Showing posts with label samskaras. Show all posts
Showing posts with label samskaras. Show all posts

துரோபதையம்மன் விருத்தம்


தணிகாசலர் பஞ்சரத்தினம்


திருநீற்றுப் பதிகம்


வேமனானந்த சுவாமி பதிகம்


அருணாசலீசர் பதிகம்


ஸ்ரீ ராமரக்ஷா ஸ்தோத்ரம் தமிழாக்கம்

குங்குமத்தால் உண்டாகும் பயன்கள்


ஸ்ரீ விநாயக சதுர்த்தி பூஜா விதானம்


சூரிய நமஸ்காரப் பதிகம் - இருபது சில்லறை கட்டடம்


நடராஜப் பத்து - இருபது சில்லறை கட்டடம்


ஸ்ரீ ராம நவமி - ஸ்ரீராமர் பதிகம்


சப்தபதி (முழு உரை)

விதுர நீதி 1

விதுர நீதியைத் தமிழில் எழுதிப் பார்க்க வேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசையாக இருந்தது. பகுதி பகுதியாகத் தருகிறேன்.
====================
சஞ்சயன் வெறுங்கையோடு திரும்பி, திருதராஷ்டிரனைப் பார்த்து "மகாராஜா! ராயபாரம் தோல்வியுற்றது. யுத்தம் தவிர்க்க முடியாததாகிப் (அனிவார்யம்) போனது" என்றார். திருதராஷ்டிரன் பெருஞ்சஞ்சலத்தில் ஆழ்ந்தார். நம்பிக்கைக் கொடுக்கும் நல்ல வார்த்தைகள் கேட்க விழைந்து விதுரனை அழைக்கிறார்.

விதுரன், யமதர்மராஜனின் அவதாரமாகக் கருதப் படுகிறார். அவர் நிரஹங்காரி (அஹங்காரம் அற்றவர்), நிஷ்ச்சலமனஸ (சலனமற்ற மனமுடையவர்) என்றும் அறியப்படுபவர்.

திருதராஷ்டிரனைக் காண விதுரன் வந்து, அவரை நமஸ்கரிக்கிறார். விதுரனை அமரச் செய்து, திருதராஷ்டிரன் "நல்லவற்றைக் கேட்டு நாளாகிப் போனது. எனக்கு சில ஹிதவாக்கியங்களை (இனிமையான வாக்கியங்கள்) கூறுவாயாக" என்று கேட்கிறார்.

விதுரன் "மகாராஜா. உங்கள் விழிகளில் சிவப்பு நரம்புகள் தெறிக்கிறது. உங்களுக்கு உறக்கமின்றிப் போனது. இது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. ஏனென்றால், பலவந்தர்கள் (பலம் பெற்ற சான்றோர்கள்) மீது விரோதம் கொள்ளும் துர்பலர்கள் (பலத்தை துஷ்ப்ரயோகம் செய்பவர்), மாற்றான் சொத்துக்களை அபகரிப்பவர்கள், காமாந்தகர்கள், திருடர்கள் போன்றவர்கள் மட்டுமே உறக்கமின்றித் தவிப்பார்கள் என்று அனுபவ சாஸ்திரங்கள் உரைகின்றன. நானறிந்த வரையில், தாங்கள் அப்படிப்பட்ட பாதங்கள் புரியவில்லையே! பின்பு தங்களுக்கு ஏன் உறக்கம் வரவில்லை?" என்று வினவுகிறான்.

விதுரனின் எதிர்கேள்விக்கு பதிலுரைக்கமுடியாது திகைத்த திருதராஷ்டிரன் "விதுரா. உன் வாயால் தர்ம பிரவசனம் (தர்மம் குறித்த உரை - lecture) கேட்கவும் ஆவலோடிருக்கிறேன்." என்கிறார்.

விதுரன் தொடர்ந்து: "மகாராஜா! யுதிஷ்டிரன் உத்தமன். உன்னதமான ஆசைகள் கொண்டவன். தர்மத்தை பின்பற்றுபவன். உதாத தர்மவானாகிய (பிரதிபலன் பாராதவன்) அவனே அரசனாகும் தகுதிகள் பெற்றிருக்கிறான். அவனிடம் அரசனாகும் அதிகாரமும் பலமும் இருந்தாலும், உங்களைத் தந்தையாகக் கருதி, அவன் உங்கள் ஆணையை மீறி நடந்ததேயில்லை. அப்படியிருந்தும், அவனை வானப்ரஸ்தம் செய்வித்தீர்கள். இன்று உங்கள் சத்தியத்திற்கு புறம்பாகவும், வாக்கை காப்பற்றமுடியாமலுமான சூழ்நிலையில், ராஜ்ஜியத்தை அவர்களுக்கு அளிக்க முடியாமல் இருக்கிறீர்கள். துரியோதனுக்கு சாம்ராஜ்யபாரத்தை அளித்து, துச்சாதனன், சகுனி, போன்ற காமாதி அயோக்கியர்களுக்கு இடம் கொடுத்து விட்டீர்கள். இப்போது அமைதியை வேண்டுவது நியாயமில்லை? உங்களுக்கு நியாயமாகத் தோன்றுகிறதா? சாத்வீக ஸ்வபாவம் (அமைதியானவன்), உத்யோகயத்னம் (தன் வேலையைச் செவ்வனே செய்பவன்), கிலேஷ சஹனம் (விருப்பு வெறுப்பற்றவன்), தர்மவான் (நியாயமாய் நடப்பவன்), எவனோ அவனுக்கு இன்னல்கள் நேர்ந்தாலும், அவன் குறிக்கோள்களில் அவன் என்றும் தோற்ப்பதில்லை. அப்படிப் பட்ட சுஜனர்கள் (தெளிந்த குறிக்கோளுடையவர்) துர்ஜனர்களிடமிருந்து (குறிக்கோளற்றவர்கள்) விலகி இருப்பார்கள்.

மஹாராஜா! வித்வான் (அறிவிற்சிறந்தவன்) என்பவன் யார்? தர்மார்த்தங்களை பின்பற்றுபவன், லோக விவாகரங்களை நன்கறிந்தவன், குறிப்பால் உணர்பவன்
போக சிந்தனையற்றவன் ஆனால் புருஷார்த்தங்களைப் பின்பற்றுபவன் (குடும்ப வாழ்விலும் ஈடுபடுபவன்), எந்த நிலையிலும் மற்றவன் மீது அவதூறுகள் பேசாதிருப்பவன், நியாயமற்ற இலாபங்களை விரும்பாதிருப்பவன், நிரந்தரமாக இழந்துவிட்ட பொருட்களைக் குறித்த துக்கம் கொள்ளாதிருப்பவன், கஷ்டங்களை எதிர்கொள்ளும் மனஉறுதியும் தைரியமும் பெற்றவன், இடையில் விட்டுவிடாது எச்செயலையும் முழுதாக முடிப்பவன், சோம்பேறித்தனம் இல்லாதவன், இந்த்ரீய நிக்ரஹம் செய்பவன் (உணர்வுகளை அடக்கும் ஆற்றல் பெற்றவன்), போன்ற குணங்களைப் பெற்றவனின் இதயம் பவித்திரமான கங்கையின் ஊற்று நீர் போல சுத்தமாயிருக்கும். கற்றகல்வி எப்போதும் அவர்களுக்கு நல்வழி காட்டும்.

மூர்க்கர்கள் யார்? மூர்க்கர்களுக்கோ கல்வியின் பயன் கிடைக்காது, விவேகம் அழிந்து கர்வம் பெருகும். இப்படிப்பட்ட தாரித்திரியம் (காம-கோப-மூர்க்க-கர்வ குணங்கள்), கொண்டவர்களுக்கு ராஜாங்கச்செல்வங்களை பாதுகாக்கும் கனவு எதற்கு? ஸ்வ-தர்மம் (தனக்கே தன் மீதான மரியாதை) விடுத்தவர்கள், பரதர்மம் (ஸ்வ-தர்மத்தை விடுத்து அடுத்தவனின் நம்பிக்கைகளை பின்பற்றுபவன்), தன் நண்பர்களை அவமதிப்பவன், பலவந்தர்களுடன் விரோதிப்பவன், நண்பர்களே இல்லாதவன், அதிகப் பிரசங்கி (அவசியமில்லாமல் அளவு மீறி பேசுபவன்), க்ருதஞ்ஞம் (நன்றியுணர்வு) இல்லாதவன், மற்றவன் குற்றத்தை மட்டுமே நினைவில் கொள்பவன், காரணமேதுமின்றி அற்ப விஷயங்களுக்குக் கூட ஆவேசப் படுபவன், அனர்த்தர்களுக்கு உபதேசம் செய்பவன் போன்றவர்கள் மூர்க்கர்கள்.

பிரபு! பெருஞ்செல்வமான கல்வி, கேள்வி, வேள்விகளின் அதிருஷ்டம் இருந்தாலும், தானங்கள் செய்த புண்ணியவானாக இருப்பினும், கர்வம் இருந்தால், அவன் வித்துவான் ஆக முடியாது.

பரம மூர்க்கன் என்பவன் யார்? தன்னுடன் ஒரே கூரைக்குள் இருப்பவர்களுக்குக் கொடுக்காமல் உணவு உண்பவனும், உணவுக்காக இறைஞ்சுபவனும் பரம மூர்க்கர்கள்"


------------->இன்னும் வரும்<-------------

தண்ணீர் என்ற அம்ருதம் பிரம்மா

வேதங்களைப் பற்றிய (அல்லது) அதை சுற்றிய சிந்தனைகள் மட்டும் தான் இப்போது. அதனாலேயே என்னவோ இந்த தண்ணீர் தண்ணீர் பத்திகளைப் படித்ததும் இதையும் என் சேகரிப்பில் இணைக்கத் தோன்றியது. உங்களுக்கும் பயன்படலாம். படித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் (பொறுமையும்) இருந்தால் மகிழ்ச்சி.

யாகங்கள் / ஹோமங்களின் பொது பெரும்பாலும் "மந்த்ர புஷ்பம்" என்ற "யோபாம் புஷ்பாம் வேத" என்ற மந்திரத்தை புரோஹிதர்கள் கூட்டாக உச்சாடனை செய்ய கேட்டிருக்கலாம். அதன் பொருள் என்ன? தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறேன். வரும்.

சப்தங்களின் அதிர்வை தண்ணீர் உணருமா? எப்படி உணர்கிறது? அதன் பலன் என்னென்ன? அறிந்து கொள்ள Dr. Masaru Emoto, என்ற ஜப்பானிய விஞ்ஞானியின் தளத்தை பாருங்கள். ஆராய்ச்சிகளின் மூலம் அறியத் தந்தவற்றை இந்த வீடியோவில் பாருங்கள் .



==========================================================

இன்ன பிரச்சினைக்கு இன்ன rate என்ற விகிதத்தில், பணத்தைக் கொடுத்தால் சுகபோகங்கள், வியாதி தீருதல், கணவன் மனைவி பிரியாத வாழ்வுக்காக மந்திரங்கள் ஜபிக்கப் படும் என்பதையெல்லாம் நம்பும் அவசரத் தீர்வுகளைத் தேடும் வேகவிரும்பிகளாக ஆகி விட்ட நாம், சற்று நிதானிக்க வேண்டிய தருணம் - என்று world water day மூலம் UNCED 94-ஆம் வருடம் முதல் அறிவித்துக் கொண்டே இருக்கிறார்கள், ஆமாங்க!!! இவங்க நார்த் அமெரிக்கா-காரங்கதான் ... இனிமேயாவது கொஞ்சம் கேட்டுப்போம்.

கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலையும் கதையாக, நம்மிடமே இயற்கையை பாதுகாக்கும் எவ்வளவோ வழிமுறைகள் இருந்தாலும், அவற்றை கரையானுக்கு போட்டுவிட்டு, யாருக்கும் ஈமெயில் ஒரு pdf அல்லது pps கோப்புக்களை forward to all என்று ஒரு send button-னை click செய்து அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விட முடிகிறது. தற்போதைய / வருங்கால தலைமுறைகளுக்கு நம்மிடம் கொஞ்ச நஞ்சம் மிஞ்சியிருக்கும் சிலவற்றையேனும் எடுத்துக் கொடுக்கவும், அவற்றை பின்பற்றி இருப்பதை பாதுகாத்துக் கொடுக்கவும் எவ்ளவோ விஷயங்கள் hymn-களாகவும் சுலோகங்களாகவும் ஒளிந்து கிடக்கின்றன. இப்போது யாரும் படிப்பதில்லை, யாருக்கும் புரியவதுமில்லை, ஆனாலும், long-term perspectives-களோடு எழுதப்பட்ட கருத்துக்கள், கொள்கைகள், கலாச்சாரம் மற்றும் பழக்கங்களாக மட்டுமே வேதங்களை என்னால் பார்க்க முடிகிறது.

=======================================
வேதங்களில் இயற்கையையும் இயற்கையை சார்ந்தவற்றையும் பாதுகாக்க வேண்டிய வழிமுறைகள் அனைத்தும் பாடல்படுத்தப்பட்டிருக்கிறது. நமக்கெல்லாம் யார் சொன்னா என்ன, யாராவது ஒரு வியாபாரி தன் லோகோ-வோடு "Save Water, Save Environment, Save Energy" என்று அதை இங்கிலிஷில் சொன்னால் மட்டுமே கேட்போம். அப்போத்தானே நமக்கும் பெருமை. என்னவோ போடா மாதவா.

