பெண்ணே நீயும் பெண்ணா - 2

முதல் பகுதி இங்கே

தற்காப்பும் அதன் அவசியமும்

என் முந்தைய பதிவில் ஒரே நாளில் இரு கயவர்களையும் இரு நல்லவர்களையும் எதிர் கொண்ட அனுபவத்தைப் பகிர்ந்திருந்தேன்.

இன்றும் கூட கராத்தே, ஜூடோ, முகத்தில் குத்துவது, அல்லது கால்களுக்கு இடையில் உதைப்பது போன்றவற்றை தற்காப்பு என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். கராத்தே ஜூடோ போன்றவை  தன்னம்பிக்கை வளரும். உண்மைதான்.  ஆனால், நிதர்சனத்தில்??? இதெல்லாம் சினிமாவிலோ டீவீ சீரியல்களிலோ பலன் கொடுக்கலாம். அரிதாகவே, நிஜத்திலும் சில நேரங்களில் உதவலாம்...

ஒருவேளை அடிபட்டவன் ஆக்ரோஷமடைந்து அடித்தவள் மீது பாய்ந்தால்? இவளை விட பலம் பெற்றவனாக இருந்தால்? அவனும் கராத்தே ஜூடோ தெரிந்தவனாக இருந்தால்? ஒருவனுக்கும் மேற்பட்டவர் இருந்தால்?

அடிதடி சண்டை போடுவது, வாயால் கத்திக் கொண்டு உதவி கேட்டுக் கொண்டு நிற்பதை விட, துரிதமாக ஆபத்து நிறைந்த அந்த இடத்திலிருந்து ஓடுவது / வெளியேறுவது எப்படி என்று யோசித்து செயல் பட வேண்டும். எதிராளியை அடிப்பது நிச்சயம் பல நேரங்களில் உதவுவதில்லை. இது வன்மமாகக் கூட மாறி மென்மேலும் ஆபத்துக்களை உருவாக்கலாம். ஆபத்தை எதிர்கொண்டு இன்னொரு ஆபத்தை உருவாக்குவதை விட ஆபத்தை தவிர்ப்பது, அந்த இடத்தை விட்டு ஓடி விடுவது சாலச் சிறந்தது.

தனித்திருக்கும் பெண்களைச் சீண்டும் ஆண்களுக்குப் பெரும்பாலும் பாலியல் நோக்கமே இருக்கிறது. யாரேனும் உங்களைத் தாக்கியோ / மிரட்டியோ உங்களுக்கு ஆபத்து விளைவிக்கும் சூழலில், நீங்கள் இடத்தை விட்டு விலகிச் செல்லும் பட்சத்தில் அவன் வேறு ஒருவரை நாடுவானே தவிர, சினிமா மாதிரி உங்களையே துரத்திக் கொண்டிருக்க மாட்டான். அவனது பாலியல் நோக்கம் (வெறி) கூட அந்த நிமிட மனப் பிழற்வுதான். ஏற்கனவே உணர்ச்சி வசத்தில் இருக்கும் அவனுக்கு அவன் குறிக்கோளை அடைய என்ன வேண்டுமாலும் செய்துவிடும் மனப்போக்கிலேயே இருப்பான். அதனால் உங்கள் மனதுக்கு ஆபத்து என்று படும் பட்சத்தில் 'வீரம்' காட்டுவதை விட 'விவேகமாக'வும் அதி வேகமாகவும் செயல்படுங்கள். எதிராளியின் பார்வையில் இருந்து மறைவதை முதலில் முயற்சியுங்கள். தனிமையான இடத்திலிருந்து  கூட்டம் நிறைந்த இடத்திற்கு சென்று விடுங்கள்.  வேறு வழியே இல்லாத பட்சத்திலேயே சண்டையில் இறங்கலாம்.

தற்காப்பு என்றால் என்ன? தற்காப்புக்கு முதல் தேவை மன உறுதியும் சமயோசிதமும். இவை இரண்டும் ரொம்பவே அவசியம். ஆபத்துக்களை எதிர்கொள்ளும் மன உறுதி இல்லை என்றாலோ, ஆபத்து வரும் சமயத்தில் துரிதமாக முடிவெடுத்து, தகுந்தவாறு செயல் பட முடிய வில்லை என்றாலோ தற்காப்புப் பயிற்சிகளால் பயனேதும் இல்லை.  உங்கள் உள்ளுணர்வுகளின் ஒவ்வொரு செய்திக்கும் செயல் படுங்கள். பெரும்பாலும் உள்ளுணர்வு தவறுவதே இல்லை.

இது முன் பின் தெரியாத அன்னியனால் வரும் ஆபத்தினை சமாளிப்பது. சரி.  டீன்-ஏஜ் பருவத்தில் இருக்கும், அல்லது பெரும்பாலும் எல்லா வயதுடைய பெண்கள் சிலருக்கு அவர்கள் நண்பர்களால் / மிகவும் நன்கறிந்த ஆண்களாலேயே ஆபத்து நேர்கிறது. அப்போது என்ன செய்வது?

பாலியல் தாக்குதல் எல்லாமே பெரும்பாலும் அந்த நிமிட மனப் பிழற்வு தான். ஆனால் ஏற்கனவே நன்கறிந்த ஆண்களால் தாக்குதலுக்கு ஆளாவது அந்த ஆணால்  'முன்பே' திட்டமிடப்பட்டது. அந்தப் பெண்ணின் தனிமை, வீட்டில் எப்போது யாரும் இருக்கமாட்டார்கள் என்பதெல்லாம் ஏற்கனவே அறிந்திருப்பான். இம்மாதிரி நிகழ்வுகள் எப்போதும் ஒரு அறையோ இல்லை பெண்ணின் வீட்டிலேயோ கூட நடக்கலாம். இதனால் இம்மாதிரிச் சூழ்நிலையில் முடிந்தவரை பதட்டப் படாமல், புத்திசாலித்தனமாகப் பேசி கதவுகளைத் தாண்டி வெளியேற முயற்சியுங்கள்.  தோற்று விட்டோம் என்று நாமே நம்பாத வரை, யாராலும் நம்மை வீழ்த்த முடியாது என்பதை உறுதியாக நம்புங்கள். எந்நிலையிலும், இம்மாதிரிச் சூழலில் உங்கள் கோபத்தையோ, இயலாமையோ வெளிக்காட்டுவது உங்களைத் தோற்கச் செய்யும்.

