கர்ணன் என் காதலன்

எப்படிச் சொல்வேன்!!! கர்ணா...நீ ரொம்பப் பாவம்டா (துளசிதளம் by துளசி கோபால்) என்ற பதிவு கொடுத்த ஆர்வம், என்னையும் கர்ணனை நினைக்க வைத்தது.

கர்ணா! நீ என் காதலன்! என்று ஒவ்வொரு முறை கர்ணனை பற்றிய வாசிப்பு வாய்ப்பு நேரும்போதும் நான் நினைத்துக்கொள்வேன். அந்த அளவுக்கு ஈர்ப்பான கதாபாத்திரம். சூழ்நிலையால் ஊமையாக்கப்பட்டு, மௌனக் கண்ணீர் வடித்தவன்.

கர்ணனின் பிறப்பு:

இளவரசி ப்ருதா (அதாவது குந்திதேவி) சூரசேனன் என்ற போஜ-யாதவ குல தலைவனுக்குப் பிறந்தவள். கிருஷ்ணனின் தந்தையான வசுதேவருக்கு சகோதரி முறையானவள்.

ஜராசந்தன் என்ற அசுரனால் துன்புறுத்தப் பட்டு, பதினெட்டு வகை பழங்குடியினங்கள் மேற்கு திசை நோக்கி இடம் பெயர்ந்தன. இதில், சூரசேனா, பத்ரகா, வோதா, சல்வா, பதச்சவா, சுஸ்தலா, முகுத்தா, குலிந்தா, குந்தி, சல்வாயனா, பாஞ்சாலா, கோசலா, மத்ஸயா, சன்யஸ்தபதா போன்ற அனைத்து குடியும் தப்பித்து இடம் பெயர்ந்தனர்.

குழந்தைபேறு இல்லாத குந்திபோஜன் என்ற அரசனுக்கு (குழுத் தலைவன்) தத்து கொடுக்கப்பட்டாள். ஒரு முறை துர்வாச மகரிஷி குந்திக்கு ஒரு மந்திரம் சொல்லி வரமளிக்கிறார், மேலும் அவளுக்கு எதிர்காலத்தில் இது உதவும் என்றே இவ்வரத்தை கொடுப்பதாகவும் சொல்கிறார். தாம் பெற்ற வரத்தை சோதிக்க,
சூரியன் மூலமாக பிறந்த கர்ணன், பிறப்பிலேயே பொன்னாலான கவச குண்டலங்களோடு பிறந்ததாக கூறப்படுகிறது. யாராலும் உடைக்கவே முடியாத இதை, அவன் தந்தையான சூரியதேவன் கர்ணனின் பாதுகாப்புக்காக கொடுத்ததாகவும் அறியப்படுகிறது.

ஆனால், கன்னித்தாயான குந்தியும் ஒரு தாதியும், தம் தவறை மறைக்க, ஒரு பெரிய கூடையில் குழந்தையை வைத்து, மூடி, மெழுகால் மூடியை அடைத்து, ஆக்வா என்ற நதியில் விடுகிறாள் (யமுனை) . நதியில் அலைகளால் அழைத்து செல்லப்படும் கர்ணன் இருக்கும் கூடை, கங்கை வழியாக கம்பா நதி இருக்கும் நகரங்களைக் கடந்து, பயணிக்கிறது. முடிவில் தேரோட்டியான அதிரதன் மனைவி இராதை
யை தாயாக்கி, கர்ணனை காலம் ஒரே ஒரு முறை மட்டும் கரை சேர்க்கிறது.

கரை சேர்ந்தானா கர்ணன்? காலம் இன்னும் அவனை எப்படியெல்லாம் அலைகழிக்கிறது? துவண்டு மருண்டு கர்ணன், மௌனி ஆகிறான். இந்த மௌனம் அவனே நிரந்தரமாக மௌனிக்கும் வரை நீடிக்கிறது. தலை குனிவுக்கு பயந்து குந்திதேவி செய்த ஒரு செயல், கர்ணனை வாழ் நாள் முழுதும் தலை குனிந்தே வாழச் செய்து, அவனை விதி போகும் இடமெல்லாம் துரத்துகிறது.