அதில் ஒரு சில உதாரணங்கள் இங்கே. எப்போதோ இதை படித்து நம் முன்னோர்கள் "ஆமா இதைப் போயி" என்று சிரித்திருக்கலாம். அதன் பலனைத்தான் நாம் இன்று "Save... Save" என்று கூவிக் கொண்டிருக்கிறோம்.
=======================================
ரிக் வேதம் (6:48:17) மரங்களை வெட்டக்கூடாது, அவை காற்றை தூய்மை படுத்துகின்றன
யஜுர் வேதம் (5:43) வானத்தை கிழிக்காதீர்கள், ஆகாசத்தை மாசுபடுத்தாதீர்கள்
சரக சம்ஹிதம் -- ஒரு காடு அழிந்தால் ஒரு நாடு அழிகிறது, மீண்டும் ஒரு காட்டை உருவாக்குவதை விட எளிதாக ஒரு நாட்டை உருவாக்க முடியும் என்பதால், காடுகளை காக்க வேண்டும். காடுகளின் உள்ள மிருகங்கள் காட்டின் வளர்ச்சிக்கு தேவையாக இருப்பதால், அவற்றை பாதுகாப்பது நம் சடங்கு எனக் கருத வேண்டும்.
=======================================
"அம்ருதம் பிரம்மா பூர் புவஸுவரோம்"

அம்ருதம்: தண்ணீர்
பிரம்ம: உயிர் (அ) வளர்ச்சி (அ) அசைவு உடைய அனைத்தும்
பூர்: ஐம் பூதங்களைக் கொண்ட உலகம்
ஸுவ: தெய்வீகத்தன்மை கொண்ட (அ) உடையதாகக் கருதப் படும் எதுவும்
ஓம்: Universal Sound

தண்ணீர் உயிர்களின் அமிருதம், அதுவே அசைவுடைய உயிர்களைக் கொண்ட இந்த உலகத்தின் அசைவுக்கும், சுவர்க்கத்தின் இயக்கத்திற்கும், ஓம் என்ற நாதம் தோன்றவும் ஆதாரமாக அமைகிறது.
=======================================
காகூ தீர்; காகூ நீர்; காகூ பேத் பிசார் || நானகா பகத் ப்ரியா ஹோ ||3||2||155||
(சீக்கிய "ஷபத்" -- குரு அர்ஜன் தேவ் ஜி [ராக் கௌரீ-- பன்னா 213]
காகூ -> சிலர்
தீர் ->நதிக்கரை / நீர்நிலைக்கு அருகிருக்கும் மணற்பரப்பு
நீர்-> தண்ணீர்
பேத பிசார் -> வேதங்கள்
நானக் - குறு நானக்ஜி
பகத் - பகவான் / கடவுள்

சிலர் கரைகளில் வாழ்கிறார்கள்; சிலர் தண்ணீரிலேயே வாழ்கிறார்கள்; சிலர் வேதங்கள் படிக்கிறார்கள்; நானக்கிற்கு இறைவன் மீது அன்பும் (பக்தி) என்கிறார்.
=======================================
அப்ஸ்வன்தர்ம்ரித்மப்யு பேஷஜம் || [4/4 அதர்வவேதம்]

அப்ஸ்வன்தம் -->தண்ணீரில்
அம்ருதம் --> அமிருதம் இருக்கிறது
அப்யு --> அதுவே மேன்மையான
பேஷஜம் --> மருந்தாக இருக்கிறது

=======================================
ருக் வேதத்தின் ஜலஸுக்தம் என்ற புத்தகத்தில்:

யா ஆபோ திவ்ய உத(tha) யா சவன்தி, ரவநித்ரிமா உதத் வா யா ஸ்வயஞ்சா:
சமுத்ரார்தா யா: ஷுசைய: பா(p)வகாரத; ஆபோ தேவீரிஹ மாமவன்து||

தண்ணீரானது சுவர்க்கத்திற்கு நிகரான மலைமுகடுகளில் இருந்து பூமிக்கு வருகிறது. நதி ரூபமாகி வேகம் கொண்டு பாய்கிறது. ஓடையாகித் தவழ்கிறது. பூமியைத் தோண்டுவதன் மூலம் ஊற்றாகி குட்டைகள் மற்றும் கிணறுகளில் பெருகுகிறது. இவ்வாறும் பயணித்து சமுத்திரத்தில் சேர்க்கிறது. என்னை புனிதமாக்கி என்னை வாழச்செய்யும் தண்ணீரே! என்னைக் காப்பாய்.

என்று நீர்நிலைகளை வணங்கச் சொல்கிறது.

=======================================
லதுமய ஸ்மிருதியில்
"வித்தோபேக்ஷம் பவேதஷ்டிம் தடாகம் பூர்தமுச்யதே
ஆராமஷ்ச்ச விஷேஷேன தேவத்ரோணச்ததைவ ச||" என்று சொல்லப் பட்டிருக்கிறது.
அதாவது, தடாகம் என்பது விசேஷமாக அமைக்கப் பட்டத் தோட்டமும் நீர்நிலையும் கூடிய இடமாக இருக்கிறது. அழிந்துவிட்ட தடாகங்கள், கிணறுகள், மற்றும் குளங்களை மீண்டும் புனர்நிர்மாணம் செய்ய உதவுபவன் உலகில் உள்ள ஜீவராசிகளை காப்பதின் புண்ணியத்தைப் பெறுகிறான்.
=======================================

தண்ணீரை எப்படி பாதுகாக்கலாம் என்று வேதங்கள் கூறுகின்றன? இதையேதான் நாமும் இன்றும் சொல்லி (மட்டும்) கொண்டிருக்கிறோம்.

நீர்நிலைகளில் கிணற்றில் எச்சில் துப்புவதோ, குப்பைகளைப் போடுவதோ கூடாது.
நீர்நிலைகளுக்கு அருகில் மலஜலம் கழிப்பது பாவச் செயல். (சென்னையின் முகமாக கூவம் இருக்கும் கதியை நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்)

வீடுகளுக்கான உபயோகத்திற்கு என்று இந்த நீர் நிலைகளில் இருந்து தினமும் தேவையான அளவுக்கு நீர் சேகரிக்க வேண்டும். அன்றைய தேவைக்கு போக மிகுந்ததை மறுநாள் காலை மீண்டும் நீர் நிலையிலேயே விட வேண்டும். (கொசு உற்பத்தி தவிர்க்கப்படுகிறது)

ஒவ்வொரு வருஷத்திற்கும் ஒருமுறை மக நட்சத்திரம் கூடிய நாளில் நீர்நிலைகளை தூர் வார வேண்டும் (மகாமகம் உற்சவமாகிப் போனது)

நீரில் மண் / சகதி முதலியவற்றை வீசக் கூடாது.

ரிக் வேதத்தில் பொங்கல் திருநாள்

போகிப் பண்டிகை - ஜனவரி 13-2010, புதன்கிழமை, மார்கழி 29, விரோதி ஆண்டு
பொங்கல் மற்றும் தை அமாவாசை - ஜனவரி 14, 2010, தை 1, விரோதி ஆண்டு, வியாழக்கிழமை
மாட்டுப் பொங்கல் - ஜனவரி 15, 2010, தை 2, விரோதி ஆண்டு வெள்ளிக் கிழமை
=================================
ரிக் வேதத்தில் சொல்லப் பட்டுள்ள மஹா விரதம்

ஒரு வருடம் முழுதையும் குறிக்கும் கவ மாயன சாத்திரம் (கவ = பூமி, மாயனம் = சூரிய மண்டல சுழற்சியில் மாற்றம் ஏற்படுவது) என்ற நாளுக்கு முதல் நாளே மஹா விரதம். விஷுவத் (விஷு) என்று சொல்லப்படும் நாள் பனிக்காலம் முடிந்து சூரியனின் முழு வெப்பமும் பூமிக்கு கிடைக்கும் நாளாக கொண்டாடப் படுகிறது. இன்று செய்யப்படும் கொண்டாட்டங்கள் மூலம் சூரியனின் வெப்பம் அதிகரிக்கும் என்றும், பின்பனி விரைவில் விலகி தாவரங்களுக்கும் நன்மை பயக்கும் என்று நம்பப் படுகிறது.

தொன்மை நாட்களில், போர் வீரர்கள் இறந்த பசுவிலிருந்து எடுக்கப் பட்ட மாட்டுத் தோல் மீது தம் அம்புகளைத் தீட்டுவார்கள். பின் அந்தத் தோல் கொண்டு முடையும் பறையில் ஒலி எழுப்பி ஒலிக்கேர்ப்ப நடனம் புரிந்தும், பிராமணர்கள், ஆரியர்கள் மற்றும் சூத்திரர்களுக்கு இடையே மல்யுத்தம், வாட்போர், விற்போர், வேதங்கள் உரைத்தல், பேச்சு, கல்வி, கவிதை புனைதல், பாடல், நடனம், மந்திர ஜாலங்கள் செய்தல் போன்ற போட்டிக்களை நடத்தியும் கொண்டாடப் பட்டது. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் தாம் தற்போது புரியும் தொழிலை விட்டு அதை விட ஒரு உயர்ந்த தொழிலைச் செய்யவேண்டும் என்று குறிக்கப் பட்டுள்ளது. தொழில் அடிப்படையில் க்ஷத்திரிய ஆரிய சூத்திரர்கள் அதாவது பிராமணன் வென்றால் க்ஷதிரியத் தொழிலையும், ஆரியன் வெற்றி பெற்றால் பிராமணத் தொழிலையும், சூத்திரன் வென்றால் ஆரியத் தொழிலையும் செய்ய வேண்டும் என்று பணித்தார்கள். தோற்றவர்களுக்கு depromotion கொடுத்து அந்ததந்ததொழிலை மேற்கொள்ள வேண்டும்.

மஹா விரதம் என்ற இந்தத் திருநாளை கலாச்சார மாற்றத்திற்கும், சமூக மாற்றத்திற்குமான நாளாகவும், அனைவருக்கும் சமமான வாய்ப்பளித்து, திறமைகளை கண்டறியும் நாளாகவும் கொண்டாடப் பட்டு வந்தன. இந்தியா முழுவது, பைசாக்கி, விஷு, ரோஹ்ரி, போகலி பிஹு, போகிப் பொங்கல், என்று பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று ஒரு பெரிய மாற்றம் தரும் நாளாகவே இருக்கின்றது. அதைத்தான் "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்றும் சொன்னார்களோ என்னவோ?

ஐத்திரேயம், ஆரண்யகம் என்பது ரிக் வேதத்தில் முக்கியமான பகுதிகள் ஆகும். ஆரண்யகத்திற்கு மூன்று புத்தகங்கள்.

முதல் புத்தகத்தில் "கவ மாயன" மஹா விரத நாளைக் கொண்டாடப்பட வேண்டிய வழி முறைகளையும், அன்றைய தினம் விடியற்காலை, மதியம் மற்றும் மாலையில் செய்ய வேண்டிய செயல்களை சாத்திரமாகவும் ரிக் வேதத்தில் பதியப் பட்டுள்ளது.

இரண்டாம் புத்தகத்தில் அன்றைய தினம் நடக்கும் (உக்தம்) கூத்து முறைகள் (பூதங்கள்/மிருகங்கள் வேஷம் கட்டி நன்னெறி நாடகங்கள் நடத்துதல்), புராணக் கதைகள் சொல்லுதல், வில்லுப் பாட்டு, போன்றவைகளை "நிஷ்கேவல்ய சாஸ்திர உபநிஷத்" என்று சொல்லப் பட்டுள்ளது.

மூன்றாம் புத்தகத்தில் பூடகமான ஞானம், ஆன்மிகம், மறைபொருள் சாஸ்திரம், ஆகியவற்றின் நேரடி அர்த்தங்கள் நிர்பூஜம், பிரார்த்தனா, உபயமந்திரேனா என்று சம்ஹிதப்பதம் மற்றும் க்ரமப்பத சம்ஹிதைகளாக கொடுக்கப் பட்டுள்ளன. இதில் உள்ள vowel, semi vowel, consonant இலக்கண முறைகளைக் கண்டறியும் போது விவரிக்கவே முடியாத அற்புத உணர்வு ஏற்படும். நாம் கற்றது கை மண்ணாவது ஒன்றாவது, சுண்டு விரலில் துளியூண்டு ஒட்டிக் கொண்டு இருக்குமே அந்த அளவு கூட இல்லையென்றும் உணர்வோம்.

ஆரண்யகம் என்ற புத்தகம் காடு, வனங்கள் (ஆரண்யம்) போன்ற தனிமையான இடங்களில் வாழ நேர்ந்தால் தனி மனிதன் தன்னம்பிக்கையோடும், வாழ்க்கை மீதான நம்பிக்கை இழக்காமலும், தனிமையை வென்றும் வாழும் முறைகளை பற்றியது. சௌனக மகரிஷி கி.மு. 500-இல் எழுதியதாக நம்பப்படும் இப்புத்தகம் நூறு வருடங்கள் கழித்து பாணினியால் மீட்கப் பட்டதாக நம்பப் படுகிறது. (சான்று A.B.Keith, 1909, Aitareya Aranyaka, Oxford, Clarendon Press)

மஹா ன் பவதி அனேன வ்ரதேன
ஓர் மாஹதோ தேவஸ்ய வ்ரதாம்
ஓர் மாஹக் ச தத் வ்ரதாம்
(சயன மகரிஷி உரைத்தது. ஐத்திரேய ஆரண்யகம் அத்தியாயம்-1, பாடல் வரி-1)

இதன் பொருள் "மஹா விரதத்தின் வழி முறைகள் இங்கே துவங்குகின்றன. இந்திரன் போர் வீரர்களுக்கான விரதங்களைக் கடை பிடித்து செல்வாக்குப் பெற்று அதிகாரியானான். அவன் அதிகாரத்தின் கீழ் இந்த மஹா விரதம் கடை பிடிக்கப் படுகின்றது.

ஐந்தாம் அத்தியாத்தில் இருபத்தைந்து வரிகளில் நெருப்பு ஏற்றப் படவேண்டிய முறைகளும், அக்னியைக் கொண்டாடும் முறைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. காலையில் (மாலை வரை) அக்னிஸ்தோமன் (சூரியன்) என்றும் மாலையில் சோமன் (நிலவு) என்றும் அக்னிஹோத்திரம் செய்யவேண்டிய முறைகளையும் பேசுகிறது. மஹா விரதம் பற்றி வேதங்களில் ஐத்திரேய ஆரண்யகம் மற்றும் சனகாயன ஆரண்யகம் இரண்டில் மட்டும்தான் குறிக்கப் பட்டுள்ளது. மஹா விரத்தன்று நடக்கும் செயல் முறைகளையும், வெற்றி பெற்றவர் / தோல்வி அடைந்தவரின் தொழில் மாற்றங்கள் குறித்த செயல்பாடுகளையும், அவர்களது அடையாளங்களையும் பரம இரகசியமாக வைக்கப் பட்டதாகவும் குறித்துள்ளனர்.

====================================================================

மகர சங்கராந்தி என்ற நாள் சூரியனின் பாதை northern hemisphere (மகர ராசி) நோக்கி இருப்பதைக் குறிக்கிறது. இதுவே உத்திராயன புண்ணியகாலத்தின் ஆரம்பமாகக் கருதுகின்றனர். இந்நாள் திருவிழாக்களின் துவக்கமாகவும் இருக்கிறது.

மஹாராஷ்டிராவில் சக்கரை மிட்டாய்கள், எள்ளுருண்டைகள், தானியங்கள் போன்றவற்றை இந்நாளில் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்கின்றனர்.

குஜராத்தில் வீட்டுக்குத் தேவையான புதியன வாங்கியும், பட்டங்கள் விட்டும் கொண்டாடுகின்றனர்.