உங்களைக் கோபமூட்டுவதன் மூலம் அவன் நோக்கம் எளிதில் நிறைவேறும் என்பதை எதிராளி நன்கறிவான். உங்கள் கோபம் உங்கள் "ரெஸ்பான்ஸ்" ஆகிறது. அதே போல அவனை சண்டைக்குத் தூண்டுவதோ, கோபமூட்டுவதோ உங்களுக்கு வரப்போகும் ஆபத்தை அதிகரிக்கிறது. அதனால் உணர்ச்சி வசப்படாமல், மெதுவாக அத்தகைய இடத்திலிருந்து வெளியேறுவதை குறித்தே சிந்தித்து செயல்படுங்கள்.

வழிப்பறி, திருடன் போன்றவரிடம் மாட்டிக் கொண்டால் அவனிடம் பர்ஸ் நகைகள் போன்றவற்றை கொடுத்து விடுவது தப்பிப்பது சாலச் சிறந்ததாகும். அவன் நோக்கம் பணம் பொருள் என்பதே. இவை சண்டைபோடுவதால் அவன் நோக்கம் மாறிவிடக்கூடும்.  பொருளை இழப்பதால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை.

இம்மாதிரி தாக்குதலுக்கு ஆளாகும் போது முடிந்த வரை உங்கள் உயிர், சுய மரியாதை, ஆகிவற்றைக் காப்பதிலே முழு கவனமும் இருக்கட்டும்.  தாக்குபவனைத் திருப்பித் தாக்குவது பெரும்பாலும் அவனை ஆக்ரோஷப்படுத்துகிறது. நீங்கள் பாதுகாப்பென்றும் கருதும், உள்ளுணர்வு நம்பும்  எந்த ஒரு அன்னியரிடமும் உதவி கேட்கத் தயங்காதீர்கள். அதற்காக முன் பின் தெரியாத அன்னியரின் கார் போன்ற வாகனங்களில் முழுமையாக நம்பி, தனியாகப்  பயணிக்க  வேண்டாம்.