அவனை ளர்த்அதிரதன்-இராதை மற்றும் துரியோதனனைத் தவிர அவனை யாருமே போற்றியதில்லை. அவனுக்கு பரிவாய் இருக்கவில்லை. அவனை ஆதரிக்கவில்லை. யாருமே நண்பரில்லை. எத்தனை சாபங்கள் துரத்துகின்றன கர்ணனை? தோல்விகளே ஒவ்வொரு அடியிலும் அவனுக்கு பரிசாக கிடைக்கிறது. இருந்தாலும் அனைத்தையும் மௌனமாகவே ஏற்கிறான். கடைசி வரை, அவனை, அவன் சாரதியான (தேரோட்டி) சல்லியன் கூட, இகழ்ந்து, மனச்சோர்வுக்கு மட்டுமே ஆளாக்குகிறான். எல்லோருக்கும் கர்ணனைத் தெரியும். ஆனால், யாருமே அவனை மனதார ஏற்கவில்லை. கர்ணன் அர்ஜுனனை விட சிறந்த வீரன். மஹாரதி. தானப்பிரபு. ஆனால் சரித்திரம் அவனை பாடவில்லை. (உத்திரகாசியில், தேராதூனுக்கு அருகில் தியோரா என்றகிராமத்தில் கர்ணனுக்கு கோவில் கட்டப்பட்டிருக்கிறது)

பின்னாளில், குந்தி பாண்டுவை மணக்கிறாள். ஒரு முறை பாண்டு வேட்டையாடச் சென்றிருந்த போது, கிந்தம ரிஷி என்பவர் தம் மனைவியுடன் இருந்தபோது, மான் என்று நினைத்து, சப்தம் வந்த திசையில் அம்பு எய்தி, கொன்று விடுகிறான். இறக்கும் தருவாயில் அந்த ரிஷி சபித்துவிடுகிறார். இதனால்,
பாண்டுவுக்கு மனைவியுடன் உறவு கொண்டால், அவள் மடியிலேயே இறந்து விடுவான் என்றொரு சாபம் வருகிறது.

குந்தி தனக்கு கிடைத்த வரத்தால் (?) மந்திரம் சொல்லி, மூன்று மகன்களைப் பெறுகிறாள். யுதிஷ்டிரன் (தர்மதேவன் மகன் ), பீமன் (வாயுதேவன் மகன்), அர்ஜுனன் (இந்திரன் மகன்) பிறக்கிறார்கள். குந்தி, மாத்ரிக்கு (பாண்டுவின் இரண்டாம் மனைவி) இந்த மந்திரத்தை சொல்லித் தருகிறாள். இவளுக்கு அஸ்வினி குமாரர்களின் மகன்களாக நகுலன், சகாதேவன் இருவரும் பிறக்கிறார்கள்.


ஒரு நாள், பாண்டு தன்னிலை மறந்து, மாத்ரியுடன் உறவு கொள்கிறான். பாண்டு
தன் இரண்டாவது மனைவியின் மடியில் இறக்கிறான். இதற்கு தானே காரணம் என்று கருதி, மாத்ரியும் மரிக்கிறாள். பாண்டவர்கள் ஐவராகி, குந்தியால் வளர்க்கப் படுகிறார்கள்.


இவர்கள் வளர்ந்த பிறகு, ஒரு போட்டியில், கர்ணனுக்கு அர்ஜுனனுக்கும் சிறந்த வில்லாளன் யார் என்ற போட்டி வருகிறது. அர்ஜுனன் "தேரோட்டி மகன்" என்று கர்ணனை இகழ்கிறான். அப்போது, அர்ஜுனனுக்கு சமமான போட்டியாளனாக இருக்கும் கர்ணனை, துரியோதனன் அங்கத அரசனாக்குகிறான். கர்ணனின் அங்கலக்ஷணங்கள் மற்றும் கவச குண்டலங்களைப் பார்த்து, குந்திதேவி, அவனை தம் மகன் என்று அடையாளங்காண்கிறாள். குந்தி கர்ணனிடம் தானே அவன் தாய் என்ற உண்மையைக் கூறுகிறாள்.
கர்ணன் இதை நம்ப மறுக்கிறான் அப்போதும் கூட, அவனிடம் தன் தாய்மையை காட்ட அல்ல, அவனிடம் அர்ஜுனனுடன் போட்டியிட வேண்டாம் என்று கூறவே வருகிறாள். ஆனாலும், மிகுந்த முயற்சிக்குப் பின்பும், கர்ணன் அர்ஜுனனிடம் தோல்வி அடைகிறான். இருவரிடையே தீராத பகையுணர்வு தோன்றுகிறது.

