கத்தரிக்கா யாபாரமா


ஜெனடிகல்லி மாடிபைடு ப்ரிஞ்சால் என்று இங்கிலீஷுல சொல்லிட்டா .... கத்தரிக்காயும் வெஸ்டனைஸ் ஆயுடுமா... அதெப்படின்னேன்?? கத்திரிக்கா அடைச்ச கறியையும், கத்திரிக்க வத்தக்குழம்பையும் மேக் டொனால்ட் ரேஞ்சுக்கு கேவலப் படுத்தலாம்?? 'ஈட் அண்ட் டை (EAT AND DIE') ன்னு ஒரு சாப்பாட்டுப் போட்டி வேற வச்சு கொண்டாடறான் இதை.

வெங்காயம் எப்படி காங்கிரஸ் கவர்மெண்ட அன்னிக்கு கவுத்துதோ, அதே மாதிரி இன்னிக்கு ஆயிடாம பாத்துக்கோங்கோ... என்னவோப்பா நான் சொல்லிட்டேன். அப்புறம் பண்றத பண்ணிபிட்டு பரிகார ஹோமம் அதுஇதுன்னு அம்பிய வரச் சொல்ல ப்டாதூன்னேன். ஹுக்கும்..

இப்ப விளையற செடீல்லல்லாம் ஏற்கனவே உரத்த தெளிச்சு தெளிச்சு சக்கயத்தான் சாப்டுண்டுட்ருக்கோம். இதுல பூச்சிபொட்டு வராதுன்னு விஷத்த சாப்ட முடியுமா? காலப்போக்குல இவன் வச்சதுதான் விலைன்னு ஆயிடும். நிலத்துல பாடுபடர விவசாயி தலேல துண்டையும் வயத்துல ஈரத்துணியையும் கட்டிண்டு தெருவுல நிக்க வேண்டியதுதான். ஆமா, அமெரிக்கா யூரோப்காரனுக்கெல்லாம் ஆராய்ச்சி பண்ண இந்தியாதான் கிடைச்சுதா?

போறபோக்குல இங்க போயி உங்கள் பெட்டிஷனையும் அனுப்பிட்டுப் போங்கோ. ஊதற சங்க ஊதிடலாம்... அஸ்வத்தாமா நீதான் வரணும்.


ஜெனடிகல்லி மாடிபைடு (genetically modified / GM) உணவு வகைகள் பாக்டீரியா, சிலந்திகள், தவளைகள் போன்றவற்றிலிருந்து ஜீன்களை எடுத்து சம்பந்தமே இல்லாத படி, கோதுமை, அரிசி, கத்திரிக்காய் போன்றவற்றின் ஜெனோம்(ஜீன்)முக்குக்குள் செலுத்தி புதுசா உருவாக்குவாங்களாமே.. என்னவோ போடா மாதவா..

கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வரும்னு சொல்லுவா.. நாளைக்கு வந்து ஏன் பி.டி. கத்திரிக்காயை ஆதரிக்கக் கூடாதுங்கரத்துக்கு சொல்லறேன். இதையும் படிச்சுட்டு போங்க (நன்றி தினகரன்).

‘பேஸ்லெஸ் துரிஞ்சீயஸ்’ என்ற மரபணுவை கொண்டு, உயிர் தொழில்நுட்ப அடிப்படையில் கத்தரிக்காயில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் பலன்தான் பி.டி.கத்தரிக்காய். அமெரிக்காவில் முதன்முதலாக இந்த ஆராய்ச்சி மூலம் பருத்தி, மக்காச்சோளம், சோயா மொச்சை போன்றவற்றில் புதிய ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பி.டி.பருத்தியில் காய்ப்புழுக்கள் கட்டுப்படுத்தப்பட்டு, மகசூல் பன்மடங்கு பெருகியது.

இந்தியாவில் பி.டி.பருத்திக்கான ஆராய்ச்சி 1996ம் ஆண்டில் தொடங்கியபோதே எதிர்ப்பும் கிளம்பியது. ஆனாலும், மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த ஆராயச்சியின் முடிவை, மத்திய அரசின் மரபணு தொழில்நுட்ப அங்கீகாரக் குழு ஆய்வு செய்தது. எந்த சுகாதாரக் கேடும் இல்லை, ஆடு மாடுகள் சாகவில்லை என்பதை உறுதி செய்தது. பின்னர் 2002ல் வர்த்தக பயன்பாட்டிற்கு அனுமதி தந்தது.