ஹரியானா, பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல் பிரதேஷ் பகுதிகளில் லொஹ்ரி என்றும் கொண்டாடுகின்றனர்.

கர்நாடகாவில், கரும்பு, எள், வெல்லம், கொப்பரைத் தேங்காய், கடலை போன்றவற்றைப் பகிர்ந்து கொண்டு மகிழ்கிறார்கள்.

அஸ்ஸாமில் அக்னியை வணங்கும் தினமாகவும், பெங்காலில் "பித்தா" மிட்டாய்கள் செய்து, கங்கா ஸாகர் மேளாவைக் கொண்டாடியும் மகிழ்கின்றனர். ஆந்திராவில் போகியன்று கொலு வைக்கின்றனர்.

தமிழ்நாட்டில் தைப் பொங்கலும், ஜல்லிக்கட்டும், என்று கொண்டாடி மகிழ்கிறோம்.

ரத சப்தமி: சூரியனின் பாதையை அடிப்படையாகக் கொண்டு கொண்டாடப் படும் இன்னொரு பண்டிகை ரத சப்தமி. சூரியன் தோன்றிய நாள் என்றும் நம்பப் படுகிறது. இன்றைய தினம் சூரிய பகவான் தன் ஏழு குதிரைகள் பூட்டிய இரதத்தில் அமர்ந்து புதிய பயணத்தைத் துவக்குவதாகக் கருதுகின்றனர். சூரியனின் பன்னிரண்டு பெயர்களான மித்ரா, ரவி, சூர்யா, அஹானு, கங், புஷன், ஹிரண்யகர்ப்ப, மரீசி, ஆதித்யா, சவிதா, அற்கா மற்றும் பாஸ்கரா போன்ற பெயர்களை உச்சரித்தும், எருக்கம் இலையைத் தலையில் வைத்து நீர்நிலைகளில் மூழ்கியும் கொண்டாடுகின்றனர். இதன் தத்துவம் என்னவென்று தெரியவில்லை. தேடிக் கொண்டிருக்கிறேன்.

விஷு / யுகாதி / சித்திரைத் திருநாள்

சித்ரா விஷு சூரியனை வணங்கும் இன்னொரு பண்டிகை. மேஷ ராசிக்கு சூரியன் வரும் நாள் என்று நம்புகின்றனர். இதை மிகவும் புனிதமாகவும் கருதுகின்றனர். இன்றைய தினத்தில்தான் பூமி உருவானது என்று நம்பப் படுகிறது. அதனால் இத்தினத்தை யுகாதி என்றும் கொண்டாடுகின்றனர். இன்றைய தினத்தில் பகவான் ஸ்ரீ ராமபிரான் வனவாசம் முடித்து அயோத்திக்குத் திரும்பிய நாள் என்றும் நம்புகின்றனர். வாழ்க்கையின் இனிமையையும் கஷ்டங்களையும் துக்கங்களையும் குறிக்கும் வண்ணம் வெல்லம், மாங்காய், வேப்பம் பூ கொண்டு பச்சடி செய்வது விசேஷம்.

பைசாக்கி

வடக்கில் பைசாக்கி. விளைச்சலுக்கும் புது தானியங்களுக்கும் சூரியனுக்கும் நன்றி செலுத்தும் நாள். இன்றைய தினம்தான் சீக்கிய குருமாரான மரியாதைக்குரிய குரு கோபிந்த் சிங் அவர்கள் பஞ்ச் பியரா என்ற அன்புக்குரியவர்களுக்கான ஜோதியை ஏற்படுத்தினார்.

=================
எந்தப் பெயரில் கொண்டாடினாலும், மனிதன் இயற்கையை மதித்து வணங்கவும், சமூகத்தில் எல்லோருக்கும் வாய்பளித்து சமநிலை விளங்கவும், சோர்வான குளிர் நாட்கள் முடிந்து பசுமையைக் கொடுக்கும் வெயில் காலம் ஆரம்பிக்கும் நாட்களைக் கொண்டாடி மகிழ்வதையே இப்பண்டிகை குறிக்கிறது.

டெக்னாலஜியை வைத்து இன்று நாம் எதை வேண்டுமானாலும் உருவாக்க முடியும் என்ற நிலையிலேயே இருக்கிறோம். ஆனால் இயற்கையை??
====

நடப்பில் உள்ள பொங்கல் பண்டிகை

====

அமோக விளைச்சலைத் தந்து புதுத் தானியங்கள் கரும்பு என்று , பழையன கழிதலும், புதியன புகுதலும் நடைபெறும். வீட்டை சுத்தப்படுத்தி, வீட்டில் உள்ள பழைய பொருட்களை வீட்டின் முன் தீயிட்டுக் கொளுத்தி, அல்லவை அகன்று நல்லவை பெருக, வரும் ஆண்டு முழுவதும் மழை நன்றாகப் பெய்து உழவுக்கும், மக்களின் வாழ்வுக்கும் வளம் கிடைக்க வேண்டி இந்திரனை வணங்குவர். இதற்குப் பின்னணியில் ஒரு கதையும் உண்டு. போகிப் பண்டிகையன்று கண்ணனும், இடையர் குல மாந்தரும் கோவர்த்தன மலையை வணங்கி வழிபட்டனர். இதனால் இந்திரன் கோபமுற்றான். தன்னை வணங்காமல் கோவர்த்தன கிரியை வணங்குவதா? என்று சினம் கொண்ட இந்திரன், ஏழு மேகங்களை அனுப்பி மின்னல், இடி மற்றும் கன மழையை உருவாக்கினான். இதனால் இடையர்களும், நண்பர்களும் பீதியடைந்தனர். கண்ணன், கோவர்த்தன் மலையை அப்படியேத் தூக்கி குடையாக மாற்றி அதன் கீழ் அனைவரையும் வரச் செய்து, மழை, இடி, மின்னலிலிருந்து நண்பர்களையும், இடையர்களையும் காத்தார் கிருஷ்ணன். இதைக் கண்டு பயந்துபோன இந்திரன், கிருஷ்ணரிடம் வந்து தன்னை மன்னிக்க வேண்டினான். அதனை ஏற்ற கிருஷ்ணர், இந்திரனை மன்னித்ததோடு போகியன்று இந்திரனை மக்கள் வணங்கலாம் என்று ஆசிர்வதித்தார்.

அழகான வண்ணக்கோலங்கள் இட்டு, கலர்பொடிகள் கொண்டு அலங்கரித்து, நடுவில் சாணி உருண்டையில் பூசணிப் பூ சொருகி வாசல்கள் களை கட்டும் நாள்.

இரண்டாம் நாள் பொங்கல். சூரியக் கடவுளுக்கு நன்றி செலுத்தல். புது அரிசி கொண்டு பொங்கப்பானையில் சர்க்கரைப் பொங்கல் வைத்து கரும்பு நிவேதனம் செய்து எல்லாம் புதிதாகவேத் துவங்கப் படும் தை முதல் நாள்.

இன்றைய தினம் தான் மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கல் யானைக்கு உயிர் கொடுத்து கரும்பு தின்றதாக கல்வெட்டு பேசுகிறது.

மாட்டுப் பொங்கல் அன்று மாடு, காளைகளுக்கு நன்றி சொல்லும் தினம். மஞ்சு விரட்டு ஜல்லிக் கட்டு என்று இளைய சமுதாயம் கொண்டாடும் ஆர்பாட்டமான நாள்.

இதே நாளில் காணும் பொங்கல், கனுப் பொங்கல் என்று வித விதமான வண்ணங்களில் (சர்க்கரைப் பொங்கல் (அரக்கு), வெண்பொங்கல் (வெளிர் மஞ்சள்), மோர் சாதம் (வெள்ளை), எலுமிச்சை சாதம் (மஞ்சள்), கருவேப்பிலை சாதம் (பச்சை), எள்ளு சாதம் (கருப்பு), சாத உருண்டைகள் பிடித்து மஞ்சள்செடி இலையில் காகங்களுக்கு படைக்கும் தினம். "காக்காப் பிடி, கண்ணு பிடி, காக்கைக்கும் குருவிக்கும் கல்யாணம்" என்று சொல்லி பெண்கள் தன் சகோதரனுக்காக வேண்டிக் கொண்டு, ஏழு குட்டி குட்டி உருண்டைகளைப் பிடித்து மாடியில் காலை ஆறு மணிக்குள் வைத்து வரவேண்டும். பின் கனுபீடை நீங்க உடனே எண்ணெய் குளியல் செய்ய வேண்டும்.

=====

இப்போதெல்லாம் இது கூட குறைந்து ஒரு லீவு நாளாகவும், "உலக தொலைக்காட்சியில்" காட்டப் படும் மொக்கை பட்டிமன்றகளும், முதன் முறையாக டீ.வீ. யிலேயே ரிலீஸ் ஆகும் சினிமாக்களைப் பார்க்கவும் சரியாக போய்விடுகிறது இல்லையா?

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.






.

முட்டாள் தாத்தாவும் மூடப் பாட்டியும் - 2

முந்தைய பதிவை இங்கே காணலாம்.

எதையும் தேங்காய் உடைச்சாமாதிரி பளிச்சுன்னு நேரிடையாய் ஏனோ சொல்லாததால், இன்றும் பல நல்லப் பழக்கங்கள் பின்பற்றப் படாமல் இருக்கிறது.

காக்கை கரைந்தால் விருந்தினர் வருகை எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் பயணத்திற்கு போகுமுன் மயில் கரைந்தால் அபசகுனம் என்று சொல்வதில் என்ன இருக்கக் கூடும்? மழை வருமோ?

அதே போல வீட்டில் இருக்கிறவர்களுக்கு முதலில் உணவிட்டு விட்டு பின்தான் வீட்டில் வேலை செய்பவர்களுக்குத் தர வேண்டும், கணவரை இழந்த பெண்கள் முன்னால் வந்தால் அபசகுனம், பிள்ளை இல்லாதவர் குழந்தையைத் தூக்கினால் குழந்தைக்கு ஆயுசு குறையும் என்பதில் எல்லாம் சக மனிதரை மனிதராக மதிக்காத, அவர்கள் ஏதோ ஒரு வகையில் இழந்திருக்கும் சில மகிழ்ச்சிகளை மீண்டும் பெற்று விடக்கூடாது என்ற அஹம்பாவம் தவிர வேறெந்த காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை.

நடை முறைக்கு ஒத்துவரும், பிற மனிதரைத் துன்புறுத்தாத,ஆனால் தனிப்பட்ட ஒருவருக்கு நன்மைகள் அளிக்கக் கூடிய சில 'மூட' பழக்கங்களை காரணம் அறிந்து பின்பற்றுவதில் தவறேதும் இல்லைதானே?

=================================

6. சமையலில் துவரம் பருப்பு வேக விடும்போது மஞ்சள் பொடி போட வேண்டும்.

மஞ்சள் பொடியின் மருத்துவ குணத்தின் நலன் தினசரி சமையலில் சேரவேண்டும் என்பதற்காகக் கூறி இருக்கலாம். இல்லையென்றால் அபசகுனம் என்றெல்லாம் எதுவும் இல்லை.

7. அதிகாலைகளில் துளசி மாடம் அல்லது கோவிலைப் பிரதட்சிணம் செய்வது, அங்கப் பிரதட்சிணம் செய்வது, நின்ற இடத்திலேயே ஸ்தானப் பிரதட்சிணம்/ஆத்மப் பிரதட்சிணம் செய்வது ஏன்? பௌர்ணமி அன்று கிரி வலம் / மலையைப் பிரதட்சிணம் செய்வது ஏன்?

பொதுவாக நடைப் பயிற்சி, elevated steps-களில் ஏறுதல் எல்லாம் இதயத்திற்கு நல்லது. இதை தினசரிப் பயிற்சியாக எப்படி ஆக்குவது? இறைவனோடு இணைத்ததால் பின்பற்றப் பட்டது. இரவில், பௌர்ணமி நிலவில் (நடப்பதால்) பிரதட்சிணம் (circumambulation) செய்வதால் / சுற்றுவதால் இனப்பெருக்க உறுப்புக்கள் வலிமை பெறுகிறது என்று மருத்துவ ஆராய்ச்சியில் கண்டறியப் பட்டுள்ளது. பொதுவாக இடமிருந்து வலமாகப் பிரதட்சிணம் செய்வார்கள். எங்கே வேண்டுமானாலும் சுற்றலாமே? ஏன் இறைவன் இருக்கும் கர்ப்பக்ருஹத்தை சுற்றி வரவேண்டும்?

ஒரு நடுப்புள்ளி இல்லாமல் வட்டம் வரைய முடியாது. நடக்கும் போது மனம் / வாய்  வேறு சிந்தனைகளோ அல்லது பேச்சுக்களில் ஈடுபடாமல் இருக்க, இறைவனை தியானித்துக் கொண்டே பன்னிரண்டு முறை சுற்றி வருமாறும் பணித்துள்ளனர். இப்படி சாதாரணமாக பன்னிரண்டு முறை சுற்றும் போது ஏறத்தாழ நாம் இருநூறு அடிகள் வைத்திருப்போம். பெரும்பாலும் கோவிலை சுத்தமாகவும், கோவில்களில் (ஸ்தல விருட்சம்) மரங்களும் துளசியும் நிறைந்தே இருக்கும். இதனால் உடலுக்குத் தேவையான நடையும், நல்ல காற்று மற்றும் மனதுக்கு தேவையான தியானப் பயிற்சி மற்றும் அமைதியான சூழல் மன அமைதியையும் அளிக்கிறது. இதை தவிர, எல்லாவற்றிற்கும் மேலாக, அதிகாலை எழுந்திருக்கும் பழக்கமும் வருகிறது.

இன்றும் காலை நடைப் பயிற்சியில், அந்த அதிகாலை அமைதியைக் கிழித்துக் கொண்டு சில குரல்கள் பேசிக் கொண்டு நடக்கிறார்கள். நடக்கும் போது பேசுவது உடல் நலத்திற்கும், குரலுக்கும் கேடு விளைவிக்கும்.

8. கோபுர தரிசனம் கோடி புண்ணியமா?

சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் உள்ளவர்களால் கழுத்தை மேல் நோக்கி  தூக்கிப் பார்க்க முடியாது. தலை சுற்றும். அதே போல காலைச் சூரியனை வெறும் கண்ணால் பார்க்க முடியாதவர்கள் கண் நோய் நிச்சயம் இருக்கும்.

காலையில் சிறிது நேரம் நடைப் பயிற்சியும், கைகளை binacular போன்று வைத்துக் கொண்டு சூரியனைப் பார்த்து வந்தால் கண்ணுக்கும் உடலுக்கும் நல்லது. நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் இல்லையா?