===================================================================
கர்ணனின் பாத்திரம் போலவே, இன்னும் சில இடத்திலும், குறிக்கப்பட்டுள்ளது.
===================================================================
2340 BC - யில், அரபிக் பெனின்சுலா (Peninsula) பகுதிகளில் (கிழக்கு) Afro-Asiatic மொழியான செமிடிக் (Semitic) மொழி பேசும் அக்கட் (Akkad) வம்சாவளியினர் பற்றிய குறிப்புக்களில் கர்ணனுக்கு ஒப்பான ஒருவனின் (சார்கோன் என்பவன்) குறிப்புகளும் இருக்கிறது. அக்காடியர்கள், ஹீப்ரு குறிப்புக்களில், செமிடிக் என்ற மொழி பேசும் செமைட் (Semite) வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக குறிப்புகள் இருக்கின்றன. ஷெம் (Shem) நோவா(Noah)-வின் மகன். இவனால் ஏற்படுத்தப் பட்ட வம்சம், செமைட் என்றழைக்கப்பட்டனர். இவர்கள் மொழி ஹீப்ரு, அராபிக், அஸ்ஸிரியன் மற்றும் பாபிலோனியன் மொழிகளை உள்ளடக்கி இருந்தன. 2000 BC-யில் சுமேரிய கலாச்சாரம் இருந்த இடங்கள் எல்லாம், செமிடிக் (அக்காடியர்) மக்களின் வசம் பல நூற்றாண்டுகள் இருந்ததாக குறித்துள்ளனர். அக்காடியர்கள் பற்றிய அதிக குறிப்புக்கள் கிடைக்காவிட்டாலும், இவர்கள் தெற்கிலிருந்து, சார்கோன் (Sargon) என்ற தலைவனின் கீழ், சுமேரியர்கள் மீது படையெடுத்து, அக்காடிய சாம்ராஜியத்தை விரிவாகி, லெபனான் வரை சென்றுள்ளான். ஏறத்தாழ இராண்டாயிரம் ஆண்டுகள் வரை, இவன் சாம்ராஜியத்தில் (பாபிலோன் நகரம்) வர்த்தக - கலாச்சார வளர்ச்சியை பெற்றதாக குறித்துள்ளார்கள் (middle-east). ஆனால் இவன் (சார்கோன்) சாம்ராஜ்யம், மெசபொடோமிய கலாச்சாரம் (அல்லது அதை பற்றிய குறிப்பு) ஆரம்பிக்கும் வரையே நீடித்தது. 2125 BC - யில் வடக்கு மெசபொடோமியாவில், சுமேரிய நகரமான உர் (Ur) என்ற இடத்தில் ஏற்பட்ட புரட்சியில், அக்காடிய சாம்ராஜ்யம் வீழ்ந்து, சுமேரியர்கள் மீண்டனர்.

Sargon, the mighty king, king of Agade, am I.
My mother was a changeling, my father I knew not.
The brother(s) of my father loved the hills.
My city is Azupiranu, which is situated on the banks of the Euphrates.
My changeling mother conceived me, in secret she bore me.
She set me in a basket of rushes, with bitumen she sealed My lid.
She cast me into the river which rose not (over) me,
The river bore me up and carried me to Akki, the drawer of water.
[The Akkadians-THE LEGEND OF SARGON]


changeling - minor by age
Agade - A city located right between the Euphrates and Tigris rivers. Now, considered to be Iraq.
Azupiranu - A town in ancient Mesopotamia
Euphrates - The main river of nearer Asia, often mentioned in the Bible, the fourth river of paradise

===================================================================

இந்து காவியங்களில் குறிக்கப் பட்டுள்ள, விக்கிரமாதித்தன், கன்னித் தாய்க்குப் பிறந்தவன். இவனுக்கும் கர்ணனைப் போன்றே அதிக சாபங்கள் மூத்தோர்களால் கொடுக்கப்பட்டன. பல அவமானங்கள் / கஷ்டங்களுக்கு பிறகு, சாம்ராஜ்யங்களை படைக்கிறான். விக்கிரமாத்தித்தன் பற்றிய பிறப்பு குறிப்பு கொஞ்சமாகவே இருக்கிறது.

===================================================================

அடுத்தது, அயோனியான் (Ionian) வம்சத்தினை படைத்த அயான் என்பவனின் கதையில் கர்ணனை போலவே ஒருவனின் குறிப்பு வருகிறது.

