இவர் அவர் அவள் - பாகம் 1

இவர்:

வாசலில் ஸ்டார் கோலம் போட்டு இரண்டு பக்கமும் ஸ்வஸ்திக் வரையப் பட்டிருந்தது. காய்ந்து போன மாவிலைகள் நிலை வாசலில் ஊசலாடிக் கொண்டிருந்தன. பச்சைக் கதவில் பெயிண்டால் வரைந்த மஞ்சள் பொட்டுக்கு நடுவே ஒரு சிவப்பு புள்ளி ஜொலித்துக் கொண்டிருந்தது. அதற்கு சற்றே மேலே ஒரு கண் திருஷ்டி கணபதி பார்த்துக் கொண்டிருந்தார். நிலைப்படியில் கோலமாவால் வரைந்த அரிசி மாவு நான்கு பார்டர் கோடுகளையும், இடையில் இருந்த சுழிக்களையும் பிள்ளையார் எறும்பு மொய்த்துக் கொண்டிருந்தன.

வீடு மேற்கூரையைத் தாங்கும் தேக்கு மர உத்திரத்தில் கட்டியிருந்த தாம்புக் கயிற்றில் நான்கைந்து முடிச்சுக்கள் பிசுக்கேறிக் கிடந்தன. அதில் பரிதாபமாய் சுருண்டு கொண்டு கிடந்த ஒரு வாழைத் தாரில் இருந்த ஒரே ஒரு வாழை பழமும் கனிந்து சொட்டிக் கொண்டிருந்தது.

ஊதுபத்தி வாசனை மெல்லியதாகவும், சாம்பிராணி அடர்த்தியாகவும் சூழ்ந்து கொண்டு, கண்ணீர் புகை பரப்பிக் கொண்டிருந்தது. ஒரே ஒரு நீள கூடமும், தாழ்வாரமும் அதை ஒட்டிய சமையல் அறையும் என்று வீடு புகைக் கருப்பேரி, சூடச் சாம்பல் பூசி, சிவனே என்று கிடந்தது.

கூடத்து ஓரத்தில் சுவரெல்லாம் ஆணி அடித்து பொக்கியத்தில் அங்கிங்குமாக காலெண்டர் லட்சுமிகளும் பிள்ளையார்களும் வேங்கடாசலபதியும் அருள் மழை பொழிந்து கொண்டிருந்தார்கள். ஓரத்தில் ஒரு ஸ்டீல் நாற்காலி ஒன்று மடித்து இருந்தது. வீடு முழுக்கத் தண்ணீரைத் தெளித்து மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார் இவர்.

இவர் அரசு பள்ளியில் வாத்தியார். மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்துவதை விட, இராமாயண மகாபாரதம் பேசுவதில் அதிக விருப்பம். அவரைச் சொல்லியும் குற்றமில்லை. இவரே அதைப் படித்துப் படித்து வேறு எதையும் பாடம் பண்ணாமல் இருக்கிறபடியால் பாடங்கள் நடத்தும் முயற்சிகளை வீணாகச் செய்வதில்லை.

இவரது பல்வேறு சத்-அசத்துவ குணங்களில் முக்கியமான ஒன்று ஆஸ்தீகவாதியாக இருத்தல். மனைவி உயிரோடு இல்லாததால் குழந்தைகளும் இல்லை. ஒண்டிக் கட்டை.

"இங்கிலீஷ்ல கூட the worst moment for the atheist is when he is really thankful and has nobody to thank அப்டீன்னு சொல்லி இருக்காங்க தெரியுமா?"

=================================================================================
அவர்:

அரக்கு வண்ணத்தில் ஸ்டிக்கர் கோலம் ஒட்டிய வாசல். ஓரத்தில் சற்றே தள்ளி நிறுத்தப் பட்டிருந்த ஒரு பஜாஜ் ஸ்கூட்டருக்கு கையாலே வெளிர் பச்சை வண்ண பெயின்ட் அடிக்கப்பட்டிருந்தது. மரக் கலரில் இருந்த கதவுக்கு சற்றே மேலே 'என்னைப் பார் சிரி' என்று சொல்லிக் கொண்டு ஏதோ ஒரு சினிமா நடிகையின் படம் இருந்தது. நிலைப்படியின் இரண்டு பக்கமும் கொஞ்சமாய் மணல் சேர்ந்து சிவப்பு எறும்பு குடும்பமும் அங்கேயே குடி இருந்தது.