9. மாலை நான்கு மணிக்கு மேல் ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளை கூட்டிச் செல்லக் கூடாது. தோஷம் படும். (அல்லது) சூரிய கிரகணத்தில் கர்பிணிகளும் குழந்தைகளும் வெளியே வரக் கூடாது.

மாலை கூடு திரும்பும் பறவைகள் காற்றில் தன் எச்சங்களை விடும். இதன் துகள்கள் காற்றில் கலந்து விஷமாகிறது. ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு இன்னும் நோய் எதிர்ப்பு சக்தியோ அல்லது தாங்கும் சக்தியோ குறைவாகவே இருக்கிறது. இந்த பறவை எச்சங்களை சுவாசிக்கும் குழந்தைகளுக்கு நிச்சயம் உடல் நலக் குறைவு ஏற்படும்.
அதே போல, சூரிய வெளிச்சம் பகலில் முழுமையாக மறையும் போது பூமியில் இருந்து பல விஷ நுண்ணுயிர்கள் வெளி வருகின்றன. இவை காற்றில் கலந்து தூசி போல உண்டாகும். நோயெதிர்ப்பு சக்தி கர்ப்ப காலத்தில் குறைந்திருக்கும். அதே போலத்தான் குழந்தைகளுக்கும்.

10. நல்ல நாளில் (வெள்ளி / செய்வாய் / பண்டிகை தினங்கள்) நகம் / முடி வெட்டக் கூடாது. அதே போல படுக்கையில் அமர்ந்து உண்ணக்கூடாது. நகம்/முடி வெட்டக் கூடாது. (மஹாலக்ஷ்மி போய் விடுவாள்!!)

நகம் மற்றும் முடி மூலம் நோய்கள் சீக்கிரம் பரவும். உணவில் விழுந்து விட்டால் ?? நிச்சயம் சாப்பிடும் போது அருவருப்பை உண்டாக்கும். உணவும் வீணாகும். படுக்கையில் விழுந்தாலும் பார்த்தாலே அசிங்கமாய் இருக்கும். இது தவிர இன்று போல் நகம் வெட்ட நெயில் கட்டர் எல்லாம் கிடையாது முன்பு. கத்தி தான். தவறுதலாய் கையை கிழித்து விட்டால் மற்ற வேலைகள் நின்று விடும். பண்டிகை தினங்களில் அதிக வேலை இருக்கும், பொறுமையாக நகம் வெட்ட முடியாது.

11. பச்சை மாவிலை கட்டுவது ஏன்? (பிளாஸ்டிக் தோரணம் இல்லை)

பறிக்கப் பட்ட மாவிலையில் இருந்து அதி வேகமாக ஆக்சிஜன் வெளியேறுகிறது. ஏறத்தாழ இலை வாடும் வரை ஆக்சிஜன் வெளியேறிக் கொண்டே இருக்கிறதாம். இதனால் வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுகிறார்கள்.

12. வீட்டில் பறவை கூடு (குருவி) கட்டினால் நல்லது. கூட்டைக் கலைச்சால் தப்பு.

பறவைகள் முட்டையிடும் காலங்களில்தான் பெரும்பாலும் கூடு கட்டுகின்றன. பாதுகாப்பு என்று பறவைகள் நம்பும் இடத்தில்தான் கூடு கட்டுகின்றன. கூட்டைக் கலைக்கும் போது அவைகளுக்குப் போக்கிடம் இல்லாமல் போகலாம்.

13. ஒத்தை பிராமணன் குறுக்கே வந்தால், வந்த திசையில் பிரயாணம் செய்யக் கூடாது?

"ஒத்தை (ஒற்றை) பிராமணன்" என்பவன் மரணம் சம்பவித்த வீட்டில் தானே சமைத்து உண்பவன். இவன் தனியாக வந்து தனியாகவே சமைத்து உண்டு தனியாகவே போய் விடுவான். எல்லோரும் இப்படித்தான் என்று உணர்த்த பின்பற்றப் படும் பழக்கம் இது. வேதம் பயிலும் மாணவர்கள் படிக்கும் போது பிரமச்சரிய விரதத்தை மீறினால் (பெண்களோடு உறவு கொண்டு விட்டால்) அவன் ஒற்றை பிராமணனாகிறான். இது குருகுல காலங்களில் உண்டானது. மேலும் போகும் வழியில் மரணம் சம்பவித்த வீடு இருக்கிறது என்பதால் வேறு திசையில் செல்ல வேண்டும் என்பதை குறிக்க சொல்லப் பட்டது இது.

இப்போது யாருமே பிராமணன் கிடையாது. மேலும் இப்போது மனிதனின் பிணத்தையே கண்டு கொள்ளாமல் தாண்டிச் செல்லும் அளவுக்கு மனப் பக்குவமும் நமக்கெல்லாம் வந்து விட்டது. ஆகையால் இதைப் பற்றி கவலைப்படவேண்டாம்.

14. விக்கல் வந்தால் யாரோ நினைக்கிறார்கள்?
 

பிரிந்திருக்கும் உறவுகளை "அவர்களா இருக்குமோ" என்று நினைக்கவும் விக்கல் உதவுகிறது.


நாச்சென்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும் (335)

பிராணன் பிரிவதற்கு முன்னால் கடைசி விக்கல் வருமாம். அந்த விக்கல் வருவதற்குள், செய்யவேண்டிய அறச்செயல்களையும், நன்றி செலுத்த வேண்டியவைகளையும் செய்து முடித்து விட வேண்டும், என்கிறது இக்குறள்.

விக்கல் வருங்கால் விடாய்தீர்த் துலகிடைநீ
சிக்கலெனுஞ் சிக்கல் திறலோனே- (திருவருட்பா)

உரை: நீர்வேட்கை யெழும்போது விக்கல் தோன்றுவது உடம்பின் இயல்பாதலால், தாகத்தால் விக்கல் தோன்றும் போது தண்ணீர் அருந்தி விடாதே.  தீர்த்துக்கொண்டு உலகவாழ்க்கைத் தொல்லையில் சிக்கிக் கொள்ளாதே என்று தன் பெயர்க் குறிப்பால் அறிவுறுத்தும் சிக்கல் நகரில் எழுந்தருளும் பெருமானே என உரைக்கின்றார் திருஞானசம்பந்தர். சிக்கல் நாகைப்பட்டினத்துக்கு மேற்கே 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

விக்கல் மாறிலி….
என் நினைவோ முடிவிலி..
உன் விக்கலின் காரணி
இல்லையென் நட்பினி. (Author unknown)


உன் விக்கலுக்கு காரணம் என் நினைவு என்று கூறினால் , நீ விக்கிக் கொண்டே இருக்க வேண்டியது தான் என்று அர்த்தம் !!!

இல்லையென்றாலும், வில்லங்கமாக "நான்தான் இங்கிருக்கேனே? யார் உன்னை நினைத்தார்?" என்று செல்ல சண்டை போடவும் செய்யலாம்.

தர்க்கமிட்டுற வாடி யீளைநொய்
கக்கல் விக்கல்கொ ளூளை நாயென
சிச்சிசிச்சியெ னால்வர் கூறிடவுழல்வேனோ  (திருப்புகழ்)

தர்க்கவாதம் செய்தும், உறவு பூண்டு பேசியும் (சில காலத்துக்குப் பின்னர்) கோழை நோய், வாந்தி, விக்கல் இவைகளால் அவதி உற்று ஊளை நாய் போல் இழிவு பட்டு சீச்சீ சீச்சீ என்று நாலு பேர் இழித்துப் பேச நான் திரிவேனோ? என்று வருந்துகிறார் அருணகிரிநாதர்.

 இதெல்லாம் யார் எப்போது விக்குகிறார்கள் என்பதைப் பொறுத்து அமைகிறது. யார் விக்கினாலும் கொஞ்சம் நெல்லிக்காயும், தேனும், தண்ணீரும்  கொடுங்கள்.

(இன்னும் வரும்)
.

ஹனுமானும் சைனாக்கார சன் வுகாங்-கும்

ஹனுமத் ஜெயந்தி - டிசம்பர் 16-2009 அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு இந்தப் பதிவு

பெரும்பான்மையான இடங்களில் ஒவ்வொரு வருடமும் சித்திரை சுக்கில பௌர்ணமி (மார்ச் - ஏப்ரல்) அன்று  கொண்டாடப்படுகிறது. தமிழ் நாட்டில் மார்கழி மாசம் (டிசம்பர் - ஜனவரி) கொண்டாடப் படுகிறது. (ஏன் இந்த நாள் வித்தியாசம் என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் பகிரலாம்).

பிறப்பு:

பிருஹஸ்பதி முனிவரின் ஆஸ்ரமத்தில் புஞ்சிகஸ்தலா (மனகர்வா என்ற அப்சரஸ்) தேவ சேவைகள் செய்து வந்தாள். இவளைத்தான் இராவணன் பலாத்காரித்து, "பெண்களை அவள் விருப்பத்திற்கு மாறாக தீண்டினால் தலை சுக்கு நூறாகத் தெறிக்கும்" என்ற பிரம்மனின் சாபம் பெற்றான். இராவணன் வால்மீகி இராமாயணத்தில் இவ்வாறு கூறுகிறான்.

பிதாமஹஸ்ய பாவனம் கச்சந்தீம் புஜ்ஞ்சிகச்தலாம்  |
சஞ்சூர்யமாநாமத்ராக்ஷமாகாஷே அக்னிஷிகாமிவ   || 6-13-11
அத்ராக்ஷ்ஹம் = நான் கண்டேன்; புஞ்சிகஸ்தலா = புஞ்சிகஸ்தலா (பெயர்); அக்னிஷிகாமிவ = நெருப்பைப் போன்ற ஒளியுடைய; சஞ்சூர்யமாநாம் = தன்னை ஒளித்துக் கொண்டவாறு  (இராவணனைக் கண்ட பயத்தில்); ஆகாஷே = வானில்; கச்சந்தீம் = போய் கொண்டிருந்தாள்; பாவனம் = சொர்கத்தை நோக்கி; பிதாமஹஸ்ய = பிரம்மனின் இடமான
ஒரு முறை  அக்னியைப் போன்ற ஒளியுடைய அப்சரஸ் ஒருவள், புஞ்சிகஸ்தலா என்ற பெயருடையவள், தன்னை தானே மறைத்து ஒளிந்து கொண்டு வானில் பிரம்மன் இருக்கும் சொர்க்கத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள்.
ஸா ப்ரஹஸ்ய மயா புக்தா க்ரிதா விவஸனா தத: |
ஸ்வயம்பூபாவனம் ப்ராப்தா லோலிதா நளினீ  யதா || 6-13-12
ஸா = அவள்; க்ரிதா = ஆக்கப் பட்டு இருந்தாள்; விவஸனா = ஆடைகள் இன்றி; மயா = என்னால்; புக்தா = அனுபவிக்கப்பட்டு; ப்ரஹஸ்ய = பலாத்காரமாக; தத: = அதன் பின்; ப்ராப்தா = அவள் சென்று அடைந்தாள்; ஸ்வயம்பூ  பாவனம் = பிரம்மனின் இடமான சொர்கத்தை; லோலிதா = நசுக்கி சிதைக்கப்பட்ட; நளினீ  யதா = ஒரு தாமரை போல;
அவளது ஆடைகளை நீக்கி அவளைப் பலாத்காரம் செய்தேன். அதன் பின், அவள் நசுக்கிச் சிதைக்கப் பட்ட ஒரு  தாமரையைப் போல, பிரம்மனின் இடமான சொர்கத்தை சென்றடைந்தாள்.
தச்சா தஸ்ய ததா மன்யே  ஜ்ஞானாதமாஸீன்மஹாத்மன:  |
அத ஸம்குபிதோ வேதா மாமிதம் வாக்யமப்ரவீ  || 6-13-13
மன்யே =நான் நினைக்கிறேன்; தச்சா = இது (இந்த விஷயம்); ஜ்ஞானாத = சொல்லப்பட்டது; ததா = அதன் பிறகு; தஸ்ய = பிரம்மாவுக்கு; மஹாத்மன: = மகாத்மாவான; அத = பிறகு; ஸம்குபித = கடுங்கோபம் கொண்ட; வேதா: = பிரம்மா; அப்ரவீத் = பேசினார்; இதம் = இந்த; வாக்கியம் = வார்த்தைகள்; மாம் = என்னிடம்
இந்த விஷயம் பிரம்மாவிடம் தெரிவிக்கப் பட்டதென்று நினைக்கிறேன். மகாத்மாவான பிரம்மா கடுங்கோபம் கொண்டு இந்த வார்த்தைகளைச் சொன்னார்.

அத்யப்ரப்ருதி யாமன்யாம் பலான்னாரீம் காமிஸ்யஸி   |
ததா தே ஷ்டதா முர்தா பலிஸ்யதி  ந சம்ஷய: || 6-13-14
அத்ய ப்ரப்ருதி = இன்று முதல்; காமிஸ்யஸி = காமம் கொண்டு ; யாம் அந்யாம் = வேறெந்த; நாரீம் = பெண்மணி; பலான் = பலத்தை பிரயோகித்து பலாத்காரம்; ததா = பிறகு ; தே = உனது; மூர்தா = தலை; பலிஸ்யதி = தூள் தூளாக (சுக்கு நூறாக); ஷடதா = நூறு (துண்டுகளாக); ந சம்ஷய: = சந்தேகமின்றி
இன்று முதல் காமத்தோடு நீ எந்த பெண்ணையும், உன் பலத்தைப் பிரயோகித்து பலாத்காரம் செய்தால், உன் தலை சுக்கு நூறாக தூளாகும். இதில் எந்த சந்தேகமும் இல்லை.
இத்யாஹம் தஸ்ய ஷாபஸ்ய பீதா: ப்ரஸபமேவ தாம் |
நாரோஹயே பலாத்சீதாம் வைதேஹீம் ஷயனே சுபே  || 6-13-15
பீதா: = பயத்தால்; தஸ்ய = அவரது; ஷாபஸ்ய = சாபத்தால்; இதி = இந்த வகையில்; அஹம் = நான்; நாரோஹயே சீதா (தா)ம் = சீதையை நான் ஒன்றும் செய்யவில்லை வைதேஹீம் = விதேக நாட்டு அரசரின் மகளான அவளை அடைய; சுபே = (என் ) கவர்ச்சிகரமான (அழகான); ஷயனே = படுக்கை; ப்ரஸபமேவ = அவசரப்பட்டு
பிரம்மனால் இந்த வகையில் சபிக்கப் பட்ட பயத்தால், நான் விதேக அரசரின் மகளான சீதையை பலாத்காரம் செய்ய எனது அழகான படுக்கைக்குக் கொண்டு செல்லவில்லை.
==================
இப்படியாக புஞ்சிகஸ்தலா தன்னையுமறியாது சீதைக்காக ஒரு உதவி புரிந்த பூர்வ ஜன்ம புண்ணியத்தால், மீண்டும் அஞ்சனையாகப் இப்புண்ணிய பூமியில் பிறந்து சிவனாரின் ரூபமான அனுமனின் தாயாகிறாள். அதைப் பற்றி மேலே படிக்கலாம்.