உங்களுக்கு வரக்கூடிய ஆபத்துக்களைத் தவிருங்கள் - முழுமையாக.
  1. தனியாக பயணிக்கும் போது, அந்த இடம், பயணிக்கும் சாலைகளைப் பற்றி முழுமையாக அறிந்திருங்கள்.கூட்டத்திலேயே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்களைத் தனிமை படுத்திக் கொள்ளாதீர்கள். இலக்கிலாத வழிகளில் பயணிக்க வேண்டாம். அதே போல, நெடுந்தொலைவு / ஏற்கனவே போகாத இடங்களுக்கு தனியாக பயணிக்க வேண்டாம் / தவிருங்கள்.
  2. எப்போதும் குறுக்கு வழிகளில், இருட்டான சாலைகள், யாரும் பயன்படுத்தாத சந்துகளில் செல்லாதீர்கள்.
  3. வீட்டில் இருந்தால் உங்கள் பெற்றோர், ஹாஸ்டல் / விடுதி போன்ற இடங்களில் இருந்தால் உங்கள் தோழிகளுக்கு நீங்கள் எங்கே போகிறீர்கள், யாருடன் பழகுகிறீர்கள் என்பதை தெளிவாகக் கூறுங்கள். 
  4. டேட்டிங் (dating) போன்றவைகளுக்குச் சென்றால், முடிந்தவரை உங்களுக்கு நம்பகமான ஒருவரிடம் யாருடன் போகிறீர்கள் என்பதை பகிருங்கள். என்னதான் அந்த நண்பர் நம்பகமானவராக இருந்தாலும்,  தனிமையில் இருக்கும் போதோ, டேட்டிங் செல்லும் போதோ, வெளியிடங்களில் / மூடிய அறைக்குள் குளிர் பானங்களை அருந்த வேண்டாம் / உணவு உட்கொள்ள வேண்டாம்.
  5. ஹாங்-அவுட் (hang-out), ஆடல்/பாடல் நிகழ்ச்சிகள், திரையரங்குகள், விருந்துகள், போன்ற பெருந்திரளான மக்கள் வரும் பொதுவிடங்களுக்குப் போகும் போது முழுமையான உடையணிந்து (பெண்கள் மன்னிக்க, ஆனால் கவனம்) செல்லவும். நடைமுறையில் உடல் பாகங்கள் தெரியுமாறு உடையணிந்த பெண்களே அதிகளவில் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். இம்மாதிரி இடங்களில் தான் வாய்ப்பு தேடி அலையும் கயவர்கள் அதிகம் நடமாடுகிறார்கள். சமூகம் / சில ஆண்கள் மாறவில்லை, மாறவேண்டும், என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், அதுவரை, நாம் நம்மை பாதுகாத்துக் கொள்வது நலம். அதே போல, நீங்கள் இருக்கும் குழுவினரோ, அல்லது உங்களைச் சுற்றி அமர்ந்திருக்கும் நபர்களோ (ஆண்கள் பெண்கள் இருபாலாரும்தான்) பொறுப்பற்ற அல்லது வரம்பு மீறிய பேச்சுக்கள் அல்லது செயல்களில் ஈடுபட்டால், வேகமாக அந்த இடத்தை விட்டு விலகிச் சென்று விடுங்கள். ஆபத்து வரும் வரை காத்திருக்க வேண்டாம். இது உங்களுக்கு வரக்கூடிய ஆபத்தைத் தடுக்கும்.
  6. ஆங்கிலத்தில் vulnerable target என்பார்கள். அதாவது எளிதில் தாக்கக்கூடிய இலக்கு. இவர்களைத் தேடித்தான் "அவர்கள்" அலைவார்கள். இவர்கள் அவர்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்வார்கள். எப்படி? நண்பர்கள் அல்லாத அன்னியர்களோடு -  தொட்டு பேசுவது,  அவர்கள் அளிக்கும் மது / குளிர் பானங்கள் / உணவுகளை ஏற்பவர்கள், இவர்களை மிக விரைவிலேயே தாக்குவார்கள். உங்கள் தன்னம்பிக்கையையும், சுய மரியாதையையும் வெளிக்காட்டுங்கள். அவமரியாதையான / மரியாதைக்கு குறைவான பேச்சுக்களை ஒரு போதும் அனுமதிதோ சமரசம் செய்தோ பொறுத்துக் கொள்ளாதீர்கள். "உங்கள் எல்லையை மீறவேண்டாம்" என்று முதலிலேயே பொறுமையாக அதே சமயம் உறுதியான குரலில் கூறி விட்டால், 99% ஆபத்துக்களை நீங்கள் முளையிலேயே கொன்றதாக ஆகிறது. பெரும்பாலும் அப்போதே 'கயவர்கள்' வேறு நபரைத் தேட ஆரம்பித்து விடுவார்கள். (ஐயோ! அவர்களை எப்படிக் காப்பாற்றுவது என்றெல்லாம் யோசிக்க வேண்டாம்)
  7. அம்மாக்களே!!! தயவு செய்து பதிமூன்று வயதுக்குள் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு, அவர்களுக்கே ஓரளவு விபரம் தெரியும் வரை,  சினிமாவில் அணிவிப்பது போன்ற உடைகளை (முதுகு முழுதும் திறந்து / தொப்புள் தெரியுமாறு / மினி போன்ற உடைகள்) அணிவித்து மகிழ வேண்டாம். அதுவும் பொதுவிடங்களில், பேருந்துகளில் பயணிக்கும் போது, யாரேனும் தவறான எண்ணத்தோடு bad touch செய்தால் பாவம் குழந்தைகளுக்குச் சொல்லவும் தெரியாது. நீங்களும் கண் கொத்திப் பாம்பாய் அவர்களையே பார்த்துக் கொண்டிருக்கமுடியுமா? பயணங்களில் பான்ட் ஷர்ட் / சுடிதார் போன்ற எளிய பாதுகாப்பான உடைகளையே நீங்களும் அணியுங்கள், உங்கள் குழந்தைகளுக்கும் அணிவித்துப் பழக்குங்கள். மற்ற உடைகளை வீட்டிலோ இல்லை மிகவும் நம்பிக்கையான இடங்களுக்கோ போகும் போது அணிவித்து மகிழுங்கள்(!!).
  8. கைபேசியில் shortcut program-கள் செய்து ஒரே நம்பரை அழுத்துவதனால் பெற்றோர் / கணவர்/உறவினரை அழைக்கும் வண்ணம் ஏது செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
  9. உங்களுக்கு ஏற்பட்ட ஆபத்து குறித்து, முதல் முறையே, உங்கள் பெற்றோர் / பள்ளி / கல்லூரி / போலீஸ் ஆகியவர்களிடம் பகிர / முறையிட (complaint) தயங்காதீர்கள். யாரும் தப்பா நினைப்பாங்களோ  அல்லது நம்மை கெட்டுப் போனவள்-ன்னு நினைச்சிருவாங்களோ அல்லது "ரொம்ப நெருங்கிய உறவுக்காரர் / நண்பர் ஆவாரே.. அவர் உறவு / நட்பு பிரிஞ்சுடுமோ" என்றெல்லாம் வீண் கற்பனை செய்து பயப்படாதீர்கள். (பெற்றோரே. நீங்களும் இத்தகைய குறைகளைக் காது கொடுத்து கேளுங்கள். உங்கள் பெண்ணை முழுமையாக நம்புங்கள்)
  10. முறையான தற்காப்புக் கலை ஒன்றை கற்றுக் கொள்ளுங்கள்.உங்கள் மன உறுதியும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். ஓடிப் போய் தப்பிக்க முடியாத நிலையில் கை கொடுக்கும்.
 =================================================
உங்கள் குழந்தைகளுக்குப் பாலியல் குறித்த அந்தந்த வயதிற்கேற்ற செய்திகளை மெல்ல மெல்ல கொடுத்துக் கொண்டே இருங்கள்.

"பாய்ஸ் ஏம்மா பாய்ஸ்ஸா இருக்காங்க. அவங்களும் ஏன் கேர்ள்ஸா இல்ல? அவங்களாம் ரவ்டீஸ்ஸா?" என்ற கேள்விக்கு ஒரு தாயாக / தந்தையாக என்ன பதில் அளிப்பீர்கள்?

நான் "ரவுடின்னா என்னம்மா?" என்றேன்.

 "அடிப்பாங்க. கெட்ட வார்த்தை சொல்வாங்க. சாக்லேட் ஸ்நாக்ஸ் எல்லாம் யாருக்கும் ஷேர் செய்யவே மாட்டாங்க... அவங்களே ஸ்விங்-ல (ஊஞ்சல்) விளையாடிண்டே இருப்பாங்க. அவங்கதான் ரவ்டீஸ் ..." என்றாள்.