கிரேக்க கடவுளான
அப்பல்லோ (ஜீயஸ் மற்றும் லேடோ-க்கு பிறந்தவன்) க்ரேயோசா (Creusa, born to King of Athens-Erechtheus) என்பவள் மீது மையல் கொண்டு, அவளை கடத்திச் செல்கிறான். இவர்களுக்கு ஒரு மகன் பிறக்கிறான். அப்பல்லோ இந்த குழந்தையை கொன்று விடுவான் என்று பயந்து, ஹெர்மேஸ் (Hermes)-ஸிடம் கொடுத்தனுப்புகிறாள். ஹெர்மேஸ், தெல்பி (Delphi) என்ற நகருக்கு கொண்டு சென்று ஒரு கோவிலில் உள்ள கன்யாஸ்திரீயிடம் கொடுக்க அவள் குழந்தையை அந்த கோவிலிலேயே ஒரு சேவகனாக வளர்க்கிறாள்.

க்ரேயோசா பின்னாளில் ஜுதுஸ் (Xuthus) என்ற மன்னனை மணக்கிறாள். ஆனால் இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை.

ஒரு நாள் ஜுதுஸ் கனவில் தெல்பி நகரத்து கோவிலை விட்டு வெளியேறும்போது முதலில் யாரை சந்திக்கிறானோ அவனே உனக்கு மகன் என்று ஒரு குரல் ஒலிக்கிறது.

இதனால் அவன் கோவிலுக்கு செல்கிறான், வெளியேறும்போது, க்ரேயோசாவுக்கு ஏற்கனவே பிறந்த குழந்தையே தென்படுகிறான். ஜுதுஸும் மகிழ்ச்சியோடு அவனை ஏற்கிறான். குழந்தைக்கு அயான் (Ion) என்றும் பெயர் சூட்டுகிறான். ஆனால், க்ரேயோசா இவனை தம் மகனாக ஏற்க முடியாமல், விஷம் கொடுத்து கொல்லப் பார்க்கிறாள்.

இது தெரிய வரும் அயானும் க்ரேயோசாவை கொல்ல முயற்சிக்கிறான். இதை கண்ணுறும் அப்பல்லோ, தாயை மகனே கொல்வதை தடுக்க, கன்னியாஸ்த்ரீயிடம் அயானின் பிறப்பு இரகசியத்தை தெரிவிக்கிறான். அந்த கூடையை பார்த்ததும் தாய்-மகன் இருவரும் இதை உண்மையென நம்புகிறார்கள்.

===================================================================
[தொடரும்]


.

24 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

கர்ணன் மட்டுமல்ல, மகாபாரதத்தில் ஒவ்வொரு பாத்திரப் படைப்புமே ஒரு வாழ்வியல் உண்மையைச் சொல்கிற மாதிரிப் படைக்கப்பட்டவை.

கிருஷ்ணனுடைய தூண்டுதலின் பேரில் குந்தி கர்ணனைச் சந்தித்து, தான் தான் அவனது தாய் என்று சொல்கிறாள். தாய்மை அங்கே தடுமாறுகிறது. தன்னுடன் பிறந்தவர்களுடன் கட்சி மாறும் படி கெஞ்சுகிறாள்.

தாயே ஒதிக்கிய பிள்ளை, ஒரு தேரோட்டியால் வளர்க்கப் பட்ட நிலையிலும் கூட, தோழனாக ஏற்றுக் கொண்ட துரியோதனனை விட்டு வர முடியாது, அவனுக்குச் செஞ்சோற்றுக் கடன் பட்டிருப்பதனால், கட்சி மாற முடியாது என்று மறுக்கிறான்.

கிருஷ்ணன் சொல்லிக் கொடுத்தபடி, நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மேல் ஒரு முறைக்கு மேல் எய்யக் கூடாது என்று மடிப்பிச்சை கேட்கிறாள்.

தாய்மையின் அசட்டுத்தனத்தை வெளிப்படுத்தும் கட்டம் அது. கர்ணன் தாயின் நிலை கண்டு மனம் இரங்குகிறான். அவள் கேட்டபடியே நடக்க ஒப்புக் கொள்கிறான்.