புஞ்சிகஸ்தலா ஒரு நாள் தெய்வ ஆராதனைக்காக பூக்கள் பறித்துக் கொண்டிருந்த பொழுது, மானுடப் பெண்கள் சிலர் தங்கள் துணைவரோடு உறவில் இருப்பதைக் கண்டு, உணர்ச்சிவசப்படுகிறாள். காமவயத்தில் அவள் பிருஹஸ்பதி முனிவரை கவர முயற்சிக்கிறாள். இதனால் கோபம் கொண்ட முனிவர் அவளைப் பெண்குரங்காக மாறும்படி சபிக்கிறார். அவள் மன்னிப்பு கேட்ட போது, சிவ ஸ்வரூபமாக ஒருவனை மகனாகப் பெறும் போது இந்த சாபத்தில் இருந்து விமோசனம் பெறுவாள் என்றும் சொல்கிறார்.

இப்படி குரங்காக மாறிய அப்சரஸ், கௌதம மகரிஷிக்குப் பெண்ணாகப் பிறந்து அஞ்சனை என்று அழைக்கப்படுகிறாள். இந்தக் குறிப்பு சிவபுராணத்தில் உள்ளது. கௌதமருக்கு அஹல்யா என்ற ரிஷி பத்தினி ஒருவர் மட்டுமே மனைவி என்பதால், இவரையே அஞ்சனையின் தாய் எனக் கொள்ளலாம். (ஆதாரக் குறிப்புக்கள் ஏதும் இல்லை. இது யூகம் மட்டுமே). அஹல்யாவின் தந்தை பிரம்மா என்று புராணங்கள் கூறுகின்றன. ஆகையால் அஞ்சனையின் தாய் வழித் தாத்தா பிரம்மன் என்பதாகிறது.

இங்கே குறிப்பிடத்தகுந்த ஒன்று: இராவணனின் தந்தை வழி தாத்தா பிரம்மன் என்றும் சிவபுராணம் குறிக்கிறது. அனுமனும், இராவணனும் பல மொழிகள் பேசும் வல்லமை பெற்று இருந்தனர். அனுமன் கிஷ்கிந்தையில் பேசும் மொழியான தெலுங்கு/கன்னடம் ஆகிய மொழிகள் சீதைக்குத் தெரியாது என்றும்,  வடமொழியான சமஸ்கிருதத்தில் பேசினால் இராவணன் என்று நினைத்து விடுவாள் என்றும், அயோத்தியாவின் மொழியான ப்ரகிரித் மொழியில் பேசியதாக இராமாயணம் கூறுகிறது.  க்ஷத்திரியர்களின் பாஷையான ப்ரகிரித் மொழி, சமஸ்கிருதத்துக்கும் புராதனமானது என்று நம்பப் படுகிறது. சிலர் இதை பண்பட்ட சமஸ்கிருதம் என்றும் கருதிகிறார்கள். அசோகச் சக்கரவர்த்தியின் கல்வெட்டுக்களில் இம்மொழி அதிகம் பயன்படுத்தப் பட்டுள்ளது என்று அகழ்வாராய்ச்சி வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். அனுமனும், இராவணனும் இசையில் சிறந்து விளங்கினர். இராவணனின் சகோதரன் விபீஷணன் கூட,

வாதே விவாதே சங்க்ராமே; பய் கோரே மகாவரே;
சிங்வ்யாக்ரதி சோரேப்ய ஸ்தோத்ரே பதத் பயம் ந ஹி; என்கிறார்.

அதாவது ஆஞ்சநேயா என்று அழைத்தாலே (பெயரை உச்சரித்தாலே) போதும், பேச்சு, வாக்கு, வாத விவாதங்கள் ஆகியவற்றில் வளமை பெற்று,  அதி பயங்கரமான பயன்கள் போன்றவையிலிருந்து விடுபடலாம். மேலும் பேரழிவை உண்டாக்கும் அபாயங்களில் இருந்தும் விடுபட்டு, செய்யும் எச்செயலிலும் வெற்றி பெறுவார் என்கிறார்.

இன்றும் ஹிந்துஸ்தானி இசையில் ஸ்ரீ ஹனுமத் ராகா என்ற ராகம் பாடப் பட்டு வருகிறது. இது தவிர அஞ்சனி கல்யாண் போன்ற இராகங்களும் ஹனுமானால் பாடப் பட்டவை என்கிறார்கள்.


இப்போது இருக்கும் வயலின் கருவி, இராவணன் கி.மு.5000-ஆம் ஆண்டுகளில் உருவாக்கிய இராவணஸ்தம் என்ற கருவியின் அடிப்படையில் அமைந்தது என்றும் கூறுகிறார்கள். அதேபோல, இராவணன் வாசித்த ஹஸ்தவீணை / இராவண ஹஸ்தம் (தந்திகள் கொண்ட வீணை)  ஏழாம் நூற்றாண்டில் இருந்ததாக அகழ்வாராய்ச்சி வல்லுனர்கள் கூறுகின்றனர். 22 அங்குல நீளமும், எட்டு கட்டைகள் (ஆக்டேவ்) கொண்டதும், குடம் தேங்காய் ஓட்டாலும், தண்டு மூங்கிலாலும், தந்திகள் உலோகத்தாலும், குதிரை வால் முடியாலும் செய்யப்பட்டு இருந்ததாகக் குறிப்புக்கள் புராணங்களிலும், நவீன ஆராய்ச்சி சான்றுகளிலும் உள்ளன. இப்படிப் பார்த்தால் வயலின் வாத்தியக் கருவி, மூன்று கட்டைகளும், நான்கு தந்திகளும், விரல் பலகை 5-1/4 அங்குலம் அளவுகளைக் கொண்டது. இது கணக்குப்படி நான்கால் பெருக்கும் போது இராவணஹஸ்தத்தின் அளவான 22 வருகிறது. அப்படியென்றால் அவர்களின் உருவ அளவை கற்பனை செய்து பாருங்கள். :)

இன்றும் இவ்வகை தந்தியுடைய கருவிகள் குஜராத் மற்றும் இராஜஸ்தானில் வாசிக்கப் படுகின்றன. புராணங்கள், இராவணனின் கொடியில் கூட வீணை முத்திரை இருந்ததாகக் குறிக்கிறது.  போரில் இராவணன் மூக-வீணை (வாயாலும் வாசிக்கலாமாம்) வாசித்து எதிரிகளின் நம்பிக்கையைக் குலையச் செய்வானாம்.   சரி, மீண்டும் அனுமனுக்கு வருவோம்.

அஞ்சனையின் கணவரான கேசரி வானர அரசராவார். கேசரியின் தந்தை ப்ரிஹஸ்பதி. ப்ரிஹஸ்பதி தேவகுருக்களில் ஒருவர், நாரதரைப் போன்ற சமகால தேவ ரிஷி ஆவார். அனுமன் தன் தந்தையென்று சொல்லும் போதெல்லாம் இவரை முதலிலும் பின்தான் வாயுவையும் குறிப்பிடுகிறார்.


அனுமனுக்கு இரு தந்தைகள் என்று புராணக் குறிப்புக்கள் உணர்த்துகின்றன. வாயு என்பவர் ஒரு தேவனாக இருந்திருக்கலாம், காற்றின் உருவமானவர் என்று குறிப்புக்கள் கூறுகின்றன. "மருத்" என்ற வம்சத்தினராக கருதப்படும் குழுவை உருவாக்கியவர் வாயு. மருத் என்பவர்கள் சிவனின் மகன்கள் என்றும் குறிப்புக்கள் உள்ளன. இவ்வகையில் அனுமன் சிவனின் பேரன் முறையாகிறார்.

இராமாயணத்தில் அனுமனின் பிறப்பு பற்றிய குறிப்புக்களில், அயோத்தி அரசரான தசரதன் பிள்ளை வேண்டி புத்திர காமேஷ்ட்டி யக்ஞம் செய்யும் போது அக்னி தேவன் ஹோமத்தின் (யக்ஞம்) பலனாக (பிரசாதம்) பாயஸம் ஒன்றை, தசரதனின் நான்கு மனைவிகளுக்குப் பகிர்ந்து அளிக்குமாறு கூறி,  கொடுக்கிறார். இந்நிலையில் சிவனை குறித்து கடுந்தவம் புரிந்த அஞ்சனைக்கு சிவரூபமாக ஒரு மகன் பிறப்பான் என்று வரமளிக்கிறார். தசரதன் கொண்டு செல்லும் பாயசத்தின் ஒரு பகுதியை கழுகு ஒன்று பறித்துச் செல்கிறது. இதில் சிதறிய துளிகளில் கொஞ்சம் காற்றில் கலந்து அஞ்சனையின் கைகளில் விழுகிறது. இதை அருந்தும் அஞ்சனைக்கு பின்னாளில் அனுமன் பிறப்பதாக சிவ புராணம் கூறுகிறது. பீமனும் வாயுவுக்குப் பிறந்ததாகக் கருதப் படுகிறான்.

மருத் வம்சத்தின் வாயுவின் மகன் என்பதால் வாயு புத்திரன் / மாருதி / பவன புத்திரன் என்றும், அஞ்சனை மகன் என்பதால் ஆஞ்சநேயன் என்றும், வானர அரசரான கேசரி மகன் என்பதான் கேசரி நந்தன் என்றும், வஜ்ஜிரம் (வைரம்) போன்ற உடலுடையவர் என்பதால் பஜ்ரங்கபலி (சமஸ்கிருதம்) என்றும், சிவரூபமானதால் மகாருத்ரன் என்றும் அழைக்கப் படுகிறார்.

மகாராஷ்ட்ராவில் உள்ள த்ரிம்பகேஷ்வர் என்ற இடத்திற்கு அருகில் உள்ள பிரம்மகிரி மலை அனுமன் பிறப்பிடமாக கருதுகிறார்கள்.  சிலர் கர்நாடக மாநிலத்தில் (மாநிலமாக நவம்பர் 1, 1956-ஆம் ஆண்டு உருவானது) உள்ள ஹம்பியில் (இப்போது விஜயநகர சாம்ராஜ்யத்தின் வரலாற்று மிச்சங்கள்), பம்பை நதிக்கரையில் அமைந்துள்ள ரிஷ்யமுக பர்வதம் என்றழைக்கப்படும் மலையில் பிறந்ததாகவும் கருதுகின்றனர்.

மேலும் ஜார்கண்ட் மாநிலத்தில் கும்லா என்ற இடத்திலிருந்து 18 கி.மி. தொலைவில், ஆஞ்சன் என்ற கிராமம் ஒன்றும் உள்ளது, அஞ்சனை இருந்ததால் இப்பெயர் காரணம் என்கின்றனர். இன்றும் நான்கு கிலோமீட்டர் மலை உயரத்தில் குகைகள் இருப்பதாகவும், அங்கே அகழ்வாராய்ச்சிக்கு உகந்த பொருட்களும் கிடைப்பதாக கூறுகின்றனர். இந்தப் பொருட்களை பாட்னாவில் காட்சிக்கு வைத்துள்ளனர்.

தொன்மை மற்றும் சிறப்பு மிக்க வழிபாட்டுத் தலங்கள்:
  1. மிகத் தொன்மையான ஆஞ்சநேயர் சிலையொன்று கஜுராஹோவில் உள்ளது. இதை கி.பி.883-யில் 'காஹில் மகனான கோல்லாக்' என்பவர் நிறுவியதாக கல்வெட்டுக் குறிப்புள்ளது.
  2. ஜலந்தரில் உள்ள பில்லௌர் (பஞ்சாப்) என்ற 50362 கி.மி. பரப்பளவில் சங்கட மோச்சன் ஸ்ரீ ஹனுமான் மந்திர் உள்ளது. இக்கோவிலின் உயரம் 121 அடியாகும். இங்கு உயரமான 67 அடி ஆஞ்சநேயர் சிலை உள்ளது.
  3. மகாராஷ்டிரா NH-6-ல் அமைந்துள்ள நந்துரா என்ற இடத்தில் 105 அடியுள்ள சிலை உள்ளது.
  4. தமிழ்நாடு நாமக்கல்லில் சுயம்பு எனக் கருதப் படும் 18 அடி உயரமுள்ள சிலை உள்ளது. இது வளர்ந்து வருவதாகக் கூறுகிறார்கள். இதனால் இங்கு கூரை வேயப் படவில்லை.
  5. 108 திவ்ய க்ஷேத்திரங்களில் ஒன்றான சோழிங்கூர் / சோளிங்கர் (வேலூர் வாலாஜா தாலுக்கா) என்ற இடத்தில் யோக ஆஞ்சநேயர் சின்ன மலையில் அமைந்துள்ளார். இதற்கு 480 படிகள் உள்ளன. சங்கு, சக்கரம், ஜபமாலை, ஜப சங்காரம் ஏந்திய நான்கு கைகள் (சதுர்புஜம்) உள்ள ஆஞ்சநேயரை இங்கு காணலாம்.
  6. ராகிகுட்டா ஆஞ்சநேயர் கோவில் பெங்களூர் ஜே.பி.நகரில் உள்ளது. இக்கோவில் ஒரு குன்றின் மேல் அமைந்துள்ளது.
  7. நேருல், நவி மும்பையில் ஒரு தொன்மையான ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. வெள்ளிக் கவசத்தோடு கூடிய சிலை காணப் படுகிறது.
  8. சென்னை நங்கநல்லூரில் 32 அடி உயரமுள்ள ஆதிவியாதிஹர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. ஒரே கல்லில் செய்யப்பட்ட ஆஞ்சநேயர் சிலை இங்கு மிகவும் சிறப்பு மிக்கது.
  9. ஒரிசா ரூர்கேலாவில் 72 அடி ஹனுமான் சிலை உள்ளது.
  10. ஆந்திரா குண்டூர் பொன்னூரில் 30 அடி ஹனுமான் சிலை உள்ளது.
  11. ராஜஸ்தான் தௌசா-வில் உள்ள ஹனுமானை டாகுர்ஜி (ஸ்ரீ மேஹந்திபுர்ஜி பாலாஜி)என்று அழைக்கிறார்கள். 
  12. ஆந்திராவில் பரிதலா என்ற இடத்தில் 135 அடி ஆஞ்சநேயர் உள்ளார். (2003 ஆம் ஆண்டு கட்டப்பட்டது)
  13. கும்பகோணத்தில் பஞ்சமுக அனுமான் - கிழக்கை நோக்கி குரங்கு முகம் (அ) ஹனுமான் (புத்தி-வெற்றி), தெற்கில் சிங்க முகம் (அ) நரசிம்மர் (வெற்றி-தைரியம்),  மேற்கில் கருட முகம் (அ) விஷ்ணு (மாந்த்ரீகம் மற்றும் விஷம் நீக்க), தெற்கில் வராஹம் (அ)  விஷ்ணு, வான் நோக்கி குதிரை முகம் (அ) ஹயக்ரிவர் (ஞானம் மற்றும் குழந்தைச் செல்வம்)
  14. இவற்றில் மிக முக்கியமாக ஹிமலாயாவில் உள்ள சித்ரகூட், அனுமன் ஓய்வெடுக்கும் இடமாகக் கருதப் படுகிறது. மலை முகட்டில் அமைந்துள்ள கோவிலும் ஹனுமான் தாரா என்று அழைக்கப் படும் நீர்வீழ்ச்சியும் ஒரு அற்புத அனுபவம். 
  15. பஞ்சவடியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்
 