 "அப்பா பாயா கேர்ள்-ளா?" என்றேன்

 "பாய்தான்...." என்றாள்.

"தாத்தா ?"

"தாத்தாவும் பாய்தான் - பின்னல் இல்ல  ...வேஷ்டி கட்டிகாரங்க, பான்ட் ஷர்ட் போட்டுக்கறாங்க."

யோசிக்க ஆரம்பித்தாள் "அப்பா தாத்தால்லாம் ரவ்டீஸ் இல்லம்மா." என்றாள். கொஞ்ச நேரம் கழித்து "ஆனா விஷால்-லும் நிஷாந்த்-தும் இருக்கான்ல ... இவங்கதான் கேர்ள்-சை அடிப்பாங்க. ஸ்நாக்ஸ்-சை எல்லாம் பிடுங்கி சாப்ட்ருவாங்க... மிஸ் அடிச்சாக் கூட பயப்படவே மாட்டாங்க. இவங்க மட்டும் தான் ரவ்டீஸ் மா... "
(உடனே ஸ்கூல் மிஸ்ஸிடம் பேசி ஸ்நாக்ஸ்/அடிதடி பிரச்சினையை ரிப்பேர் செய்தாகி விட்டது. ப்ரைமரி ஸ்கூல் மிஸ்ஸுகள் ரொம்ப பாவம்ங்க )

ஒரு முறை என் கணவரின் சக பணியாளருக்கு குழந்தை பிறந்திருந்தது. பிறந்த குழந்தையைப் பார்க்கச் சென்ற போது தர்ஷிணியும் வந்திருந்தாள். அங்கு வந்திருந்த ஒருவர் "என்ன குழந்தை" என்று கேட்டார். குழந்தையின் தாய் "கேர்ள் சைல்ட்" என்றார். தர்ஷிணி மெல்ல என் காதில்  "பேபிக்கு பின்னல் தோடு எல்லாம் இல்லையே? பாய் மாதிரி மொட்டையா இருக்கே. எப்படிம்மா பொண்ணுன்னு கண்டு பிடிச்சா அவ அம்மா?" என்றாள்.


000 -- தொடரும் -- 000
அடுத்து:
3. ஆபத்து என்று எப்படி அறிவது?
4. அலுவலகத்தில் தொல்லைகளை எப்படி சமாளிப்பது?
5. கற்பழிப்புக்கு ஆளானால்?



(நான் எதையும் தவறாக / தவற விட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரியப் படுத்தலாம். பிறரை அவமதிக்காத / புண்படுத்தாத / ஆரோக்கியமான விவாதங்கள் செய்யலாம்.)



.

31 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான..இன்றைக்கு தேவையான பதிவு..பாராட்டுகள் வித்யா

நட்புடன் ஜமால் said...

தன்னம்பிக்கை தரும் பதிவு

தன்னம்பிக்கையோடு தொடருங்கள்.

------------

நீங்கள் சரியென்று நினைக்கும் ஒரு விடயத்துக்கு “மன்னிப்பு” எதற்கு.

------------
வாழ்த்துகள். மேலும் வெயிட்டிங்ஸ்

Paleo God said...

i need some time to reply this.. will post soon..:)

அம்பிகா said...

மிக அவசியமான பதிவு.

எத்தனை கருத்துக்கள், எத்தனை குறிப்புகள், கோர்வையாக தொகுத்து வழங்கிய விதமும அருமை

பின்னோக்கி said...

மிகவும் உபயோகமான பதிவு. தற்காப்பு முறைகளைப் பற்றி சொல்லியவிதம் சரி. ரௌடீஸ் சிரிப்பை வரவழைத்தது.

pudugaithendral said...

ப்ரைமரி ஸ்கூல் மிஸ்ஸுகள் ரொம்ப பாவம்ங்க//

ஆசிரியைகள் சார்பில் நன்றிகள் வித்யா.

பதிவு அருமை

இராஜ ப்ரியன் said...

great...........

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப அருமையான இடுகை வித்யா. எல்லா பெண்களும் நிச்சயம் படிக்கவேண்டிய ஒன்று. இதை பெண்கள் மாத/வார இதழ்களுக்கும் அனுப்பிவையுங்கள்.

Paleo God said...

முதலில் இத்தகைய பதிவுக்கு (களுக்கு), உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.


ஆபத்தை எதிர்கொண்டு இன்னொரு ஆபத்தை உருவாக்குவதை விட ஆபத்தை தவிர்ப்பது, அந்த இடத்தை விட்டு ஓடி விடுவது சாலச் சிறந்தது.//

excellent, நாம் எவ்வளவுதான் பலசாலியாக இருந்தாலும், சமயோசிதம் ரொம்ப முக்கியம், சாதாரண பிக்பாகெட்டில் கூட கவனத்தை திசை திருப்பி பர்ஸ் அடிப்பவர்கள்தான் அதிகம். மேற்கூறியவைகள் ஆண்களுக்கும் பொருந்தும் என்றுதான் நினைக்கிறேன் (என்ன மாதிரி நல்ல :) ரொம்ப லேட் நைட் ல தனியாய் வண்டி ஒட்டிக்கொண்டு வரும்போது பெரும்பாலும் ஆபத்துக்களை எதிர்நோக்கியே வருவேன் (அப்போதுதான் மனது பதட்டப்படாமல் உருப்படியாய் தப்பிக்க ஆலோசனை சொல்லும் ).

பெண்கள் : இரவில் தனியாய் பயணம் செய்வது தவிர்ப்பது நல்லது ..இல்லையெனில் தயங்காமல் சக பணி நண்பர்களிடம் துணைக்கு வரச்சொல்லலாம்.


