்துள்ளார்.

மனு ஸ்மிருதியின் செய்யுள்களிலேயே பல ஒன்றுக்கொன்று முரண்படுவதை அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார். இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது, ஒவ்வொரு கால கட்டத்திலும் அவ்வப்போதைய வாய்ப்புகளுக்கு இணங்க மனு ஸ்மிருதியில் இடைச் செருகல்கள் நுழைந்து விட்டிருக்கின்றன என்பதுதான். ஒன்றோடொன்று முரண்படும் விதிமுறைகளைக் கண்டறிந்து இன்றைய காலகட்டத்திற்கு எந்த விதிமுறைகள் பொருந்துகின்றனவோ அவற்றை ஏற்றுக்கொண்டு பொருந்தாதவற்றைப் புறக்கணிப்பதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும்.

எடுத்துக்காட்டாக, மனு ஸ்மிருதியின் இரண்டாம் சருக்கத்தின் 97-வது செய்யுள் கீழான குணவியல்புகள் உள்ளவர்கள் வேதமெய்ப்பொருளை அறியவியலாது என்று கூறுகிறது. பிறவியின் அடிப்படையில் பேசப்படாமல் குண நலன்களையே வலியுறுத்துவதாக இது இருப்பதால் இதனை ஏற்பதுதான் முறையாக இருக்கும்.

ஆண், பெண் என்கிற பேதமின்றி எல்லாக் குழந்தைகளையும் ஐந்து அல்லது எட்டாவது வயதிலாவது கட்டாயக் கல்வி பெறச் செய்வது பெற்றொருக்கு மட்டுமின்றி அரசுக்கும் நிர்வாக சபைகளுக்கும் கடமை யென்று ஏழாவது சருக்கத்தின் 152 வது செய்யுள் விதிக்கிறது. குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்யத் தவறுவது தண்டனைக்குரிய குற்றம் என்றே இச்செய்யுள் எச்சரிக்கிறது. எனவே பெண்களுக்குக் கல்வி அவசியமில்லை என விதிமுறை ஏதும் இருக்குமானால் முரண்பாடான அந்த விதியைத் தூக்கியெறிந்துவிடலாம்.

திருமணத்தைப் பற்றிப் பேசும்போது, தனது ஒன்பதாவது சருக்கத்தின் 90-வது செய்யுளில் ஒரு பெண்ணுக்கு உரிய பருவத்தில் தன் தகுதிக்கு ஏற்ற கணவனைத் தேர்வு செய்துகொள்ளும் உரிமையை மனு ஸ்மிருதி உறுதிசெய்கிறது. எனவே பாலிய விவாகத்தை அது வலியுறுத்துவதாகக் கருதத் தேவையில்லை.

திருமணப் பொருத்தம் என்பது மனப் பொருத்தம், குணவியல்புகளுக்கியைந்த கருத்தொற்றுமை, உடல் ஆரோக்கியம் ஆகியவைதான் என்று மனு ஸ்மிருதி கூறுகிறது. அவரவர் வகுப்பில் மணம் செய்துகொள்வது அவசியம் என்று கூறுகையில் இவற்றைத்தான் மனு ஸ்மிருதி வலியுறுத்துகின்றதேயல்லாமல் பிறவியின் மூலம் வருகின்ற வகுப்பைக் குறிப்பிடவில்லை.

பெண்களை மிக உயர்வாகப் போற்றும் பல செய்யுள்களை மனுஸ்மிருதியில் காணலாம். மூன்றாவது சருக்கத்தின் 62-வது செய்யுள் மனைவியைக் கணவன் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என விதிக்கிறது. மகிழ்ச்சியில்லாத மனைவி இருக்கிற குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்காது என்று மனு ஸ்மிருதி எச்சரிக்கிறது. பெண்களை தந்தைமாரும் சகோதர்களும், ஏன் கணவனுங்கூட வணங்கக் கடமைப்பட்டிருப்பதாக அது கூறுகிறது. பெண்களுக்குக் குடும்பங்களில் நல்ல உணவு, சிறந்த ஆடையாபரணங்கள் ஆகியவற்றை அளித்து மகிழ்விக்க வேண்டும் என்று மனு ஸ்மிருதி விதிக்கிறது. பெண்கள் மதிக்கப் படுகின்ற குடும்பங்களிலும் சமுதாயத்திலும்தான் சிறந்த மனிதர்கள் தோன்றுவார்கள் என்று மனு ஸ்மிருதி அறிவுறுத்துகிறது. பெண்கள் துன்புறும் நிலை இருக்கின்ற குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது என்று அது சொல்கிறது. பெண்களை மதிக்காத சமுதாயத்தில் எத்தனை நல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவற்றால் பயன் விளையாது என்கிறது, மனு ஸ்மிருதி. அதன் மூன்றாவது சருக்கத்தில் 55-லிருந்து, 59 வரையிலான செய்யுள்கள் பெண்கள் நலனையே பிரதானமாக வலியுறுத்துகின்றன.