பழைய பருத்தி ரகத்தை பயிரிட்டால், காய்ப்புழுக்களை கட்டுப்படுத்த 10 முதல் 12 தடவை பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க வேண்டும். பி.டி.ரகத்தில், 2 முறை மருந்து அடித்தால் போதும். விவசாயிகளுக்கு செலவு மிச்சம். பழைய ரக பருத்தி ஆறு முறை வெடிக்கும். உடனடியாக அறுவடை செய்யாவிட்டால் வீணாகி விடும். பி.டி.ரகத்திற்கு அந்த பிரச்னை இல்லை. ஒரே முறைதான் வெடிக்கும். அறுவடை எளிதாக முடிந்து விடும். இந்த நன்மைகள் காரணமாக, 7 ஆண்டுகளில் ஒட்டுமொத்த பருத்தி சாகுபடி பகுதிகளில் 80 சதவீதத்தை பி.டி.பருத்தி பிடித்துக் கொண்டது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசபூபதி கூறுகையில், ‘2002க்கு முன்னர் இந்தியாவின் தேவை 24 மில்லியன் பேல் பருத்தி. ஆனால், 16 மில்லியன் பேல்கள்தான் உற்பத்தி செய்யப்பட்டன. மீதியை இறக்குமதி செய்தோம். பி.டி.ரகத்திற்கு மாறிய பின்னர், 32 மில்லியன் பேல் உற்பத்தி செய்கிறோம். தேவைக்கு போக மீதியை ஏற்றுமதி செய்கிறோம். இதுதான் அறிவியல் வளர்ச்சியின் பயன். விவசாயிகள் இதை முழுமையாக ஏற்றுக் கொண்டதும் முக்கிய காரணம். அதிலும், பொள்ளாச்சி அருகே வடக்கிபாளையம் கிராமத்து விவசாயிகள் மழையை நம்பி மானாவாரி சாகுபடி செய்து, ஏக்கருக்கு 12 குவிண்டால் மகசூல் பார்க்கின்றனர்’ என்றார்.

இந்த ஆராய்ச்சியின் அடுத்த கட்டம்தான் கத்தரிக்காய். நாட்டில் அதிகம் பேர் பயன்படுத்தக் கூடியது. கத்தரிக்காய் மகசூலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தவை இரு வகையான காய்ப்புழுக்கள். கத்தரிக்காயில் கிட்டத்தட்ட 70 சதவீதம் அளவுக்கு இந்த நோய் தாக்குதலால் சேதம் ஏற்பட்டது. மருந்து அடித்தாலும் இப்புழுக்கள் சாவதில்லை. அப்படியே செத்தாலும் கத்தரிக்காயில் விழும் சொத்தை நீங்குவதில்லை. இந்த குறைபாட்டை போக்க வந்ததுதான் பி.டி.கத்தரிக்காய். மரபணு மாற்றம் செய்யப்பட்டது.

அதற்கான ஆராய்ச்சியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ஈடுபட்டு, நான்கு பி.டி.ரக கத்தரிக்காய்களை கண்டுபிடித்தது.இது பற்றி துணைவேந்தர் முருகேசபூபதி கூறுகையில், ‘காய்ப்புழுக்களை கட்டுப்படுத்தக்கூடிய மரபணுக்களை கொண்டது இந்த ரகம். கோவை, மதுரை, கிள்ளிகுளம், பாலூர் ஆகிய இடங்களில் இந்த ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதனால் எந்த பக்க விளைவுகளும் இல்லை என்பதை ஆய்வு மூலம் உறுதி செய்து, மத்திய அரசின் அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது. எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், பொதுமக்கள் கருத்து கேட்டறிந்த பின்னர் வெளியிடலாம் என்று வைத்துள்ளோம். மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் இவை வர்த்தக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்’ என்றார்.

காய்ப்புழுக்கள் எப்படி உருவாகும்?