சைனாக்கார சன் வுகாங்
குரங்கு அரசனான சன் வு குங் (Sun Wukong) என்பவன் கற்பனையில் உருவாக்கப்பட்ட நாயகனாகக் கொண்டு 1590-யில் மிங் டைனாஸ்டியின் போது எழுதப் பட்ட சீன இலக்கியங்களில் மிகவும் புகழ் பெற்ற ஒன்றாகும். மிகவும் சுவாரசியமான எழுத்து நடைக்கு இவ்விலக்கியம் ஒரு சிறந்த உதாரணம். Journey to the West பி.டி.எப். கோப்பு இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ள கிளிக் செய்யுங்கள். நூறு அத்தியாயங்களுடன் மொத்தம் 1410 பக்கங்கள் இருக்கின்றன.

இந்த இலக்கியம் இவன் வானிலிருந்து விழுந்த ஒரு துகளிலிருந்து பிறந்ததாகக் கூறுகிறது. பேராற்றல் படைத்த வீரனாகவும், குரங்குகளிலேயே மிகவும் அழகானவனாகவும் (!!?), மிருகமாகவும், மனிதனாகவும், உருவத்தை பெரிதாக்கியும், சிரியதாக்கியும் கொள்ள முடியும் ஆற்றல் கொண்டும், 72 வகையான உருவத்தில் தன்னை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டும், கூடு விட்டு கூடு பாயும் சக்தியோடும் விளங்கினானாம். 13500 கேட்டி (jīn (or) catty i.e., 1 jīn = 8,100 kgs ) அளவுக்கு பாரம் தூக்கும் பலம் பெற்றவனாகவும், ஒரு நிமிடத்திற்குள் 108,000 Li (1 Li = 500 metres) தொலைவு தாண்டக் கூடிய ஆற்றலும் கொண்டிருந்தானாம். டாவோயிசம் (Taoism) கற்றவனாகவும் இருந்தானாம்.

டன் சங் ஜங் (Tan Sang Zang) என்றவன் (அரசன்!!) பயணம் செய்து கொண்டிருந்த போது இவனைச் சந்தித்து, இவனை காக்கின்றனர். இருவரும் நட்பாகி விட்டனர். இவனுக்கு மனிதர்கள் போல பேசவும் நடந்து கொள்ளவும் கற்றுக் கொடுத்தானாம். மேலும் சன்-னுக்கு மந்திர மாந்த்ரீக ஆற்றல்களையும் கற்பித்தானாம். Space Shifting என்று இப்போது அழைக்கப் படும் ஆகாய கமனம்  (ஆகாய பயணம்/விண் நடமாட்டம்) செய்தலையும் சன் கற்றானாம். வழியில் இவர்கள் இருவரைச் சந்தித்து அவர்களும் கூட்டணியில் இணைகின்றனர்.

தன் உடலின் ஒவ்வொரு ரோமத்தையும் ஒரு உயிராகப் படைக்கும் வித்தையையும் கற்பித்தானாம். (கவனிக்க: லங்கா தகனத்திற்குப் பிறகு அனுமன் தன் வாலை கடலில் முழ்க வைத்து அணைக்கும் போது சிந்திய வேர்வைத் துளியிலிருந்து பாதாள லோக காப்பாளன் மகர-த்வஜன் பிறந்ததாக இராமாயணம் கூறுகிறது)

இவனால் ஒரே சமயத்தில் பல தலைகளையும், பல கைகளையும் ஒரே உடலில் உருவாக்க முடியுமாம். (கண் கட்டு வித்தையோ??!!) நீருக்குள்ளும், நெருப்பிலும் எந்த பாதிப்பும் இல்லாமல் கடக்க முடியுமாம். இவன் நினைத்த மாத்திரத்தில் கொதி நீர்ச் சுனையிலும், ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் நீரிலும் மூழ்கிக் குளிக்க முடியுமாம். இவனுக்கு பச்சிலை வைத்தியம் தெரிந்திருந்ததாம். ஆனால் ஒரே ஒரு முறை மட்டும் ஒரு அரசனனின் உயிர் காக்க இந்த ஆற்றலைப் பயன் படுத்தினானாம். (துரோணகிரியில் இருந்த, லக்ஷ்மணனைக் காத்த பச்சிலையோ???)  இவனை பீ மா வென் / Bi Ma Wen (பீமவான்!!) என்றும் கூறுகிறார்கள். இவன் குதிரைகள் அடக்கவும் அவற்றை தன் கட்டுப் பாட்டில் கொண்டுவரவும் ஆற்றல் மிக்கவனாம். ஒருமுறை இவன் கடலைக் கடந்து கொண்டிருந்த போது நான்கு டிராகோன்-களைக் கொன்றானாம்.

சன் வுகாங் பெருவிழா (Monkey God Festival) சீனாவில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதங்களில் கொண்டாடப் படுகிறது.

கண்டோனிய மொழியில் ஸ்யுன் இங் ஹூங் (Syun Ng Hung) என்றும், கொரியாவில் சொன் ஒஹ் கோங் (Son Oh Gong) என்றும், வியட்நாமில் டான் இங்கோ கோங் (Ton Ngo Khong) என்றும், ஜப்பானில் சொன் கோகூ  (Son Goku) என்றும், இந்தோனேசியாவில் சன் ஹோ காங் (Sun Go Kong) என்றும் அழைக்கப்படுகிறான்.

 ( ^_^ )


.

நா தஸ்ய ப்ரதிமஸ்தி


பதிவர் அ. மு. செய்யது ரொம்ப நாள் முன்னர் என்னுடைய இந்தப் பதிவில் "நா தஸ்ய பிரதிம அஸ்தி" அவனுக்கு எந்தவொரு தோற்றமும் கிடையாது. (யசூர் வேதம் 32:3)" என்றும் ய‌சூர் வேத‌ம் சொல்லியிருக்க‌, ர‌விவ‌ர்மாவால் வ‌ரைய‌ப்ப‌ட்ட‌ ச‌ர‌ஸ்வ‌தி ஓவிய‌த்தை,க‌ட‌வுளாக‌ பாவித்து இந்துக்க‌ள் தொழுவ‌தேன் ??" என்றும் கேட்டிருந்தார்.

அப்போது என்னிடம் எந்தவொரு reference-ம் (ஆதாரங்கள்) இல்லாததாலும், ஏனோ தானோ என்று எதுவும் பேசுவதில் உடன்பாடில்லை என்பதாலும் உடனடியாக எதுவும் சொல்ல முடியவில்லை.

நா தஸ்ய ப்ரதிமஸ்தி என்ற இந்த விவாதத்தை முதலில் எழுப்பியவர் முகமதியராக இருந்தாலும் வேதங்களைப் படித்து அறிந்த, மதிப்புக்குரிய டாக்டர்.ஜாகீர் நாயக் அவர்கள். சமஸ்கிருதத்தின் பதம் பிரிக்கும் முறைகளை அனுமன் போலவே கையாண்ட இவரின் மொழிப் புலமையை வியக்கிறேன். விஞ்ஞானமும் சமஸ்கிருதமும் மட்டும்தான் எடுத்தார் கைப்பிள்ளை. சொல்லும் வண்ணம், பதம் பிரிக்கும் வண்ணம், வளைந்து கொடுத்து நமக்கேற்ற மாதிரி ஒரு அர்த்தம் பலனையும் கொடுக்கும்.

"நா தஸ்ய ப்ரதிமஸ்தி" என்பது ஒரு யஜுர்வேதக் கடலில் இருந்து எடுக்கப்பட்டவொரு சின்னத் துளி.

ஒரு கதையில் ஆசிரியர் "நான் குற்றம் புரிந்த ஒருவன் ஓடுவதைக் கண்டேன்" என்று எழுதி இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இதில் "நான் குற்றம் புரிந்த ஒருவன்" என்பது ஒரு பக்கத்திலும் "ஓடுவதைக் கண்டேன்" என்பது மற்றொரு பக்கத்திலும் பதிக்கும்போது பதிந்துவிட்டால், அதைப் படிப்பவர் பிற்பகுதியை படிக்காமல் விட்டுவிட்டால், அதை மாற்றான அர்த்தம் கொள்வதும் புரிந்துகொள்வதும் யார் தவறு?

ஒரு வக்கீல் போல, நமக்குச் சாதகமாக ஒன்றை பேச, ஒரே ஒரு வரி கிடைத்து விட்டால், அதை வைத்துக் கொண்டே கொஞ்ச காலம் வாதாட முடியும். புகழடைய முடியும். ஆனால் அதுதான் சரி என்று முடிவெடுக்க முடியாது. உண்மையை மறைப்பதும் பொய்யா இல்லையா? ஒரு திறமையான வக்கீலால் எந்தவொரு சின்ன வார்த்தையைக் கையில் எடுத்து யாருக்கு வேண்டுமானாலும் எதிரான ஆயுதமாக ஆக்க முடியும். இதையெல்லாம் யார் போய் ஆராய்ந்து கொண்டிருக்கப் போகிறார்கள் என்ற அலட்சியப் போக்கு. மேலும் நம் மக்கள் விரைவிலேயே எதையும் மறந்துவிட்டு அடுத்த பிரச்சினையை கவனிக்கப் போய் விடும் ஆற்றலும்தான் இந்த மாதிரியான பொறுப்பற்ற கருத்துப் பகிர்தல்களுக்கு அடித்தளமாக ஆகி விடுகிறது. இதைப் பற்றி விமர்சிக்கவோ விவாதிக்கவோ போவதில்லை இங்கு.

விரைவில் யஜுர்வேதத்தின் முழுமையானத் தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்பெயர்பை பி.டி.எஃப்-ஆக வெளியிடுகிறேன். இதை முழுதாகப் படிக்கும் பொறுமையிருந்தால் நா தஸ்ய ப்ரதிமஸ்தி என்பதன் விரிவான அர்த்தம் புரியும். ஒரு வரியிலோ, ஒரு பதிவிலோ அடக்க முடியாத பெருங்கடல் அது.

எனக்கு புரிந்ததை மட்டும் சொல்கிறேன்.

ரவி வர்மாவால் வரையப்பட்ட சரஸ்வதி ஒரு தென்னிந்தியப் பெண்ணை மாடலாக வைத்து வரையப்பட்டது. ரவி வர்மாவின் படங்கள் பெரும்பாலும் உயிருடன் இருக்கும் பெண்டிரை வைத்துதான் வரையப்பட்டன. இவரால் வரையப்பட்ட படங்கள் இன்றும் பூஜையறையில் வைத்து வணங்கப்படுகின்றன என்றால் அவரது கலைக்கும் திறமைக்கும் கிடைத்த அங்கீகாரம் அது. மாடலாக இருந்த பெண்டிர்களுக்கும் அழியாத இறைநிலையை அளித்த அவரது ஓவியங்களை என்னவென்று சொல்வது. இன்றும் கூட இந்திய கலைப் பொருட்கள் விற்பனையில் தஞ்சாவூர் ஓவியங்களுக்கு அடுத்து ரவிவர்மாவின் ஓவியங்கள்தான் உலகெங்கும் அதிக விலையில் விற்கப்படுகின்றன.

நான் இன்றும் வியந்து இரசிக்கும் படங்களில் சில. இந்தப் படங்களில் தெறிக்கும் உணர்வுகளைப் பாருங்கள். எவ்வளவு அழகான ஓவியங்கள்.


இவள் கங்கை.


அர்ஜுனனும் சுபத்திரையும்


தாதிப் பெண்

இறைவன் மனிதனின் நேர்மறையான நம்பிக்கை என்றே வேதங்கள் கூறுகிறது. நம் நம்பிக்கையின் ரூபமாக அல்லாவாக, ஏசுவாக, கிருஷ்ணனாக அல்லது சரஸ்வதி, இல்லை வேறு எந்தக் கடவுள் என்றாலும் அவர்களை நாம் இறைவனின் பிரதிநிதியாக அல்லது messenger ஆகவே வரித்துள்ளோம் என்பதை ஏறத்தாழ எல்லாருமே ஒப்புக் கொண்டிருக்கிறோம். இந்த இறைத்தூதர்கள் கொண்டு வந்த செய்தி "மனிதத்துவம்" மற்றும் "அன்பு".

ஒருவர் தன் நம்பிக்கைக்குப் பெயர் சூட்டுவது சரியென்றால் அதே நம்பிக்கைக்கு இன்னொருவர் தனக்கு பிடித்த உருவமும் கொடுத்துக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது? போகும் பாதை எதுவென்றாலும் இருவரின் இலக்கு "மனிதத்துவம்" மற்றும் "அன்பு" என்ற செய்தியை மற்றவருக்கும் கொடுப்பது மட்டும்தானே?

இலக்கை விட்டு, பாதையிலேயே உழன்று கொண்டிருந்தால், இலக்கை என்று சென்றடைவது? அவரவர் தனக்குக் கிடைத்த பாதையில் சென்றாலே போதுமே. டிராபிக் ஜாம் எதுவும் இல்லாமல் சுலபமாக இலக்கை அடைந்து  விடலாமே. வடையை சாப்பிடாமல் அதில் உள்ள துளைகளை எண்ணிக்கொண்டிருந்தால், வடையை யார் சாப்பிடுவது?