தகப்பன் பெயர் இல்லையேல் தாயின் பெயரால் பிள்ளைகள் அறியப்படட்டும் என்று சொல்கிற நடைமுறை வேத கால சமுதயத்தில் இருந்திருக்கிறது. பெண்கள் ஆண்களோடு சரிசமானமாக அமர்ந்து தத்துவ விசாரங்களிலும் தர்க்கங்களிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள் என்பதற்கும் சான்றுகள் உண்டு. எனவே பெண்ணடிமை முறையும், பெண்களை அறிவார்ந்த சபைகளிலிருந்து விலக்கி வைக்கும் போக்கும் இடையில்தான் நுழைந்திருக்கக்கூடும் எனப் புரிந்துகொள்ள வேண்டும். இதற்குச் சமூக அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மனு ஸ்மிருதியில் அதற்கு ஏற்ற இடைச் செருகல்கள் உள்நோக்கத்துடன் நுழைக்கப்பட்டிருக்கலாம் என யூகிக்க முடியும்.

னு ஸ்மிருதியின் பத்தாவது சருக்கத்தில் உள்ள 65-வது செய்யுள் ஒரு சூத்திரன் பிராமணனின் நிலைக்கு உயர்வதும் அதேபோல் ஒரு பிராமணன் சூத்திரனின் நிலைக்குத் தாழ்வதும் சாத்தியம் என்று சொல்கிறது. (ஜாதியை குறிப்பிட்டு பேசுவதற்கு மன்னிக்கவும். யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் கூறப்படவில்லை). சத்திரியர், வைசியர் விஷயத்திலும் இது பொருந்தும் என்று அது மேலும் விளக்குகிறது. இதிலிருந்து பிறவியின் பயனாக வர்ணங்கள் அமைவதில்லை, குணநலன்களின் அடிப்படையில்தான் அவை நிர்ணயிக்கப்படுகின்றன என்று மனு ஸ்மிருதி வலியுறுத்துவதாகக் கொள்ளமுடியும்.

மேலும், பிராமணன் ஒரு குற்றம் இழைத்தால் அதற்கு மிக அதிகபட்சமாகவும், அதே குற்ற்றத்தை இழைத்த சத்திரியனுக்கு அதைவிடச் சிறிது குறைவாகவும் வைசியனுக்கு அந்தக் குற்றத்திற்கு மேலும் குறைவாகவும் சூத்திரனுக்கு மிக மிகக் குறைவாகவும் தண்டனை விதிக்க வேண்டும் என்று மனு ஸ்மிருதி நிர்ணயிக்கிறது. காரணம், பிராமணனாக அறிவு நிலையில் உயர்ந்திருப்பவன் தெரிந்தே குற்றம் இழைத்திருப்பான் என்று கொள்ளவேண்டும் என அது விளக்குகிறது. பிற பிரிவினரை ஓரளவுக்கே விவரம் தெரிந்தவர்களாகக் கருத வேண்டுமாதலால் அதற்கேற்பக் குறைவாகவும், சூத்திரன் தனது அறியாமையால் குற்றம் இழைத்திருப்பான் ஆதலால் மிக மிகக் குறைவாகவும் அதே குற்றத்திற்குத் தண்டணை விதிப்பதே பொருத்தம் என்கிறது, மனு ஸ்மிருதி.

மனு ஸ்மிருதியைப் பற்றிய விரிவான பிரஸ்தாபம் காலனியாதிக்க (colony) காலத்தில்தான் தலையெடுத்தது. குறிப்பாக ஹிந்து சமூகத்தைக் குறை கூறி, மேற்கத்திய நாகரிகமும் சம்பிரதாயங்களும்தாம் மேன்மையானவை என்று மனதில் பதிய வைப்பதற்குத்தான் அத்தகைய பிரஸ்தாபம் பயன்படுத்தப் பட்டது. இதற்குச் சான்றாக இங்கே பாருங்கள். ஆங்கிலக் கல்வியின் வழியாகத் தம் தாயகத்தின் கலாசாரத்தையும் நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் காணப் பழகியவர்களுக்கு காலனியாதிக்கக் கல்வியாளர்கள் மனு ஸ்மிருதி பற்றி வெளியிட்ட கருத்துகள்தாம் வேதவாக்காகவும் அமைந்துவிட்டன. அந்த அடிச்சுவட்டில் தொடர்ந்து நடப்பவர்களிடையே மனு ஸ்மிருதியைப் பற்றி ஒருதலைப்பட்சமான கருத்து நிலவுவது இயற்கைதான்.

புராணங்களையும் வேதங்களையும் முடிந்தால் படியுங்கள். நீங்கள் பல்லாயிரக்கணக்கான புத்தங்கங்கள் படித்திருந்தாலும், ஒரு தனி மனிதனாக ஒருவரை மேன்னிலைக்கு உயர்த்திக்கொள்ளவும், உயரிய சிந்தனைகள் பெறவும் அவை உதவும்.





..

இன்னிக்கு என்னாச்சு தெரியுமா....?

இன்னிக்கு என்னாச்சு தெரியுமா