ஊரறிந்து உனக்கு ஐந்து புதல்வர்கள்! இந்த யுத்தம் முடிந்த பின்னாலும், உனக்கு ஐந்து புதல்வர்கள் இருப்பார்கள். அந்த ஐவரில், நானோ, அர்ஜுனனோ, யாரோ ஒருவர் தான் இருக்க முடியும்.அப்படி அர்ஜுனன் பிழைத்து, நான் இறக்க நேரிட்டால், அப்போதாவது என்னை உன் மகன் என்று அழைப்பாயா என்று குமுறுகிறான் கர்ணன்!

கர்ணனின் பாத்திரப் படைப்பு ஒரு உன்னதம்! ஐயோ பாவம்டா என்று இரக்கப்பட வேண்டிய அவசியமும் இல்லை, அப்படி இரக்கத்தினால் வருவது காதலும் இல்லை:-))

அப்புறம்,நிறையப் படிப்பதற்குப் பொழுது இருக்கிற மாதிரித் தெரிகிறது!

ஒரே இடத்தில், பதிவில் அத்தனையையும் கொட்டித் தீர்த்து விட வேண்டாமே!

சொல்லப் பட்ட விஷயங்களை விட, யாராவது பிடுங்கிக் கொண்டு விடுவார்களோ என்று ஒரு சிறு குழந்தை அப்படியே, அத்தனை முட்டாய்களையும் வாய்க்குள் திணித்துக் கொள்கிற சித்திரமே கண்முன்னே வந்து நிற்கிறது!!

R.Gopi said...

//என்னையும் கர்ணனை நினைக்க வைத்தது.//

க‌ர்ண‌ன் என‌க்கு மிக‌வும் பிடித்த‌ ஒரு க‌தாபாத்திர‌ம்... அவ‌ன் தியாக‌ம் ம‌க‌த்தான‌து...

//சூழ்நிலையால் ஊமையாக்கப்பட்டு, மௌனக் கண்ணீர் வடித்தவன்.//

ஆம்... மிக‌வும் பாவ‌ப்ப‌ட்ட‌வ‌ன்... அவனை பற்றி நினைத்தாலே க‌ண்ணீர் வ‌ருகிற‌து...

//கரை சேர்ந்தானா கர்ணன்? காலம் இன்னும் அவனை எப்படியெல்லாம் அலைகழிக்கிறது? துவண்டு மருண்டு கர்ணன், மௌனி ஆகிறான். இந்த மௌனம் அவனே நிரந்தரமாக மௌனிக்கும் வரை நீடிக்கிறது.//

சோகம், தியாகத்தின் மொத்த உருவமே கர்ணன்...

மொத்தமா இந்த பதிவு நன்றாக எழுதப்பட்டுள்ளது... இந்த பதிவு உங்களின் எழுத்து ஆளுமையை பறைசாற்றுகிறது என்று சொன்னால் அது மிகையல்ல...

வாழ்த்துக்கள் வித்யா... ரொம்ப நல்லா இருக்கு...

அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்...

பாலா said...

எனக்கும் கர்ணன் பாத்திரம் மேல தீராத காதல் உண்டு சகோ.
அதே போல (கமல் சொன்ன மாதிரி ) ராவணன் கேரக்டர் மேலையும் ஒரு ஈர்ப்பு உண்டு .
இந்த கீழே கொடுக்க பட்ட தகவல்லாம் எங்கேர்ந்து எடுக்குறீங்க
யப்பா அசர வைக்குறீங்க . (எனக்கு நாலு வரி எழுதரதுக்குல்லையே நாக்கு தள்ளிடுது )
இவ்ளோ பெரியபதிவு யப்பா முடியல .

முடிஞ்சா ராவணன் பத்தியும் எழுதுங்களேன் (

Vidhoosh said...

:) நன்றிங்க கிருஷ்ணமூர்த்தி சார்.

மகாபாரதத்தில் கர்ணனும், இராமாயணத்தில் ஊர்மிளையும் பற்றி, நான் முதன் முதலாக ஹிந்தி பிரவேஷிகா பரீட்சைக்குப் படித்தேன். என்னை மிகவும் கவர்ந்தது இந்த இரு பாத்திரப் படைப்புக்களும். அப்போதிலிருந்தே, எங்கு கர்ணன் மற்றும் ஊர்மிளாவின் குறிப்புக்கள் வந்தாலும், தனியாக சேமித்து வைப்பேன்.
///அத்தனை முட்டாய்களையும் வாய்க்குள் திணித்துக் கொள்கிற சித்திரமே கண்முன்னே வந்து நிற்கிறது!!///
:)) ஒரு வாரம் ஆனது இந்தப் பதிவெழுத. ரீடரில் நாலாம் தேதி படித்தேன்.