அவர்கள் கொண்டு வந்த செய்தியைத் தொலைத்து விட்டு தூதர்களை விமர்சித்துக் கொண்டிருக்கிறோம் என்பதில் எந்த மதத்தினரும் ஒருத்தருக்கொருத்தர் சளைத்தவராக இல்லை. எல்லோருக்குமே அவரவர் நம்பிக்கை மதிப்புக்குரியதாகவும் இருக்கிறது. அவற்றை சக மனிதர்களின் நம்பிக்கையை விட உசத்தியாக காண்பிப்பதையும் முக்கியமாக நினைக்கிறார்கள். என் நம்பிக்கை சிறந்தது என்று நினைப்பதில் தவறே கிடையாது. அதற்காக அடுத்தவர் நம்பிக்கையை பொய் என்று சொல்வதும், தம் நம்பிக்கையை அடுத்தவர் மீது திணிப்பதும், நிச்சயம் திணிக்கப்பட்ட நம்பிக்கையின் வாழ்நாளைக் குறைக்கும். நம்பிக்கையின் ஆதாரமே, 'அட, இதை நம்பலாம் போலருக்கே' என்று நினைக்கும் சுதந்திரம்தான்.

என் முந்தைய பதிவில் சொன்ன மாதிரியே, என் பதின் பருவங்களில் நான் அலட்சியம் செய்த சிலவற்றை, அதன் பின்னணியில் இருக்கும் காரண காரியங்கள் தெரிந்ததும் ஆச்சரியம் அடைந்து, அவற்றையே நானும் நம்ப ஆரம்பித்தேன். இந்தக் கருத்துக்கள் என் மீது திணிக்கவோ, கட்டாயப்படுத்தவோ முயற்சிக்காமல் என் தேடலுக்கும், வாசிப்புக்கும் துணை நின்ற என் தந்தையை நான் அடிக்கடி நினைத்துக் கொள்வேன். நான் ஒவ்வொரு விஷயத்தையும் ஏன், எதற்கு என்று கேட்டுத் தெரிந்து கொள்ளும் போது என் தந்தை மகிழ்ச்சியோடு ஒவ்வொன்றையும் விளக்குவார்.

எனக்குச் சொல்லப்பட்ட ஒவ்வொரு விஷயங்களிலும் என் தனிப்பட்ட நலன் மட்டுமின்றி என் குடும்பத்தின் நலனும் அடங்கியே இருந்தன. காரணங்கள் தெரிய ஆரம்பித்ததும், நாளடைவில் எந்தக் கேள்வியும் கேட்காமல் அவர்கள் சொன்னதை செய்து விட்டு, பின்னர் அதற்கான பலன் கிடைத்ததும் அதற்கான அர்த்தங்களை உணரவும் ஆரம்பித்தேன். இன்று அவர்கள் நம்பிக்கையை நான் புறந்தள்ளாமலும், என் மகளுக்கு எடுத்துச் சொல்லும் போது என் தந்தை கையாண்ட முறையையே பின்பற்றுகிறேன்.

சரி சொந்தக்கதைகளை விட்டு விஷயத்துக்கு வரலாம்.

என் தாயை நான் தெய்வம் என்று நினைத்தால் என் தாய்க்கும், ஒரு நடிகையை அதே போல நினைத்தால் அவருக்கும் கூட, எனக்கு இட வசதியும், அளவுக்கு மீறிய பணமும், வேறு முக்கியப் பொறுப்புக்களோ எதுவும் இல்லாமலும் இருந்தால் கோவில் கட்டி சிலையும் வைக்க எனக்கு தனி மனித சுதந்திரம் இருக்கிறது, இல்லையா?

நமக்கு பிடித்திருந்தால் அங்கு போய் வணங்கலாம். பிடிக்காவிட்டால் ஒன்று போகாமல் இருக்கலாம், இல்லை, அங்கு போய் இருக்கு சிற்பங்களின் கலையழகை இரசித்து விட்டு மட்டும் வரலாம். சில வைஷ்ணவக் கோவில்களில் கிடைக்கும் பிரசாதங்கள் சாப்பிடவும் கூட ரொம்ப பிரமாதமாக இருக்கும். :))

இந்துக்கள் இறைவனும் இறைவியுமாக பல உருவங்களில் ஏன் கொண்டாடுகிறார்கள்?

யோகா பற்றி நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஆனால், யோக நிலையின் பல்வேறு நிலைகளில் ஒன்றானது குண்டலினி யோகா. இந்த யோக நிலையின் உச்சத்தை அடையும் போது, யோகிக்கு பல்வேறு உணர்வுகளின் காட்சிகள் தெரிகின்றன. இவற்றை வெறுமே வாயால் விரித்துச் சொன்னால் புரிபடுவது சிரமம் என்பதால், அதை உருவகப்படுத்தி இருக்கிறார்கள். இதற்கான படங்கள் என்னிடம் கிடைக்கவில்லை. இல்லையென்றால் இந்த சிறு விளக்கத்தோடே இந்த பதில் முடிந்திருக்கும்.

பகவத் கீதையில் (7:21) "எந்த வடிவத்தில் என்னை வணங்கினாலும் அதே ஆகிறேன்" என்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.

குளியல் சோப்பு இருக்கிறது. அதைப் பயன்படுத்துவதின் நோக்கம் உடல் சுத்தமாக வேண்டும் என்பதுதான். அதில் ஏன் இவ்வளவு வகைகள் இன்று சந்தையில் இருக்கிறது? ஒன்றில் moisturiser அதிகம் இருக்கு என்றும், இன்னொன்றில் pH குறைந்து இருக்கு என்றும், வாசனை சோப் என்றும், சினிமா நட்சத்திரம் உபயோகிக்கும் சோப் என்றும் பலவிதமாக சந்தைப் படுத்துவது ஏன்? ஒரே வீட்டில் எல்லோரும் இருந்தாலும், ஆளுக்கொரு சோப் வைத்துக் கொள்கிறோமே அது ஏன்? அடிப்படை சுகாதாரம் மற்றும் உடல் அழுக்கை நீக்கும் என்பதற்காக இருக்கும் சோப்பிலேயே இவ்வளவு வகைகள்.

தாய் பிள்ளை என்றாலும் தனித்தனி விருப்பு வெறுப்புக்கள் கொண்ட மனித மனத்துக்குள் நம்பிக்கைகள் எத்தனை விதங்கள்! அவற்றிற்கு எத்தனை உருவங்கள் கொடுத்திருக்கலாம். மனிதன் கடந்து வந்த பாதைகளில் இருப்பதையெல்லாம் மரியாதையோடும் பக்தியோடும் புனிதமான ஒன்றாகவே பார்த்து வந்திருக்கிறான்.

வாழ்வா சாவா என்ற இக்கட்டான ஒரு நிலையில் இருக்கும் ஒருவருக்கு, மற்றவரது தகுந்த நேரத்தில் செய்த உதவி, சின்னதே என்றாலும், உதவி பெற்றவனின் மனம், உதவி செய்தவரை தெய்வமாக்கி விடுகிறது. அல்லது அதற்குச் சமமான உயரிடத்தை அவர் இதயத்தில் பெற்று விடுகிறார். இல்லையா?

எல்லோருக்குமே ஒரே மாதிரிதான் இயற்கை மழையாகவும் வெயிலாகவும், காற்றாகவும் இருக்கிறது. மரங்கள் காய்கனிகளைத் தருகின்றன. நதிகளும் கடலும் நீர் தருகின்றன. இவற்றை எல்லாமே தெய்வங்களாக்கிப் பார்க்கிறது இந்துத்துவம். தான் நம்பியதை அடுத்தடுத்த வம்சங்களுக்கும் pass செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஒரு கோவிலும் ஒரு உருவமும் கொடுத்து, பரம்பரையாக கொண்டாடிய குலதெய்வ பழக்கங்கள் உண்டாகின. இதனால் கோவில்களும், உருவங்களும் பெருகின.

இந்துத்துவத்தில் இருக்கும் கருத்து சுதந்திரம் எனக்கு பிடித்தமானது. யாரையும் விமர்சிக்காமல், புண்படுத்தாமல், கட்டுப்படுத்தாமல், ஒரு பண்பான ஆசிரியர் போல, இது நல்லது, உனக்கு உடன்பாடென்றால் பின்பற்று என்றும், ஒருவேளை பின்பற்றினால் விதிமுறைகளின் படி பின்பற்றினால் நல்லதென்றும், விதிமுறைகளை மீறுவதால் உண்டாகும் விளைவுகளையும் மட்டும் வேதங்கள் சொல்லியிருக்கிறது. பின்பற்றவில்லையென்றால் உனக்கு கேடு விளையும் என்று வேதங்களில் எங்கும் சொல்லப்படவில்லை.

பதினெட்டு கையுடைய துர்கை அத்தனை ஆயுதங்களின் பிரயோகத்திலும் தேர்ச்சி பெற்றவர் என்பதையே குறிக்கிறது. உருவகப்படுத்தும் போது, ஒருவருக்கு இத்தனையும் தெரியும் என்பதை எப்படிக் காட்டுவது? அதனால் பதினெட்டு கைகள் கொடுத்திருக்கலாம்.

வீணை வாசிக்கப்படுவது போன்ற உருவமும் (சரஸ்வதி), ஐந்து தலை நாகத்தில் மனிதன் படுத்திருப்பது போன்ற உருவமும் (விஷ்ணு) குண்டலினி யோகத்தின் உருவகங்களே. யோக சாஸ்திரங்களின் சுலோகங்களைப் படிக்கும் போது, அதில் அந்தந்த யோகத்தின் உச்சநிலையை விவரித்தபடி படமாக வரைந்தால், நிச்சயம் இந்துக் கடவுள்களின் உருவங்களை ஒத்த ஒரு காட்சி விரியக்கூடும்.

இது என் கருத்து மட்டும்தான். இதில் நிறைய பேருக்கு உடன்பாடு இல்லாமலும் இருக்கலாம். யாரையும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்க.

இன்னும் சிறிது தேடினால் இதற்கான படங்களும் ஆதாரங்களும் நிச்சயம் எங்கோ இருக்கலாம். தேடுவேன் :)

இந்தத் தேடலில் நான் அறிந்த சில விஷயங்கள். உங்களுடன் பகிர்தல்.

கிருஸ்துவ சமூகத்தில் ஏசுபிரான் மற்றும் பைபிள் ஒன்றுதான். ஆனால், லத்தின் கதோலிக், சிரியன் கதோலிக் சர்ச்சுக்குள் போகமாட்டாராம். இவர்கள் இருவருமே பெண்டேகோஸ்ட் சர்ச்-க்கு போகமாட்டாராம்.இவர்கள் மூவரும் மர்தொமா சர்ச்-க்கு போகமாட்டாராம்.மர்தொமா மற்றவர்களது சர்ச்-க்கு போகமாட்டார்.இந்த நால்வருமே சால்வேஷன் ஆர்மி சர்ச்-க்கு போகமாட்டார்கள்.இந்த ஐந்து பேருமே செவன்த் டே அட்வெண்டிஸ்ட் சர்ச்-க்குப் போக மாட்டார்கள்.மேற்சொன்ன ஆறு குழுவினரும் ஆர்தொடாக்ஸ் சர்ச்-க்குப் போக மாட்டார்கள்.இந்த ஏழு பேருமே ஜகோபைத் சர்ச்-க்கு போக மாட்டார்கள்.கேரளாவில் மட்டும் 146 விதமான கிருஸ்துவப் பிரிவினர்கள் இருக்கிறார்கள்.இதில் எந்தப் பிரிவினருமே மற்ற சர்ச்சுகள் போவதில்லை அல்லது தமக்கு வரும் நன்கொடைகளைப் பகிர்வதில்லை.

இங்கு இப்படி இருக்க, முஸ்லிம்களில் அல்லா, குரான், நபிகள் எல்லாம் ஒன்றுதான் என்கிறார்கள். ஆனால்,ஷியா மற்றும் சுன்னி முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.ஷியாக்கள் சுன்னி முஸ்லிம்கள் மசூதிகளுக்குப் போக மாட்டார்கள். அகமதிய மசூதிகளுக்கு இவர்கள் இருவருமே போக மாட்டார்கள். சுஃபி மசூதிக்கு இந்த மூவரும் போக மாட்டார்கள்.முஜாஹித்தின் மசூதிகளுக்கு இவர்கள் யாருமே போகமாட்டார்கள். 13 ஜாதிப் பிரிவுகளைக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒரே புனித நூலை அடிப்படையாக கொண்டு, இறை நம்பிக்கை வளர்க்கும்  மனிதர்களிடமே இத்தனை வித்தியாசங்கள்.

1,280 புனித நூல்கள், 12,000 விளக்கங்கள், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட உபவிளக்கங்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள், பலதரப்பட்ட மடங்கள், ஆசாரியர்கள், ரிஷிகள், நூற்றுக்கணக்கான மொழிகள் என்று இருக்கிறது கூட இந்து மதத்தில் இருக்கும் சுதந்திரம் காரணமாகத்தான். ஆனாலும் ஹிந்துக்கள் அனைவரும் எல்லாக் கோவில்களுக்கும் அவரவர் விருப்பம் போல போகிறார்கள்.

சிலை/உருவ வழிபாடு முறையை ஹிந்துக்கள் மட்டும்தான் பின்பற்றுகிறார்கள் என்று இல்லை.  முஸ்லிம்கள் மெக்காவைக் குறித்த ஒரு காபாவையும், கிருஸ்தவர்கள் சிலுவையையும் ஒரு உருவம்/idol ஆக வரித்துக் கொண்டுதான் தத்தம் தொழுகைகைகளையும், பிரார்த்தனைகளையும் செய்கிறார்கள். படங்களும், ஓவியங்களும், சிலைகளும் இதைப் போன்ற தனிநபர் மன உருவங்களின் வெளிப்பாடுதான்.

பழுத்துப் போன ஆன்மீகவாதிகளுக்கு இறைவனைக் காண மீடியம்(medium) ஏதும் தேவைப்படுவதில்லை. ஆனால் என்னைப் போன்ற ஆரம்ப நிலை கத்துக்குட்டிகளுக்கு இதுதான் இறைவன் என்று சொல்லித்தான் தலை வணங்கவே கற்றுக் கொடுத்தார் என் தந்தை. பூஜையறையையும், கோவில்களையும் கடக்கும் போதெல்லாம் கன்னத்தில் போட்டுக் கொள்வதும், ஒரு ஆம்புலன்ஸ் அலறிக்கொண்டே போனால் கூட "கடவுளே அவர்களோடு இரு" என்று வேண்டிக் கொள்வதும் கூட, என் தந்தையார் எனக்குள் இறைவனாக வரித்த உருவங்கள் இருப்பதால் மட்டுமே. இல்லையென்றால் என் தலை வானை நோக்கியே பார்த்துக்கொண்டு, கர்வம் தலைக்கேறி, அடுத்தவர் உணர்வுகளை குனிந்தும் பார்க்காமல், அஹங்கார குழிக்குள் என்றோ விழுந்திருப்பேன்.