கத்தரிக்காய் செடிகள் காய்விட்டதும் அதன்மீது வண்ணத்துப்பூச்சிகள் முட்டையிடுகின்றன. அதிலிருந்து 3 நாளுக்கு பிறகு, லார்வா என்ற புழு உருவாகும். உருவான 4 மணி நேரத்திற்குள் அதை மருந்தடித்து அழிக்க வேண்டும். இல்லையேல் காய்க்குள் புகுந்துவிடும். அப்புறம் அழிக்க முடியாது. காய்க்குள் ஊடுருவக்கூடிய மருந்து உள்ளது. அதை அடித்தால் புழு சாகலாம். ஆனால், சொத்தை ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

பி.டி.ரக கத்தரிக்காயில் இந்த புழு உள்ளே போனதும் இறந்து விடும். அதற்கான மரபணு கத்தரிக்காய்க்குள் இருக்கிறது. அந்த மரபணு புழுக்களுக்குதான் விஷமாகுமே தவிர, மனிதருக்கு அல்ல. ஏனெனில் எலி, பூனை போன்ற பிராணிகளிடம் சோதனை நடத்திய பின்னர்தான் அந்த மரபணு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்கின்றனர் வேளாண் விஞ்ஞானிகள்.

கத்தரிக்காய் உற்பத்தி

தமிழகத்தில் 7676 ஹெக்டேர் பரப்பில் கத்தரிக்காய் பயிரிடப்படுகிறது. 82,049 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு ஹெக்டேருக்கு 10.6 டன் மகசூல் கிடைக்கும். இதில் 70 சதவீதம் அளவுக்கு காய்ப்புழுக்களால் சேதம் அடைகின்றன. தமிழகத்தில் 1.2 லட்சம் ஹெக்டேரில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. இதில் 90 ஆயிரம் ஹெக்டேர் வரை பி.டி.ரக பருத்திதான் பயிரிடப்படுகிறது என்பது வேளாண் பல்கலை. கூறும் புள்ளிவிவரம்.

விவசாயிகள் எதிர்ப்பு ஏன்?

பி.டி.ரகம் எனும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்க்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதுபற்றி, தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அரச்சலூர் செல்வம் கூறியதாவது:

பி.டி.ரகம் என்பது முற்றிலும் செயற்கையானது. விளைச்சலை அதிகப்படுத்தக் கூடிய ரகமும் அல்ல. கத்தரிக்காயை தாக்கக் கூடிய பூச்சிகள் என்பது பலவகை. அதில் ஒரு வகை பூச்சிகளை மட்டுமே இந்த மரபணு கட்டுப்படுத்துகிறது. இதனால் மற்ற பூச்சிகளின் வளர்ச்சி அதிகரிக்கிறது. அதை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்து தெளித்துதான் ஆக வேண்டும்.

காய்ப்புழுக்களை கட்டுப்படுத்த மரபணு மாற்றம்தான் அவசியம் என்றில்லை. ஏற்கனவே வேளாண் பல்கலைக்கழகம் பரிந்துரைத்துள்ள ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் உள்ளன. இந்த முறைப்படியும், இயற்கை விவசாய முறைப்படியும் ஆந்திராவில் 18 மாவட்டங்களில் பயிர் செய்யப்படுகிறது. பருத்தி, கத்தரி, நெல் என 35 வகை பயிர்களை பயிரிடுகின்றனர். பயிரிட்டுள்ள பரப்பில் 10 சதவீத பரப்பில் பூச்சிகளை கட்டுப்படுத்தியுள்ளனர். எனவே, மாற்று வழி இல்லை என்பதல்ல.

பி.டி. தொழில்நுட்பம் முழுமையான சோதனைக்கு உட்பட்டதல்ல. வெறும் 90 நாட்கள்தான் சோதனை செய்துள்ளனர். எனவே, இது மரபணு மாற்றமல்ல; மரபணு திணிப்பு தொழில்நுட்பம். இதன் பாதுகாப்பு தன்மை பற்றி யாருக்குமே தெரியாது. வெளிநாடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் இதனால் மலட்டுத்தன்மை அதிகரிப்பதாகவும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாகவும் கண்டுபிடித்துள்ளனர். விலங்குகளுக்கு நடத்தப்பட்ட ஆய்வில் உள்ளுறுப்புகளில் பாதிப்பு ஏற்படுவதையும் கண்டுபிடித்துள்ளனர். மனிதர்களுக்கு என்ன பாதிப்பு வருமோ?