//தனித்திருக்கும் பெண்களைச் சீண்டும் ஆண்களுக்குப் பெரும்பாலும் பாலியல் நோக்கமே இருக்கிறது....//

இதே பிழைப்பாய் அலையும் கூட்டம் சென்னையின் அர்த்த ஜாமங்களில் உண்டு மேடம்... நானே திடுக்கிட்டு போன நாடு ராத்திரி பயணங்கள் உண்டு. ஆச்சரியப்படும் நண்பர்கள் எப்போது வேண்டுமானாலும் ராத்திரி 1 மணிக்கு மேல் பாரிஸ் கார்னெர், நெல்சன் மாணிக்கம் ரோடு, நட்ச்சத்திர ஹோட்டல் வாயில்கள், சனிக்கிழமைகளில் ECR, etc,etc என்று போனால் பார்க்கலாம். ஒழுங்காய் வண்டியோட்டிக்கொண்டு வரும் என்னை போன்ற அப்புரானிகள்தான் போலீசிடம் மாட்டி ஊதவேண்டியிருக்கும்..

மேலும் குறுக்கு வழிகளில் செல்லாமல் சுற்றாய் இருந்தாலும் வெளிச்சம் உள்ள நல்ல சாலைகளில் செல்வது நல்லது.

..contd..!

Paleo God said...

//எதிராளியின் பார்வையில் இருந்து மறைவதை முதலில் முயற்சியுங்கள். தனிமையான இடத்திலிருந்து கூட்டம் நிறைந்த இடத்திற்கு சென்று விடுங்கள். வேறு வழியே இல்லாத பட்சத்திலேயே சண்டையில் இறங்கலாம். //

agreed. கீழே இருக்கும் மணல் கூட நல்ல ஆயுதம்தான்.

//உங்கள் உள்ளுணர்வுகளின் ஒவ்வொரு செய்திக்கும் செயல் படுங்கள். பெரும்பாலும் உள்ளுணர்வு தவறுவதே இல்லை. //
100 சதவிகிதம் உண்மை.

//இது முன் பின் தெரியாத அன்னியனால் வரும் ஆபத்தினை சமாளிப்பது. சரி. டீன்-ஏஜ் பருவத்தில் இருக்கும், அல்லது பெரும்பாலும் எல்லா வயதுடைய பெண்கள்
சிலருக்கு அவர்கள் நண்பர்களால் / மிகவும் நன்கறிந்த ஆண்களாலேயே ஆபத்து நேர்கிறது. அப்போது என்ன செய்வது?//

இதுதான் இப்போது அதிகமாய் நடக்கிறது. அதிலும் இப்போதெல்லாம் உடல்கூறு பற்றி முழுமை அடையாத சிறு பெண் குழந்தைகள் சீக்கிரமே வயதுக்கு வந்துவிடுவதும்... அவர்களுக்கு பெற்றோர்கள் நாகரீகம் என்ற பெயரில் தேவையட்ற பிரச்சனைகளை வரவழைக்கும் உடைகளை உடுத்தி பொது இடங்களுக்கு அழைத்து வருவதையும் பார்க்கும்போது ... மனம் பதறுகிறது. மிக சுலபமான target ஆக இக்குழந்தைகள் வக்கிர மனிதர்களுக்கு இரையாகுகின்றன. வீட்டிலும் வெளியிலும் கண்ணியமான உடை உடுத்துவது பெண் குழந்தைகளுக்கு எப்போதும் பாதுகாப்பு. good touch bad touch எல்லாத்தையும் நட்பாய் சொல்லிகொடுத்து (எதுவா இருந்தாலும் அம்மாட்ட சொல்லு ok) புரியவைப்பதும் நல்லதே. பல பிரபல பள்ளிக்கூடங்களில் மகா கேவலமான அளவுகளில் uniform இருக்கிறது அதை போட்டுக்கொண்டு சைக்கிள் கூட ஒட்டமுடியாமல் போகும் குழந்தைகள் அதிகம்.

நிறைய பெண்கள் சறுக்குவது மென்மையான புகழ்ச்சியான பேச்சுகளால் என்பது என்கருத்து. உள் மன பிரச்சனையில் நட்பாய் தோள் சாய துடிக்கும் பெண்கள் நிச்சயம் ஆண்களிடமிருந்து (பெரும்பாலும்) ஆறுதலை எதிர்பார்க்கமுடியாது. நடப்பு வேறு நட்பு வேறு. நறுக்கென்று பேச்சை துண்டித்து கர்வியாய் தெரிந்தாலும் வழியல்களில் விலக தெரிந்திருக்க வேண்டும். ஏடாகூட பெண் நட்புகள் தவிர்ப்பதும் நல்லது. just for fun yaa.. என்பது புண்ணாகி, மண்ணாகி போஸ்ட் மார்ட்டத்தில் போய் முடியும்.

கவனம் காமிரா செல்பேசி என்ற ஒன்றுதான் பெண்களின் முதல் எதிரி ஆகிவிட்டிருக்கிறது. ஆயத்த ஆடைகள் வாங்க போகும்போது trial செய்வது தவிர்க்கலாம். அந்நியர்கள் புகைப்படம் எடுப்பதை எதிர்க்கலாம் (நெட்டில் வேறுமாதிரி காட்டப்படும் வாய்ப்பு )முக்கியமாய் ஹோட்டல்களில் தங்க நேரிடும்போது கூட எச்சரிக்கை உணர்வோடு இருப்பது அவசியம்.