உத்திரத்தில் இருந்து நீண்ட தாம்புக் கயிற்றின் முனை தலை நுழைக்கும் படியாக சுருக்கு போட்டு முடிச்சிடப்பட்டிருந்தது. அதில் மாட்டப்பட்டிருந்த ஒரு ஈரத் துண்டிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. வீடெல்லாம் சிகரட் புகை நாசியைத் துளைத்துத் தொண்டையைக் கரிக்கும் மணம் சூழ்ந்திருந்தது. ஒட்டடை அடிக்கப்படாமல் அங்கங்கே கருப்பாய் ஊசலாடிக் கொண்டிருந்தன.

செல்லோ டேப் கொண்டு ஒட்டப் பட்ட ஓரம் மடங்கிய போஸ்டரில் ரவீனா டாண்டன் புடவை கட்டி மோனப் புன்னகை புரிந்து கொண்டிருந்தாள். ஜன்னலில் இருந்த ஒத்தை ஸ்டீரியோ டேப் ரிகார்டரில் பீதோவன் இசை மென்மையாய் பரவிக் கொண்டிருந்தது.
அருகிருந்த இரும்பு அலமாரி முழுதும் சிவப்பு அட்டை போட்ட புத்தகங்கள். கீழே சற்று தள்ளி மூங்கில் மோடா ஒன்று இருந்தது. ஒரு கையில் தேநீர் கோப்பையும் ஒரு கையில் புத்தகமுமாய் அமர்ந்திருக்கிறார் அவர்.

இவர் ஒரு வக்கீல். பணம் பொருள் சம்பாதிப்பதை விட சட்டத்தைக் காப்பாற்றுவதில் ரொம்ப ஆர்வம். நேர்மையான காரணங்கள் இருக்கிறது என்று தெரிந்தால் மட்டுமே வழக்காட சம்மதிப்பார் இவர். அதனாலேயே அதிக வழக்குகள் தோல்வி அடைந்து இப்போது அதிகம் வழக்குகள் ஏதும் இல்லாமல் சட்ட புத்தகங்களைக் கொண்டு ஒரு 'லா டைஜஸ்ட்' என்ற பெயரில் மாத இதழ் ஒன்றை நடத்தி கடனாளி ஆகி கொண்டிருக்கிறார் இவர்.

இவரது பல்வேறு சத்-அசத்துவ குணங்களில் முக்கியமான ஒன்று நாத்தீகவாதியாக இருத்தல். நிரந்தர வருமானம் இல்லாததால் யாரும் பெண் கொடுக்கவில்லை. ஒண்டிக் கட்டை.

"அதென்னது அது... ஏதோ சொல்வாளே all thinking men are atheists அப்டீன்னு... அதான் நான்"

=================================================================================
அவள்:

இந்தக் கதவுக்கு அருகில் சின்னதாய் ஒரு ரோஜாச்செடி தொட்டியும் அந்தப் பக்கம் பணம் நிறைய சேரும் என்ற நம்பிக்கையில் வைத்து ஜன்னலில் ஏற்றி விடப்பட்ட மணி பிளான்ட் கொடியும். வாசற்படிக்கு அருகில் சங்கிலியால் கட்டப் பட்ட ஒரு ஸ்கூட்டி, சீட்டு கிழிந்து ஸ்பாஞ் வெளி வந்திருந்தது. ஸ்கூட்டியின் மேற்புறமெல்லாம் ஏகப்பட்ட கீறல் விழுந்து, ஃபைபர் உடைந்திருந்தது. கதவுக்கு சற்றே மேலே ஹார்ஸ் ஷூ ஒன்று மாட்டப்பட்டிருந்தது. நிலைப் படியில் ஒரு சின்ன கப்பில் சர்க்கரை வைக்கப் பட்டிருந்தது. அதை சுற்றியும் எறும்புகள் மொய்த்துக் கொண்டிருந்தன.

உத்திரத்தில் சின்னச் சின்ன வளையங்கள் பொருத்தி நீளமாய் திரைச்சீலை தொங்கிக் கொண்டு அந்த அறையை இரண்டாய் பிரித்து இருந்தது. அவளுக்கு அம்மா அப்பா இருவரும் முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பதைப் போன்ற ஒரு புகைப்படம் சுவற்றில் இருந்தது. அம்மா அப்பா இருவருக்கு மட்டும் பொட்டு வைத்து கொஞ்சமாய் உதிர்ந்து ஃபிரேம் ஓரத்தில் சந்தனம் குங்குமம் உதிர்ந்து சேர்ந்திருந்தது. தொலைக்காட்சிப் பெட்டியில் என்.டி. டீவியில் பிரணாய் ராய் செய்திகள் படித்துக் கொண்டிருந்தார்.