இந்தியாவில் எந்த மூலையிலும் விவசாயிகள் இதை கேட்கவில்லை. கத்தரிக்காயை விட கரும்பு, தென்னை போன்ற பயிர்கள்தான் அதிக நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகின்றன. அதற்கு மாற்று வழி காணலாம். பருத்தி, கத்தரிக்காய் ஏற்கனவே அதிகமாக விளையக்கூடிய பொருள். அதிக விளைச்சல் தராத பயிர்களுக்கு மாற்று பயிர் கண்டுபிடித்தால் ஏற்கலாம்.

பி.டி. ரகம் என்பதால் பருத்தி அதிக விளைச்சலை தரவில்லை. ஒட்டு ரகத்திற்கே உரிய பலன்தான் அது. எல்லா விவசாயிகளும் பி.டி.பருத்திக்கு மாறியதற்கு காரணம், சாதாரண விதைகள் கிடைப்பதில்லை என்பதுதான். பி.டி. ரகத்தினால் பயிர்களுக்கு புதுவித நோய்கள் உருவாகின்றன.

மக்கள் கருத்து கேட்பு கூட்டம் இந்தியாவில் 7 இடங்களில்தான் நடத்தப்படுகின்றன. இதுவரை, கொல்கத்தா, புவனேஸ்வர், அகமதாபாத் ஆகிய இடங்களில் நடந்த கூட்டங்களில் எதிர்ப்புதான் அதிகம். மேற்கு வங்கம், ஒரிசா, பீகார், மத்திய பிரதேசம், கேரளா, கர்நாடகா, சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் பி.டி.கத்தரிக்காய்க்கு தடை விதித்துள்ளனர். இதில், மேற்கு வங்கம், பீகார், ஒரிசாவில்தான் 75 சதவீத கத்தரிக்காய் விளைகிறது.


-0-

28 comments:

Thenammai Lakshmanan said...

கத்திரிக்காயும் சரி கீரைகளும் சரி இப்போவெல்லாம் பழைய ருசியோட இருப்பதில்ல சிலசமயம் வாயில் வைக்க முடியாதபடி மருந்து நாற்றம் வேற என்ன சொல்றது விதூஷி அதெல்லாம் நம்ம காலம் கத்திரிக்காய் மெழுகுவரட்டி கத்திரிக்கய் ரசவாங்கி வத்தக்குழம்பு எல்லாம் இப்பொ ருசி போயிருச்சு கரைக்குடியில் பொங்கல் சமயம் பெட்டிக் கத்திரிக்காய் கிலோ 100 ரூபாய் வித்யா

எறும்பு said...

ரெம்ப வருசத்துக்கு முன்னாடி பொதிகைல வயலும் வாழ்வும் பார்த்தது... உங்க பதிவ படிச்சது வயலும் வாழ்வும் பார்த்த எபெக்டு
:)

எறும்பு said...

//மனிதர்களுக்கு என்ன பாதிப்பு வருமோ?//

எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள் இந்தியர்கள்...
பறவை காய்ச்சல், பன்னி காய்ச்சல், பூகம்பம், தீவிரவாதம், ஊழல், எவ்வளவோ பார்த்துட்டம் பிசாத்து கத்திரிக்கா இத பாக்க மாட்டமா??
:)

கபீஷ் said...

ரொம்ப ரொம்ப நல்ல இடுகை. நன்றீஸ். நாளைக்கு வெயிட்டீஸ்

அமிர்தவர்ஷினி அம்மா said...

தகவலுக்கு நன்றி.

பி.டி, ஏ.டி அப்படிங்கற கஷ்டத்துக்கு இப்ப இருக்குற கத்தரிக்காய்லியே நாலு காய் வாங்கி ஒன்னு சொத்தைன்னு தூக்கி போட்டுலாம் போல :)

Paleo God said...

கத்தரிக்காவ திங்கற பூச்சி சாவனும்னா, அத திங்கற மனுஷ பய மட்டும் வாழனுமா? அப்ப கத்தரிக்கா மேல ஒருத்தருக்கும் ஈவு இரக்கமே இல்லையா..

மாதவா..இதெல்லாம் கேக்க ஆளில்லையா..

:)

துளசி கோபால் said...