மற்றபடி :: தர்ஷினி க்கு பதில் சொல்ல சத்தியமாய் எனக்கு தெரியாதுங்க ::) எனக்கு ரெண்டும் புள்ளைங்க ( எவ்வளவோ தபஸ் இருந்தும் பொண்ணு பிறக்கலைங்க :(

டிஸ்கி : (பின்னூட்டத்துலயுமா??) ரொம்பத்தான் பயமுறுத்தறாங்க என்று யாராகிலும் நினைப்பீர்களேயானால் நிறைய விஷயங்கள் மூடி மறைக்கப்படுகின்றன. செய்திகளாய் வருபவை கம்மி. நீங்கள் பெண் குழந்தைகளை பெற்றிருந்தால் ... ஜாக்கிரதையை கற்றுக்கொடுங்கள் ..ஆண் குழந்தையை பெற்றிருந்தால் .. பெண்களை மதிக்கவும், மரியாதையோடு பார்க்கவும் கற்றுக்கொடுங்கள். எந்த குழந்தையை பெற்றிருந்தாலும் கூட்டத்தில் கவனமாய் பார்த்துக்கொள்ளுங்கள்.

இறைவன் வேண்டாமென்று இயற்கையை சொல்லி அதுவும் வேண்டாமென்று அறிவியலிடம் போய்.. இப்போது அது கண்ணுக்குதெரியாத சைசில் காமராவையும் கையில் கொடுத்திருக்கிறது.

பகுத்தறிவே போற்றி.

sathishsangkavi.blogspot.com said...

தற்காப்பை பற்றி அழகான பதிவு...

பெண்களுக்கு தற்காப்பிற்கு இன்னொரு ஆயுதம் இருக்குது அதுதாங்க மிளகாப்பொடி அதையும் சேர்த்துக்குங்க...

காலத்திற்கு ஏற்ற பதிவு

Vidhoosh said...

எல்லோருக்கும் நன்றி.

Vidhoosh said...

பலா பட்டறை:

///நிறைய விஷயங்கள் மூடி மறைக்கப்படுகின்றன. செய்திகளாய் வருபவை கம்மி. ////
ரொம்ப சரி. பெற்றோர்களும் அலுவலகம் சென்று பிள்ளைகள்/குழந்தைகளோடு பேசக் கூட நேரமில்லாமல் பிள்ளைகள் வழி தவறி விடுகிறார்கள். பெண்களே ஜாக்கிரதை என்று மட்டும்தான் கூற முடிகிறது.

வளர்ந்தவர்கள் தெரிந்தே அரைகுறை ஆடை அணிவதைப் பற்றி கவலை இல்லை. ஒன்றும் தெரியாத குழந்தைகளை target ஆக்கும் படியான உடைகளை அணிவித்துக் கூட்டி வரும் தாய்மார்களை என்னவென்று சொல்ல??

தவறான ஒரு சின்ன நிகழ்வு கூட குழந்தையின் மனதை எப்படி, எந்த அளவு பாதிக்கும் என்பதைக் கூட உணர முடியாதா? :(

விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி பலாபட்டறை.

-வித்யா

pudugaithendral said...

நீங்கள் பெண் குழந்தைகளை பெற்றிருந்தால் ... ஜாக்கிரதையை கற்றுக்கொடுங்கள் ..ஆண் குழந்தையை பெற்றிருந்தால் .. பெண்களை மதிக்கவும், மரியாதையோடு பார்க்கவும் கற்றுக்கொடுங்கள். எந்த குழந்தையை பெற்றிருந்தாலும் கூட்டத்தில் கவனமாய் பார்த்துக்கொள்ளுங்கள்.//

sathiyamana varthaiku paratukal balapattarai.

pen kulanthaigalai polave aangulanthaigalum palathkarathuku aalaagirargalam.

hotel, cinema theatre pondra pothu idangaluku sellum poluthu pen kulanthaigal udan petror irupathu avasiyam

கிருஷ்ண மூர்த்தி S said...

பலே பதிவு, விதூஷ்!

கொஞ்ச நாளைக்கு முன்னாள் மொட்டை மாடிக் கூட்டத்தில் Good Touch-Bad Touch பற்றி இரண்டு மன நல மருத்துவர்களை வைத்து நடத்திய கூட்டத்தில் பேசின ஒரு நல்ல விஷயத்தை, பதிவுலகத்தில் ஏதோ எழுதினோமா அதை மறந்தோமா என்று இல்லாமல், நினைவு வைத்துக் கொண்டு,பாவ்லா குத்து, மெய்யாலுமே குத்து எப்படி விடுவது என்பதைக் கற்றுக் கொடுக்க இரண்டு பதிவுகள்!

இன்னும் வரும் என்று எச்சரிக்கை குத்து வேறு!

மனிதர்கள் மனிதர்களாக வாழ, அவ்வப்போது இந்த மாதிரிக் குத்துவாங்குவது அவசியமாகத் தான் இருக்கிறது!

மதுரையில் வலைப்பதிவர்கள் கூடி, சென்னையில் நடத்தின மாதிரி இந்த விஷயத்தைச் சொல்ல ஆசைப்பட்டு, ஷாலினியை விட்டால் வேறு ஆளே இல்ல என்று இன்னமும் நடத்தாமல் தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறார்களாம்!

இப்படி ஒரு மாஸ்டர் பாடம் நடத்த ஆரம்பித்திருப்பது வால்பையனுக்குத் தெரிந்தால், நோ ஷாலினி, விதூஷே போதும் என்று வந்திருப்பாரே!

எங்கே இன்னமும் வாலைக் காணோம்?

விக்னேஷ்வரி said...

என்ன வித்யா... திடீர்ன்னு இப்படி இறங்கிட்டீங்க...
இப்போ இருக்குற காலத்துக்கு அவசியமான பதிவு தான்.

"பேபிக்கு பின்னல் தோடு எல்லாம் இல்லையே? பாய் மாதிரி மொட்டையா இருக்கே. எப்படிம்மா பொண்ணுன்னு கண்டு பிடிச்சா அவ அம்மா?" என்றாள். //
ஹாஹாஹா.... So cute.

நசரேயன் said...