அவள் டீவியில் செய்தி வாசிப்பவள். கலவரம் ஒன்றில் காயமுற்ற தாய் தந்தையை பணம் இல்லாததால் மருத்துவம் செய்ய முடியாமல், இருவரையும் இழந்து தனித்து இருப்பவள். சினிமாவில் நடித்த்தால் பணமும் புகழும் கிடைக்கும் என்று நம்பி எப்படியாவது சினிமா நடிகை ஆக வேண்டும் என்பதே அவள் லட்சியம். துக்கம் சந்தோஷம் இரண்டையுமே அவளுக்கு செய்தி ஸ்க்ரோல்ஸ்லைடாக மட்டுமே தெரியும் அளவுக்கு உணர்வுகளால் இறுகி இருப்பவள்.

இவளது பல்வேறு சத்-அசத்துவ குணங்களில் முக்கியமான ஒன்று யாரை பற்றியும் எதை பற்றியும் கவலைப்படாமல் இருத்தல். முன்னின்று எடுத்து சொல்லி திருமணம் நடத்த யாரும் இல்லாததால் ஒண்டிக் கட்டை.

"it is regarded by the common people as true, by the wise as false, and by the rulers as useful. பணமிருந்தால் யு கேன் ரூல் தி வேர்ல்ட்"
=================================================================================

...............தொடரும்...............

29 comments:

இராகவன் நைஜிரியா said...

ஆரம்பம் சுவையாக இருக்கின்றது.

Paleo God said...

..தொடரும்........//

பார்க்கலாம்...!
:)

ரவி said...

ரயில்வே ஸ்டேஷனில் மாலைமதி வாங்கினேன். இவர் அவர் அவள் என்ற புத்தகம். யாரோ வித்யா என்ற எழுத்தாளர் அருமையாக எழுதி இருந்த ....

ஜூலை 2 வருடம் 2011

பாச மலர் / Paasa Malar said...

வார்த்தை விவரிப்பில் காட்சிகள் கண்முன்னே வருகின்றன..தொடருங்கள்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

காட்சிகள் சுவையாக இருக்கின்றது...தொடருங்கள்...

Prasanna said...

நைஸ்.. ஆய்த எழுத்தா இவங்க மூணு பேரும் :)

சுந்தரா said...

ஆரம்ப அறிமுகம் நல்லாயிருக்கு வித்யா. தொடருங்க.

நேசமித்ரன் said...

கதை துவங்கும் புலம் ,பாத்திரங்களின் வாழ்நிலை
அவர்களை நிறுத்தி வைத்துப் பார்க்கும் இடம் , தொடருக்கு உரிய நீண்ட வர்ணிப்புகள் ம்ம்ம்

மீதம் எதிர்பார்ப்பில்...!

Vidhoosh said...

நன்றி ராகவன் நைஜீரியா.. எங்க கும்மிருவீங்களோன்னு பயந்தேன் :))

நன்றி ஷங்கர்.. ஹும்ம்..

நன்றி ரவி... :))

நன்றி பாச மலர்

நன்றி டிவிஆர் சார்.

நன்றி பிரசன்னா

நன்றி சுந்தரா

நன்றி நேசன். எதிர்பார்பில்.. :) ஹும்ம்.. எழுதி முடிச்சாச்சு கொஞ்சமா நிறையா பயந்து கொண்டே தான் வெளி இடுகிறேன். திரைக்கதை ஸ்டைலில் எழுதி பார்க்கலாம்னு ஒரு அல்ப ஆசை. :)) அப்படித்தான் இருக்கான்னு இன்னும் கேபிள் சங்கர் கிட்ட கேட்கலை. வெட்டோ வெட்டுன்னு வெட்டி எரிந்து கொண்டிருக்கேன். மூன்றே பாகம்தான் மிஞ்சி இருக்கு. :))

வனங்கள் மட்டும் வெளியிட தைரியம் வரவில்லை, இன்னும். கொஞ்சம் அவநம்பிக்கை வந்து விட்டது அந்தக் கதை மேல.

எல் கே said...

நல்ல துவக்கம்

VISA said...

Good narration & Description.

Chitra said...

Good start. :-)

ருத்ர வீணை® said...

ஒரு அழகிய குறும்படம் பாதியிலேயே நிற்கிறது.. சீக்கிரம் தொடருங்க..

பத்மா said...

அழகான observation வித்யா .இந்த மூணும் எதில் எப்பிடி இணையும் என்ற எதிர்பார்ப்புடன்.......

ஜில்தண்ணி said...

பின்னிபுட்டீங்க போங்க

நேசமித்ரன் said...

//வனங்கள் மட்டும் வெளியிட தைரியம் வரவில்லை,//

கருணையே பார்க்காம வெட்டுங்க திருத்துங்க

ஆனா வெளியிடுங்க

பார்த்துக்கலாம் !

:)

ஹேமா said...