இந்தியாவுலே சாமி இருக்கார்ப்பா!!!!!

இவ்வளவு அழுக்கு, ரோகம், கலப்படம்,
இது மருந்து மொதக்கொண்டு சாப்பிடும் சாமான் வரை) இருந்தும் ஜனங்கள் பல்கிப்பெருகி வளர்வது கண்டு எனக்கு 'சாமி' இங்கே இருக்கார்ன்னு நம்பிக்கை வந்துருச்சுப்பா.

எறும்பு சொன்னதுபோல அத்தோட இது ஒன்னுன்னு இருக்கப்போறோம்.

அமித்து அம்மா,

நாலு வாங்கிச் சொத்தைன்னு மூணைத் தூக்கிப்போடணும்:-)

Vidhoosh said...

ரொம்ப நன்றி தேனம்மை, எறும்பு (உங்களுக்கு ரொம்ப பொறுமை சாமீ), அமித்து அம்மா.

:( என்ன செய்ய கொஞ்ச நாள் கழிச்சு பருத்தி மாதிரியே சாதா கத்திரிக்காயும் கிடைக்காது:(

திடீர்ன்னு ஒரு நாள் ரசவாங்கி சாப்டனும்னு ஆசைபட்டா எறும்பு வழிகாட்ட, "கத்தரிக்காய் மீது பரிதாபப் படுவோர் சங்க"த்தின் தானை தனித் தலைவர் மாண்புமிகு "பலா"ஷங்கர் வீட்டுக்கு போயிடலாம்.

Paleo God said...

தாராளமா வாங்க.. என் வீட்ட போட்டோ எடுத்து எறும்பு என் பேரோட அவர் பக்கத்துல போட்டிருக்கார்.. விலாசம் நோட் பண்ணிக்குங்க..:))

Radhakrishnan said...

சில மாற்றங்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியாதவையே. அறிவியல் தொழில்நுட்பத்தால் ஏற்படும் விளைவுகள் உடனடியாகத் தெரிந்து கொள்ள இயலாதவைகளும் கூட. கத்தரிக்காய் பற்றியும், மரபணு தொழில்நுட்பம் பற்றியும் நல்லதொரு அலசல்.

ஹுஸைனம்மா said...

விரிவா, நல்லா புரியும்படியா இருக்குது வித்யாக்கா. நன்றி.

இயற்கை விவசாயத்தால இந்த பூச்சி, புழு தாக்குதல் இல்லாமல் செய்யலாம்னு நம்மாழ்வார் போன்றவங்க சொல்றாங்க. அதைச் செய்யாம, இந்தமாதிரி விபரீத விளைவுகள் தரக்கூடியதையே ஏன் விரும்புறாங்களோ!!

நேசமித்ரன் said...

ம்ம் உங்க கிட்ட மட்டும் எதிர்பார்க்குற இடுகையும் அது பேசும் தொனியும் :)

எதாச்சும் கோவம்னா பேசித் தீர்த்துக்கலாம்.அதுக்குன்னு அந்தப் பக்கம் வராமலே இருக்குறது ...

S.A. நவாஸுதீன் said...

சும்மாவே கத்தரிக்காய்ன்னா அலர்ஜி. இப்போ இது வேறயா?.

என்னமோ நடத்தட்டும் போங்க. அடுத்து புதுசா எதுனா தலைப்புச்செய்தி கிடைச்சா நம்ம விவசாயிங்க கூட இந்தப் பிரச்சனையை மறக்கத்தான் போறாங்க. என்ன பண்ண அவங்களுக்கும் பழகிப்போச்சு.

அண்ணாமலையான் said...

இதுவும் கடந்து போகும்...

pudugaithendral said...

எங்க டாக்டர் மாமா மல்ட்டி விடமின் சப்ளிமெண்டா எப்பவும் எடுத்துக்கோ, நீ சாப்பிடும், காய், பழம் எதுவும் சத்தில்லைன்னு சொல்வார்.


புதுகை பக்கம் திருகட்லைன்னு ஊரு. அங்கேயிருந்து ஒரே சைஸ்ல குட்டிகுட்டியா வயலட் கத்திரிக்காய். அம்மா பொடி அடைச்சு எண்ணெய்க் கத்திரிக்காய் செய்வாங்க... ஸ்ஸ்ஸ்ஸ்

பாலா said...