வேறெங்க போயி பதிவிடுவது?? ஒவ்வொன்னுத்துக்கு ஒரு blog திறந்தேன்னா, நான் தீர்ந்தேன்.

பலவருடங்களாக ஒவ்வொன்னா சாப்பிட்டு சாப்பிட்டு சுவைத்த முட்டாய்கள், இன்னும் நெஞ்சுக்குள் இனித்துக் கொண்டே இருக்கும் வித விதமான முட்டாய்களை எல்லாம் வெளியிட்டேன் என்னை பைத்தியம் என்றே முடிவு கட்டி விடுவீர்கள்..
:))

--வித்யா

கிருஷ்ண மூர்த்தி S said...

/பலவருடங்களாக ஒவ்வொன்னா சாப்பிட்டு சாப்பிட்டு சுவைத்த முட்டாய்கள்/

ஒவ்வொண்ணாச் சொல்லனும்னா ஆரம்பத்தில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை அம்மா! அப்படிச் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை.

சொல்ல வந்த விஷயங்கள் ஒன்றோடொன்று எப்படிப் பொருந்துகின்றன, எப்படி முரண்படுகின்றன என்பதையும் சேர்த்து எழுத முனைந்தால் அது ரசம்[சாறு]! சுவையாக, கோர்வையாக இருக்கும்.

ஊர்மிளையைப் பற்றித் தமிழில் எழுதப்பட்டது மிகவும் குறைவே. அதையும் ஒரு வித்தியாசமான கோணத்தில் பதிவிட முடிந்தால், மிகவும் நன்றாக இருக்கும்-எனக்கு!

வால்பையன் மாதிரி இலக்கியம் வேணாம் எசக்கியமே போதும்னு வர்றவங்களுக்கு....?
எங்க வால்ஸ் வந்து சொல்லட்டும்!

எங்கே வால்ஸ்..?

மணிஜி said...

வாவ்....

கிருஷ்ண மூர்த்தி S said...

மணிஜி,

தண்டோரா டம டமன்னுதானே சத்தம் கொடுக்கும்?

வாவ்..இது கொட்டாவியா, பாராட்டான்னே தெரியலே:-))

மணிஜி said...

முதலில் போட்டது வருகைக்கானது.வித்யா..மணிரத்னம் படித்தால் உங்களிடம் அடுத்த படத்துக்கு கதை கேட்க வாய்ப்பிருக்கிறது

Vidhoosh said...

:)) ரொம்ப நன்றிங்க. அப்படியே ஹீரோயினி சான்சும் தருவாரானு கேட்டு சொல்லுங்கோ.. :))

--வித்யா

மணிஜி said...

அவர் படத்தில் கதைதான் ஹீரோ/ஹீரோயினி எல்லாம்(அப்படின்னு அவர் சொல்வார்)

கிருஷ்ண மூர்த்தி S said...

/மணிரத்னம் படித்தால் உங்களிடம் அடுத்த படத்துக்கு கதை கேட்க /

சான்ஸே இல்ல:-((
ஏற்கெனெவே கர்ணன் கதையை உல்டா அடிச்சு தளபதி படம் எடுத்தாச்சு! அதைக் கூட, அங்கே இருந்து தான் சுட்டதுன்னு அவரே ஒப்புதல்வாக்குமூலம் கொடுத்த பின்னாடி தான் இங்க நிறையப்பேருக்கு அது தெரிஞ்சது!!

/அப்படியே ஹீரோயினி சான்சும் தருவாரானு கேட்டு சொல்லுங்கோ.. :))/

தர்ஷனிக்குத் தானே! கட்டாயம் கிடைக்கும்!!

Vidhoosh said...

ஏன்? நம்ம ஷங்கர் ஜென்டில்மேன், அந்நியன், இந்தியன் அப்படீனெல்லாம் ஒரே கதையை வித விதமா சொல்லி படம் காமிக்கலையா...

---
///தர்ஷனிக்குத் தானே! ///
கிருஷ்ணமூர்த்தி சார், உங்களுக்கு ஏன் இவ்வளோ! :))

thiyaa said...

உண்ட சோற்றுக்கு இரண்டகம் செய்யாமல்
உயிர் போகும்வரை வாழ்ந்த கர்ணனின்
செய்நன்றி மறவாத நேர்மைதான் என்னை கடைசிவரை ஈர்த்தது.