நல்லதொரு கதையின் எதிர்பார்ப்பு.
தொடருங்கள் விதூஷ்.

Sundar சுந்தர் said...

புது தொனி....எதிர்பார்ப்பை தூண்டுது. நன்றாய் வளர்க்க வாழ்த்துக்கள்.
அவள் அவர் இவர் ....கோர்வை இன்னும் சுவாரஸ்யம் சேர்க்குமென நினைக்கிறேன். characters leave an emerging image. ..camera is clear enough ...but I wished it moved faster.

தமிழ் மதுரம் said...

தேடல்கள் நிறைந்த படி, எதிர்ப்பார்ப்பை வரவழைத்தபடி கதிஐ செல்கிறது. மிகுதியைப் படிக்க ஆவலாக உள்ளோம்.

எம்.எம்.அப்துல்லா said...

அட!

"உழவன்" "Uzhavan" said...

தொடக்கமே வித்தியாசமாய் இருக்கு.. அசத்துங்க. காத்திருக்கிறோம் :-)

ஹுஸைனம்மா said...

மூன்று பேரும் இணையும் புள்ளி எதிர்பார்த்து...

INDIA 2121 said...

சுவையாக இருக்கின்றது.
visit my blog
www.vaalpaiyyan.blogspot.com
JUNIOR VAAL PAIYYAN

நசரேயன் said...

மூணு கட்டை பிரமச்சாரிகளும் தொடர்ந்து போகட்டும்...

ஆமா காசு இருந்தா தான் ரூல்டு பேப்பர் வாங்க முடியும்..

பா.ராஜாராம் said...

அருமையான தொடக்கம் சகோ.

வர்ணனைகள்,எழுத்தாளர் லட்சணம். :-)

தொடரனும்..

சுந்தர்ஜி said...

அசத்தலான வர்ணணை.மூன்று தளங்களில் நகரும் விதம் எப்போ சேரும் என்று.....

anujanya said...

ஹ்ம்ம், சுவாரஸ்யமா தான் இருக்கு. ரவியின் பின்னூட்டம் பார்த்த பின், இந்தக் கதை 'மாலைமதி' தரம் தாண்டி இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிடுவது போல் புரிந்து கொண்டேன். தவறாகவும் இருக்கலாம். பல்வேறு விதமான இடுகைகள் வருவதற்காகவே உங்களைப் பாராட்ட வேண்டும் வித்யா.

அனுஜன்யா

Vidhoosh said...

நன்றி எல்.கே.
நன்றி விசா
நன்றி சித்ரா
நன்றி ருத்ரவீணை
நன்றி பத்மா
நன்றி ஜில்தண்ணி
நன்றி நேசமித்திரன்: வனத்தை வெட்டி வெட்டி இப்போ ஆறு பக்கம் மட்டும் நிக்குது. மனசுக்கு இன்னும் ஒத்துக்கலை. :))
நன்றி ஹேமா
நன்றி சுந்தர். ம்ம் சரி - சரியா இல்லன்னா போன் பண்ணி கொட்டுவாய் என் தலையில் திட்டுக்களை :)) பார்க்கலாம்.
நன்றி கமல்.
அப்துல்லா: ஆதி பதிவுல ரொம்ப கும்மி போலருக்கு. நலம்தானே? :))
நன்றி உழவன்.
நன்றி ஹுசைனம்மா.
நன்றி வால்பையன். நீங்க வால் அருண் மகனா.. இல்லை.. பதினாறு அடியும் முப்பத்திரண்டு அடியும் என்று!!
நசரேயன்: கரெக்ட் :) அப்பா.. இத்தோட விட்டீங்களே. :))
பா.ரா. அண்ணே: நன்றி அண்ணே.
நன்றி சுந்தர்ஜி.
நன்றி அனுஜன்யா. போங்க சார், மாலைமதியாவது வாரமலராவது. இது பக்கோடா பேப்பர் சார். உங்க பொதுவான போது மாதிரின்னு வேணா வச்சுக்கலாம்..ன்னு சொன்னா அது உங்களை insult செஞ்சா மாதிரி ஆகிடாது இல்ல.. ;)

ஹும்ம்.. சும்மா இருக்கும் நேரத்தில் எதையாவது முயற்சி பண்ணிகிட்டே இருக்கணும்னுதான். முயற்சி பண்ணிகிட்டே இருக்கும் போது சும்மா இருக்கணும்னுதான்.

எவ்ளோவோ... குறைந்தது, இதுக்காவது சாகித்ய அகாடெமி கிடைக்கணும் LOL...

Radhakrishnan said...

இவர் அவர் அவள் நன்றாக இருக்கிறது. வர்ணித்த விதம் அருமை.

Post a Comment