இது என்ன மேட்டர்ங்க?

Bt Brinjal -ன்னு தேடினா.. எல்லாம் ‘இந்தியா’ மேட்டராதான் வருது. ஒருவேளை இந்த ஊர்ல கத்திரிக்காய்க்கு வேற பேரா??

இதைப் பத்தி, Food, Inc பதிவில் joe எழுதச் சொல்லியிருந்தார்.

இதெல்லாம்.. இனிமே இந்தியாவில்தான் டெஸ்ட் பண்ணுவாங்க போல!! :( :( :(

நான் ‘எங்க ஊர்’லயே இருந்துக்கறேங்க!! :(

காமராஜ் said...

அண்ணாமலையான் said...

// இதுவும் கடந்து போகும்...//

அழகு அண்ணாமலையான்.


வித்யா. பிடி கத்திரிக்காயை விலாவாரியா தெரியவச்சதுக்கு ,
ரொம்ப தாங்க்ஸ். நல்ல இடுகை.

ராமலக்ஷ்மி said...

விளக்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள் வித்யா. நல்ல பதிவு.

ஹுஸைனம்மா said...

//ஒருவேளை இந்த ஊர்ல கத்திரிக்காய்க்கு வேற பேரா??//

உங்க ஊர்ல ஸ்டைலா Eggplant-ன்னு சொல்வாஹ. :-)

நசரேயன் said...

அடுத்த முறை கத்தரிக்காய் சாகுபடி செய்யும் முன்னே ஆலோசனை கேட்டுகிறேன்

பாலா said...

//உங்க ஊர்ல ஸ்டைலா Eggplant-ன்னு சொல்வாஹ. :-)//


அட.. அப்பிடியா?? நமக்கும் கிச்சனுக்கும்.. ஆகறதில்லீங்க. காய்கறி செக்‌ஷன் பக்கம் போனதில்லை!!

ஒரு தபா... தயிரு வாங்கப் போய்.. பட்டபாடு இருக்கே...

கர்ட்-ங்குறேன். மில்க் ப்ராடக்ட்ங்குறேன்! பால்ல இருந்து.. ஈஸ்ட் மூலமா பிரைய வச்சா வருங்கறேன். கெட்டியா இருக்கும்ங்கறேன். எதோ சர்க்கஸ் கோமாளி மாதிரி என்னை பார்த்தானுங்க.

எழவு.. அதுக்குப் பேரு.. யோகர்ட்டாம். அன்னியோட சரி..!!! :) :)

புலவன் புலிகேசி said...

ம்..நல்ல இடுகை

R.Gopi said...

எறும்பு சொன்னா மாதிரி... அப்படியே “வயலும் வாழ்வும்” பார்த்த எஃபெக்ட்தான் வித்யா...

பதிவு முழுதும் படித்தேன்... நன்றாக விளக்கமா எழுதி இருக்கீங்க.... ஆனாலும், எனக்கு இந்த பதிவிலேயே ரொம்ப பிடிச்சது அந்த “டெர்ரர் கத்தரிக்காய்”தான்...

என்னா டெர்ரர், என்னா டெர்ரர்...?? யப்பா...........

Vidhoosh said...

நேசன் ...
///சுழலும் சிறகுகளின் சிந்தசைஸ் சிணுங்கல்///
இதை மட்டும் எத்தனை தரம் படிச்சும் oversight-ட்டில் "கமலும்" என்றே படிச்சேன். கமலஹாசன்-னுக்கும் உயிர்த்தெழலுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிச்சுக் கொண்டே இருந்தேன். இதனால் பின்னூட்டம் மட்டும் தான் "குதிரை முடி" கவிதைக்கு இடவில்லை. :( மற்றபடி தினோம் தினோம் உங்க கவிதையை மதியம் லஞ்ச் சாப்பிடும் போது நிதானமாய் படித்து, கூகிள்லில் அர்த்தம் கண்டு மகிழ்ந்து கொள்வேன் :)

Vidhoosh said...

பலா ஷங்கர்: பார்த்தேன் பார்த்தேன்... அங்க மடப்பள்ளி இருக்கா?