வால்பையன் said...

மாமிஸ்: சீக்கிரம் போடா அம்பி, ரெண்டரை மணிகுள்ள போகனும்!

வடி: ஏன் மாமி என்ன அவசரம்,

மாமி: அவளுக்கு தலையில அடிப்பட்டுடுத்தடா!, இன்னைக்கு தான் ஆப்ரேஷன்!

வடி:அய்யயோ, எப்படி மாமி?

வடி:அவ குடிகார புருஷன் குடிச்சிட்டு வந்து, மாடியிலிருந்து கீழ தள்ளி விட்டுடாண்டா!

வடி:அப்பறம் என்னாச்சு!

மாமி:அதுகுள்ள தான் தொடரும் போட்டுட்டாளே!

Vidhoosh said...

வால்:
கி.மூ. வரட்டும். கி.பி. இன்னும் (கிழிச்சு பின்னுவாறு)

-வித்யா

ரௌத்ரன் said...

ஸ்ஸ்ஸ்ஸபப்பா....எங்கே இருந்து இவ்வளவு விஷயம் பிடிக்கறீங்க...?

வாசிக்க நல்லாயிருக்குங்க நடை...தொடர்ச்சியையும் போடுங்க..

கிருஷ்ண மூர்த்தி S said...

/கி.மூ. வரட்டும். கி.பி. இன்னும் ../

இப்படியெல்லாம் வேற பயம் காட்ட முடியுமா ஏன்னா?

நேத்து ராத்திரி என் பதிவில் அவர் சொன்னதுக்கு ஒரு கேள்வி கேட்டிருந்தேன், அதற்கப்புறம் வாலைக் காணோம்:-))

நேசமித்ரன் said...

அடேங்கப்பா
சாமியோவ் .. படிக்கவே இம்புட்டு நேரம் ஆகுதே இதையெல்லாம் தேடித் பிடிச்சு படிச்சு பதிவில் ஏத்தி .அம்மாடி ..

நீங்க ஏன் புக்கு போடக் கூடாது . அதென்ன மூளையா இல்ல டிக்சனரி மாதிரி என்சைக்ளோபீடியா மாதிரி எதாச்சுமா?

கர்ணன் பீஸ்மர் ராவணன் எல்லாம் எனக்கும் பிடிக்குமுங்க

நந்தாகுமாரன் said...

nice piece of article ...

Radhakrishnan said...

மிகவும் சிறப்பான பதிவு, அதிலும் பிற விசயங்களுடன் இணைத்து எழுதியது சிறப்பு.

அந்த காலத்தில் எல்லாம் 'குறிஞ்சிப் பூக்கள்' அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் இருந்தது. பல விசயங்கள் ஒப்புமைப்படுத்தும் வண்ணம் அமைந்தது அதிர்ஷ்ட்மே. கிருஷ்ணரையும், இயேசுவையும், கல்கியையும், முகம்மது நபிகளையும் கூட ஒருவரென ஒப்புமைப்படுத்திப் பார்க்கும் சமுதாயம் இது.

கிரேக்க கடவுளர்களைப் பார்த்து ரோம ராஜ்ஜியத்தில் கடவுளர்கள் உருவானார்கள். இப்படி கர்ணன் பற்றிய சிந்தனையில் ஊடே தெளித்திருக்கும் விசயங்கள் மிகவும் சுவாரஸ்யமானது.

கர்ணன் பற்றி குறிப்பிட வேண்டுமெனில் 'நல்ல போர் வீரன், ஆனால் மனதளவில் அவன் ஒரு கோழை, விவேகமற்றவன்'

பாராட்டுகளிலும், புகழிலும், அங்கீகாரத்துக்காகவும்,தனது சுயத்தைத் தொலைத்தவன் கர்ணன்.

துளசி கோபால் said...

நல்ல பதிவு வித்யா.

திவாண்ணா said...

//கர்ணனை காலம் ஒரே ஒரு முறை மட்டும் கரை சேர்க்கிறது./
அடடா! என்ன பொருள் பொதிந்த வார்த்தைகள்! why did I miss this post?

திவாண்ணா said...

ஓ, ரொம்பவே பழசு! :-))))

Unknown said...

மகாபாரத்ததில் என்னை கண் கலங்க வைத்த கதாபாத்திரம் கர்ணன்..கடைசியில் கிருஷ்ணரே அவனிடம் கையேந்தி நின்றார்..

Post a Comment