//விஷால்-லும் நிஷாந்த்-தும் இருக்கான்ல ... இவங்கதான் கேர்ள்-சை அடிப்பாங்க. ஸ்நாக்ஸ்-சை எல்லாம் பிடுங்கி சாப்ட்ருவாங்க... மிஸ் அடிச்சாக் கூட பயப்படவே மாட்டாங்க. இவங்க மட்டும் தான் ரவ்டீஸ் மா... "//

:):):)

கமலேஷ் said...

மிகவும் பயனுள்ள பதிவு...உங்களின் பதிவு நிச்சயமாய் நிறைய பெண்களை சிந்திக்க வைக்கும்...வாழ்த்துக்கள்...

பா.ராஜாராம் said...

excelent வித்யா!

ரெண்டு பகுதியும் வாசித்துவிட்டேன்.மிக அற்புதமான,மிக தேவையான பதிவும் பகிர்வும்!

மேலும் உங்களின் சுவராசிய நடை!

தொடருங்க மக்கா..

Anonymous said...

ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க வித்யா. குட் டச் பேட் டச் குழந்தைகளுக்கு நிறைய பெற்றோர் சொல்லித்தருவதேயில்லை.

Sundar சுந்தர் said...

அருமை!

ரோஸ்விக் said...

அருமையா சொல்லீருக்கீங்க... கண்டிப்பா ஏதாவது இதழ்களுக்கு அனுப்பி வைங்க. பலரும் படித்து பயன்படட்டும்...

Vidhoosh said...

அருமையான கருத்துக்கு நன்றி புதுகைத தென்றல்.

அது சரி. கி. மூ. எதையாவது கொளுத்திப் போட்டுவிடுவதே பிழைப்பை போச்சு உங்களுக்கு. இதுக்கு வால்பையன் துணை வேறு அழைக்கிறீர்களா? :))

விக்னேஷ்வரி: நன்றி. காலம் கடந்து போன பின் கண்ணீர் விட்டு மடியில் சாய்ந்த என் சக பணியாளினியின் மகளைப் பார்த்த பின் இதை பதிவாக எழுதியே ஆகவேண்டும் என்று தோன்றியது. :( பெண்களே ஜாக்கிரதை என்று சொல்லிக் கொண்டே இருக்கிறேன் சில நேரங்களில் "Mind your business" என்று அவர்கள் சீறினாலும் :(

நன்றி நசரேயன்

நன்றி கமலேஷ்

நன்றி ராஜாராம். :)

சின்ன அம்மிணி: எட்டு வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு இதெல்லாம் சொல்லிக் கொடுத்தாலும் புரியாது. ஞே என்று முழிக்கும். பாவம். அவர்கள்தான் இம்மாதிரியான கயவர்களுக்கு எளிதில் இரையாகி விடுகிறார்கள். :(

சுந்தர்: ஆணிகள் குறைந்த மாதிரி இருக்கு. :)) தலை அடிக்கிடி தெரிகிறதே இப்போல்லாம். நீயும் எழுத ஆரம்பிக்கலாமே. ரொம்ப நாளாச்சு உன் எழுத்துக்களைப் படித்து.

ரோஸ்விக்: நன்றிங்க. அனுப்பிகிறேன்.


-வித்யா

Sundar சுந்தர் said...

ஆணி பார்த்து பல வருஷம் ஆச்சி. ரொம்ப நாளா ஆப்பு தான் - அப்பப்ப கொஞ்சம் கேப்பும் உண்டு : )

Radhakrishnan said...

அட்டகாசமான பதிவு.

சமயோசிதமாக யோசித்துச் செயல்பட வேண்டும் என்பதை புரிய வைக்கும் விதத்தில் மிகவும் தெள்ளத் தெளிவாக எழுதப்பட்ட அருமையான விசயங்கள்.

வேகத்தைவிட விவேகம் மிகவும் முக்கியம் எனும் அறிவுறுத்தும் நல்லதொரு பதிவு.

மிக்க நன்றி வித்யா.

மந்திரன் said...

//பாலியல் தாக்குதல் எல்லாமே பெரும்பாலும் அந்த நிமிட மனப் பிழற்வு தான்//
எத்தனை நாள்தான் இப்படி நம்பி ஏமாற போகிறீர்கள் .
இது அந்த நிமிட பிறழ்வு இல்லை . அது விஷம் வெளிப்பட்ட தருணம் .
பல நாள் கோரப் பசிக்கு , அன்றைக்கு ஒரு பெண்ணின் உடல் . அந்த ஆணின் மனம் முழுதும் கரை படிந்ததே .
அந்த தருணத்தில் அல்ல . அதற்க்கு முன்னரே .

உங்கள் பதிவு தன்னம்பிக்கைக்கு பதிலாக பயத்தையே தருகிறது .
ஒரு பெண்ணை உடலால் வென்றால் , அவள் தோற்று விட்டால் என்று நினைக்கும் எல்லா ஆண்களை போலவே நீங்கள் கூட எழுதலாமா ?

Vidhoosh said...

மந்திரன் நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் நடைமுறையில் தம் மனைவியைத் தவிர மற்ற பெண்களை திரும்பிக் கூட பார்க்காதவர் யாராவது உண்டா? நிச்சயம் கிடையாது. (அதே தான் பெண்களுக்கும்)

எல்லோர் மனதிலும் ரசனை உண்டு. அதற்கான அளவு கோள்களும், கற்பனையின் எல்லைகளும் ஆளுக்கேத்த மாதிரி வேறுபடும்.

கற்பனையோடு நிறுத்திக் கொள்ளாமல் நடைமுறையில், எல்லையை யார் எப்போது மீறுகிறார்கள் என்பதுதான் கவலை. எல்லையை மீற ஒரு நிமிஷம் கூடத் தேவையில்லை என்பதே அதன் பொருள்.