வெ.ராதாகிருஷ்ணன்: ரொம்ப நன்றிங்க

ஹுசைனம்மா: நன்றிங்க சகோதரி. :)

நவாஸ்: என்ன பண்றது. :(

அண்ணாமலையான்: :(

புதுகைத் தென்றல்: எண்ணைக் கத்திரிக்காய்தான் "கத்திரிக்காய் அடைச்ச கறி" :) அதும் குட்டிக் குட்டியா... விரைவில் சமையல் குறிப்பில் வரும். :)

ஹாலி பாலி: கூடிய விரைவில் கத்திரிக்கா பேரே பி.டி. ப்ரிஞ்சால் என்றுதான் ஆகி விடப் போகிறது. மலிவு அடிமாட்டுக்கும் கேவலமான விலையில் "உங்கூரு"க்கும் எக்ஸ்போர்ட் செய்வோம்...

நன்றி காமராஜ். அப்புறம் "பெண்களை படிக்க வைக்கும் திட்டம்" பற்றிய விபரம் எதுமே தெரிவிக்க வில்லையே... விரிவான விபரங்கள் தருவீர்களா என்று எதிர்ப்பார்க்கிறேன்.

ராமலக்ஷ்மி: நன்றி

நசரேயன்: விசாவின் அடுத்த தொடர்கதை காமெடியாம் . தயாரா இருங்க. :)

ஹாலிபாலி: ஹையோ. அந்த யோகர்ட்ட... சாப்பிட முடியுமா.. அரை தித்திப்பாய் :(

புலவன் புலிகேசி: நன்றிங்க

கோபி: நன்றிங்க.

உயிரோடை said...

க‌த்திரிகாயில‌ என்ன‌ ச‌த்து இருக்கு. அதை சாப்பிட‌வே கூடாதுன்னு எங்க‌ யோக‌ டிச்ச‌ர் சொல்லி இருக்காங்க‌.

மேலும் ஒரு கால‌த்தில் நேரு எடுத்த‌ அச‌ட்டையான‌ முடிவால் க‌ரையான் புற்று போல் நாட்டை சீம‌ க‌ருவேல‌ ம‌ர‌ங்க‌ள் அட‌ர்ந்து நாட்டின் வ‌ள‌மையை குறைத்த‌து.

இப்போது ஆட்சியாள‌ர்க‌ள் அணுச‌க்தி விச‌ய‌த்தில் காட்டிய‌ ஆர்வ‌ம் போல் இந்த‌ ம‌ர‌ப‌ணு மாற்ற‌த்திற்கும் ஆர்வ‌மும் அத‌ர‌வும் காட்டினால். ம்ம்ம்ம்

கொஞ்ச‌ம் த‌லைசுத்துது மேலும் பய‌மாவும் இருக்கு.

Sanjai Gandhi said...

//தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின்//

இவர்கள் உண்டாக்கும் மிகைப் படுத்தின பீதி தான் பிரச்சனைக்குக் காரணம். ஏன்னா இயற்கை உரம் என்ற பெயரில் இவர்கள் அடிக்கும் கொள்ளைக்கு பங்கம் வருவது தான் இவர்கள் கவலை. இதை கண்மூடித்தனமாக பலரும் நம்புவது பெரும் கவலை. என்னவோ போங்கப்பா.. விவசாயிகள் நஷ்டப் பட்டே சாகட்டும்.. கிராமத்தில் சகல வசதியுடன் ஒரு விவசாயி வாழ்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அவர்களுக்கு என்ன தகுதி இருக்கு.. நமக்குத் தேவை மேகி, பிங்கோ, லேஸ் மற்றும் விவசாயியின் ரத்தத்தினாலான சுத்தமான சுவையான காய்கறிகள்.

"உழவன்" "Uzhavan" said...

இந்த பி.டி கத்தரிக்கா குண்டா இருக்குமா? இல்லை ஒல்லியா இருக்குமா?

ஏண்டி.. இப்ப இதுதான் ரொம்ப முக்கியமா?

பின்னே.. எல்லாரும் என்னைக் குண்டுக் கத்திரிக்கா குண்டுக் கத்திரிக்கானே சொல்லுறாங்க. அதான் அந்த பி.டி கத்திரிக்காயாவது ஒல்லியா இருக்கனும்னு வேண்டிக்கிறேன்

Post a Comment