-======

////உங்கள் பதிவு தன்னம்பிக்கைக்கு பதிலாக பயத்தையே தருகிறது .
ஒரு பெண்ணை உடலால் வென்றால் , அவள் தோற்று விட்டால் என்று நினைக்கும் எல்லா ஆண்களை போலவே நீங்கள் கூட எழுதலாமா ?///

உடலால் வெல்வது என்பது பெண்ணின் சம்மதத்தையும் பொறுத்தது. மேலும், யாருமே கற்பை விட சுய மரியாதையை இழக்க கூடாது என்பது இதில் மறைபொருள். பலாத்காரத்திற்கு ஆளானவர்களை, முக்கியமாகப் பெண்களை, முடிந்தால் ஒரு முறை சந்தித்துப் பேசிப் பாருங்கள். அவள் மனம் எத்தனை பாதிப்பு அடைந்திருக்கிறது என்று. அவர்களுக்கு தோல்வியை விடக் கொடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அவர்கள் வாழ்நாளில் பாதிக்கும் மேல் கடந்து போய் விடுகிறது. உத்தியோகம், திருமண வாழ்க்கை, என்பதையெல்லாம் விடுங்கள். பலாத்காரத்திற்கு ஆளாகி கை கால் முடங்கிப் போய் பாத்ரூம் செல்லக் கூட அடுத்தவர் உதவியை நாடும் நிலையில் இருக்கும் பெண்களையோ, நிரந்தர மன நோயாளியானவர்கலையோ, கோமாவில் கிடக்கும் பெண்களையோ பற்றி நீங்கள் கேள்வியாவது பட்டிருக்கிறீர்களா?

இன்றைய சூழலில், பெருநகரங்களில் (தில்லி, பம்பாய் பெங்களூர், சென்னை) போன்ற இடங்களில் நான் பார்த்த வரை, ஆணோ பெண்ணோ, உண்மையிலேயே இரவில் தனித்துப் பயணம் செய்வது பயம் கொடுப்பதாகத்தான் இருக்கிறது.

நாலு பேர் சொல்றது நிற்கும் போது அடிதடி சண்டையில் இறங்குவது தனுஷுக்கும் விஜய்க்கும் கூட சினிமாவில் மட்டுமே சாத்தியப் படுகிறது.

நிஜத்தில் எத்தனை பலசாலியாக இருந்தாலும், நாலைந்து பேர் சேர்த்து தாக்கும் போது, எத்தனை நேரம் போராடிக் கொண்டிருக்க முடியும் என்று நம்புகிறீர்கள்?

Vidhoosh said...

////எத்தனை நாள்தான் இப்படி நம்பி ஏமாற போகிறீர்கள் .///

நிதர்சனத்தில் இப்படித்தான் பெரும்பாலும் இருக்கிறது.
எனக்கு அப்படி ஆகவில்லை என்று "பூனை கண் மூடிக்கொண்டது போல, பொய்யான ஆறுதல் கூறி சமாதனம் செய்து கொள்வது மட்டும் தான் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது.

மந்திரன் said...

//உடலால் வெல்வது என்பது பெண்ணின் சம்மதத்தையும் பொறுத்தது.//
நான் பலாத்காரத்தை குறிப்பிட்டேன் .அதில் எந்த அளவுக்கு பெண்ணின் சம்மதம் தேவை என்று தெரியவில்லை .
//யாருமே கற்பை விட சுய மரியாதையை//
கற்பு , இது எனக்கு விளங்கமுடியாத ஒன்று .
நான் சொல்ல வந்தது , ஒரு ஆணால் பெண் ஒருத்தி பாலியல் வற்புறுத்தலுக்கு ஆளாகும் போது அந்த ஆணை எதிர்க்காதீர்கள் என்ற ரீதியில் உங்கள் பதிவு இருந்ததை சுட்டிக் காட்டத்தான் . இது அலுவுலகம் , கல்லுரி , இரவுஎங்கும் நடக்கலாம் . அதன் தன்மை கொஞ்சம் மாறுபடும் .

நாய் கூட , அடுத்தவர்கள் அத்து மீறும் போது குறைக்கிறது ,கடிக்கிறது .
நாம் மனிதர்கள்

Vidhoosh said...

////பாலியல் வற்புறுத்தலுக்கு ஆளாகும் போது அந்த ஆணை எதிர்க்காதீர்கள் என்ற ரீதியில் ///

எதிர்ப்பது முக்கியமா, தப்பிப்பது முக்கியமா?


////நான் பலாத்காரத்தை குறிப்பிட்டேன் .அதில் எந்த அளவுக்கு பெண்ணின் சம்மதம் தேவை என்று தெரியவில்லை .///

.......இம்மாதிரிச் சூழ்நிலையில் முடிந்தவரை பதட்டப் படாமல், புத்திசாலித்தனமாகப் பேசி கதவுகளைத் தாண்டி வெளியேற முயற்சியுங்கள். தோற்று விட்டோம் என்று நாமே நம்பாத வரை, யாராலும் நம்மை வீழ்த்த முடியாது என்பதை உறுதியாக நம்புங்கள். எந்நிலையிலும், இம்மாதிரிச் சூழலில் உங்கள் கோபத்தையோ, இயலாமையோ வெளிக்காட்டுவது உங்களைத் தோற்கச் செய்யும்........... என்று கூறி இருக்கிறேனே.

Suresh S R said...

இதே கருத்துக்களை ஒரு இளம் பெண்ணிடம் சொல்லப்போய், இப்போது என்னிடம் பேசுவது இல்லை.
பெண் சுதந்திரம் என்பது எந்த கட்டுப்பாடும், அறிவுரையும் தேவை இல்லை என்பது தான் அந்த பெண்ணின் வாதம்.

Post a Comment