மனதிற்குள் மட்டும் உருவமே இல்லாத இறைவைனைக் காணும் அளவுக்கு நமக்கு பக்குவம் வந்து விட்டிருந்தால், நாம் இங்கு blog எழுதிக் கொண்டு, சாயந்திரம் சப்பாத்திக்கு தாலா இல்லை, உருளைக் கிழங்கு குருமாவா என்று கவலைப் பட்டுக் கொண்டிருக்க மாட்டேன். அடுத்த மாதம் வரும் அரியர்ஸ் பற்றியும், Activa மற்றும் Wagon-R சர்வீஸ் நாட்களையும் எண்ணிக் கொண்டு டைரியில் குறித்துக் கொண்டிருக்க மாட்டோம்.

முக்கியமாக டூம்ஸ் டே இவ்வளோ சீக்கிரம் வந்து விட்டதே. என் பெண் கல்யாணத்தை பாக்காமலே போயிடுவேனோ என்றெல்லாம் கவலைப்படமாட்டேன்.:))

அழுத்தப்பட்டப் பந்து எப்படி நீரிலிருந்து வெளியேறி விழுந்து விடுமோ, கட்டுப்படுத்தி திணிக்கப்பட்ட கருத்துக்களும், கட்டுப்படுத்துபவன் இருக்கும் வரை இருப்பது போலத் தெரிந்தாலும், காலப்போக்கில் மறைந்து விடும். நம் சமயங்கள் உணர்த்துவது அன்பு மட்டும்தான். நம் வீடுகள் தனித்தனியென்றாலும், பயணிக்கும் பாதைகள் வெவ்வேறேன்றாலும், நம் இலக்கு ஒன்றுதான். இலக்கையே குறித்திருப்போம். நம் நம்பிக்கையை மதிப்பது போலவே மற்றவர் நம்பிக்கையையும் மதிப்போம். இல்லை, குறைந்த பட்சம் விமர்சிக்காமலாவது இருக்கலாமே. :)

ஒரு நாட்டின் கொடி என்பது துணியில் வரையப்பட்ட ஓவியம்தான். ஆனால் தன் நாட்டுக் கொடியை காக்க இராணுவ வீரர்கள் உயிரைக் கூடத் தியாகம் செய்கிறார்கள். துணியில் வரையப்பட்ட கொடியின் உருவம் அவருக்கு அவ்வளவு மதிப்பு மிக்கதாக ஆகி விடுகிறது, இல்லையா?

சாதாரண வெள்ளைத் தாள் எந்த மதிப்பும் இல்லாதது. ஆனால் அதன் மேல் அரசாங்கத்தின் முத்திரை இட்டிருந்தால், அதை வைத்து கோடிக்கணக்கில் ஊழல் செய்யும் அளவுக்கு மதிப்பு மிக்கதாகி விடுகிறதே?

மின்சாரம் உருவமற்றது. ஆனால் மின் விசிறியோ அல்லது ஏ.சியோ இருந்தால்தான் நம்மால் காற்றைப் பெற முடிகிறது இல்லையா? இரவில் ஒரு ட்யூப் லைட் இருந்தால் தான் ஒளி பெற முடிகிறது. இல்லை அந்த ஆற்றலை ஒரு பாட்டரி மூலம் பெறுகிறோம் இல்லையா?

அதே போலத்தான், ஆற்றலை, ஒருவர் பஜாஜ் ஃபேன் ஆகவும், இன்னொருத்தர் கெய்தான் ஃபேன் ஆகவும், வேறொருவர் ஹவெல்ஸ் ஃபேன் ஆகவும் அவரவர் வீட்டுக் கூடத்தில் பொருத்திக் கொண்டு காற்றை வாங்கி கொண்டிருக்கிறார்கள்.

ஒரு அற்புதமான வாசிப்பு அனுபவத்திற்குத் தூண்டிய அ.மு.செய்யதுக்கு நன்றிகள் பல.

யாரையும் புண்படுத்தும் நோக்கமோ, விமர்சிக்கும் எண்ணத்துடனோ எழுதவில்லை. இதில் உள்ளவை என் கருத்துக்கள் மட்டுமே.

யாரையும் காயப்படுத்தாதீர்கள் தாழ்மையான கோரிக்கையோடு ஆரோக்கியமான விவாதத்திற்கு வைக்கிறேன்.

நன்றி.


.

முட்டாள் தாத்தாவும் மூடப் பாட்டியும்

வாயில் பல்லெல்லாம் போன பிறகும் ஓயாமல் தஸ்-புஸ்ஸென்றும்... பக்..பக்கென்றும் எனக்கு தலை சுற்றி, பித்தம் தலைக்கேறி, வாந்தி வரும் அளவுக்கு பேசியே கொல்லும் தாத்தாவிடமிருந்து பதுங்கி ஒளிந்தோடிய போது வராத உணர்வு,

"காலாட்டாதேடி. உறவு பிரிஞ்சிரும்" என்று பாட்டி சொல்லும் போது  "பேசிப் பேசி சும்மா தொளைக்காத பாட்டி" என்று சள்ளென்று விழுந்து போன போதும் ஏற்படாத உணர்வு,

"மை பொட்டு வச்சுகாதேடி, மாமனுக்கு ஆகாது" என்று வைய்யும் (திட்டும்) அத்தையிடம் "சரி சரி. போரும்" என்ற என் அகம்பாவம் தலைவிரித்து ஆடிய போது ஏற்படாத உணர்வு,

அம்மா "ஈரத் தலைய வாராத. சனியன் பிடிக்கும்" என்ற போது, "போம்மா. சும்மா அறுக்காத" என்ற என் திமிர் பேசியபோதும் ஏற்படாத இந்த உணர்வு,

காலையின் அலுவலக அவசரத்தில் நான் ஓடிக்கொண்டிருக்க, என் மாமியார் ஒவ்வொரு கீரையாக அரைக்கீரையைத் தட்டித் தட்டி ஆய்ந்து வைக்கும் போது "இவ்வளோ மெள்ளமா செஞ்சா லேட்டாயிடும். நைட் செஞ்சுக்கலாம்" என்ற போது "ஏன்? இருக்குற தரித்திரம் போதாதா? ராத்திரி கீரை செஞ்சு வேற கொண்டு வரணுமா?" என்ற போது அதில் இருந்த உள்குத்தான சொல்லம்பு மட்டும் புலப்பட்டு, உள்ளுக்குள் குமைந்த போது ஏற்படாத இந்த உணர்வு,

"அப்படிச் செய்யாதேடி மகாலக்ஷ்மி போயிடுவா" என்றெல்லாம்  மிரட்டிக் கொண்டே அவர்கள் இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்தால் இன்னும் நிறையா தெரிஞ்சு கொண்டிருக்கலாமே என்ற உணர்வு வந்தன்று எங்கள் தாத்தா-பாட்டியின் பதினைந்தாவது நினைவு நாள்.

வரிசையாக ஏதேதோ பல அறிவியல் மற்றும் விஞ்ஞான புத்தக வாசிப்பின் போது, அவர்கள் கூறிய வசனங்களும் அறிவுரைகளும் தானாகவே "repeat telecast" ஆகி சுய ஒப்பீடு  செய்துகொண்டு, என்னைப் பார்த்து கெக்கலித்த அந்த வினாடி

என் புத்தியை மூடியிருந்த "எனக்கெல்லாம் தெரியும். நீ சும்மாயிரு பாட்டி" என்று அறைகூவிய கர்வத்திரை விலகி, "இந்த அம்மாவே இப்படித்தான்" என்ற ஆங்காரம் அழிந்து, "ம்ச்.. அறுவை" என்ற அலட்சியம் தொலைந்து, "இதுக்கு இருக்கும் திமிரப்பாரு" என்ற வெஞ்சினம் ஒழிந்து, "எனக்குத்தான் புரியவில்லை போலருக்கு" என்ற வெட்கம் தோன்றி அவர்களின் வார்த்தைகளை மனதும் என் கையேடும் குறிக்க ஆரம்பித்து, அதைப் பற்றிய தேடலும் துவங்கியது. இன்னும் கற்றது கைமண்ணின் துகள் அளவில் கூட இல்லை என்பதும் புலப்பட்டது.

நம் மூத்தோர்கள் சொன்னதெல்லாம் மூட நம்பிக்கைகளா? அதன் பின்னணியில் அப்படி என்னதான் காரணம் இருந்திருக்கும்? அதையெல்லாம் போய் ஏன் மகாலக்ஷ்மியுடனும், மாமனுடனும், மூடத்தனமாக இணைத்தார்கள்? இன்னும் நம்மில் சிலர் அதையே பின்பற்றுவதுடன், நம் குழந்தைகளுக்கும் சொல்ல விழைவதேன்?

புரியவில்லையே? சந்தன முல்லையின் இந்தப் பதிவையும் பாருங்கள்.

சில நம்பிக்கைகள் தற்போதைய சூழ்நிலைக்கு ஒத்து வராது என்பதால் அவற்றை ஒதுக்கலாமே தவிர, தற்போதைய விஞ்ஞான வளர்ச்சிகள் இல்லாத முன்பிருந்த சூழலுக்குப் பொருத்தமாயிருப்பதால் அவற்றை மூடநம்பிக்கை என்று தள்ள முடியாது என்பது என் தாழ்மையான கருத்து.

இப்போது உடனடியாக நினைவிலிருக்கும் ஒன்றிரண்டு நம்பிக்கைகளில் மூடத்தனம் ஏதும் இல்லை என்பதைக் குறிக்கிறேன்.

1. இடக்கண் துடித்தால் நல்லதா கெட்டதா?

பொதுவாகவே இந்தியாவில் இடக்கண் துடித்தால் நல்லதென்றும் வலதுகண் துடித்தால் அபசகுனம் என்றும் கூறுவார்கள். இதே போலவே சீனா, ஹவாய், ஆப்ரிக்கா போன்ற இடங்களிலும் இதே போன்ற நம்பிக்கை நிலவுகிறது.

மருத்துவ ரீதியாகப் பார்த்தால், அதீத உழைப்பு, தூக்கமின்மை, மனஅழுத்தம், நரம்புத் தளர்ச்சி, ரத்தவோட்டம் சீராக இல்லாதிருத்தல் போன்ற காரணங்கள் வலது கண்ணை துடிக்கச் செய்கின்றன.

மகிழ்ச்சி, குதூகல உணர்வு, பிட்ட்யூடரி சுரப்பி (pitutary) எண்டார்பின் (endorphins) என்ற compound சுரக்கும்போதும் இடக்கண் துடிக்கிறது.

2.  மாமிசத்தை வேறு இடத்துக்கு சமைத்து/அப்படியே உணவுக்காக கொண்டு போகும் போது கரித் துண்டு (charcoal) வைத்து எடுத்து போகவேண்டும். சுடுகாடு வழியாக போகக் கூடாது. 

கரி சயனைட் போன்ற கொடூரமான விஷ வாயுக்களைக் கூட உறிஞ்சிக்கொள்ளும் தன்மை உடையது. மேலும் கரித்தூள் குழந்தைகளுக்கு ஏற்படும் colic மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படும் உப்புசம், வாயு மற்றும் அஜீரணக் கோளாறுகளையும், அல்சர் போன்ற வயிற்று சம்பந்தமான நோய்களையும் குணமாக்கும் மருத்துவ குணம் கொண்டது. சிறு வயதிலிருந்து ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து கரித்துண்டை உண்டு வந்தால் அவரை விஷம் தாக்காது என்று சித்த மருத்துவத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

நோய் தொற்று மற்றும் இறந்தவர் உடலில் இருந்து கிளம்பும் நோய்க்கிருமிகள் போன்றவை மாமிசத்தை எளிதில் தாக்கக் கூடும்.

3. வெற்றிலை போட்டால் படிப்பு வராது / மாடு முட்டும் / நாய் கடிக்கும் இன்னும் பிற....

பன்னிரண்டு வயதுக்குள், நாக்கு (சுவை மொட்டுக்கள் / taste buds) இன்னும் முழுமையாக முதிர்ச்சி அடையாத நிலையில், வெற்றிலையின் காரம் மற்றும் வெற்றிலை நரம்புகளில் உள்ள சில இரசாயனங்கள் நாக்கின் சுவை மொட்டுக்களை கொன்று விடும். இதனால் நாக்கு தடிக்கும். பேச்சும் சரியாக வராது. அதனாலேயே படிப்பு வராது என்று சொல்லி இருக்கலாம்.

4. உப்பில் கால் பட்டால் தரித்திரம் வரும் (and so on....) உப்பைக் கொட்டினா சண்டை வரும், பிறகு இன்னொருவருக்கு உப்பு தரும் போது கையால் தரக்கூடாது. உப்பிருக்கும் பாத்திரத்தைத்தான் தரவேண்டும்.

உப்புக்கு வரி விதித்த காலங்களில் இது தோன்றி இருக்கலாம். இருந்தாலும், உணவுப் பொருட்கள் எதையுமே காலால் இடறுவதோ, உதைப்பதோ, மிதிப்பதோ அவ்வளவு நாகரீகம் இல்லை மேலும் சுகாதாரமானதும் இல்லை. விலை அதிகம் என்பதால் உப்பு கீழே சிந்தக் கூடாது, வீணாகக் கூடாது என்ற காரணத்தால் கூறப்பட்டிருக்கலாம்.

மேலும் உப்பை கையால் எடுத்தால் உப்பு நீர் விட்டுக்கொள்ளும். பிசுபிசுத்து மறுநாளே உபயோகிக்க முடியாமல் ஆகி விடும். வேண்டுமானால் ஒரு முறை செய்து பாருங்களேன்.

5. வீட்டில் யாராவது வெளியே போயிருந்தால், வீடு துடைக்கக் கூடாது / தலைக்கு குளிக்கக் கூடாது and so on...

இது முற்றிலும் sentimental தான். யாராவது வீட்டில் இறந்து விட்டால் அவரை தூக்கி இடுகாட்டுக்கு போய், தீ வைத்த பின், ஒருவர் வீட்டுக்குச் செய்தி அனுப்புவார். அப்போது வீடு முழுதும் அலம்பித் துடைத்து, வீட்டில் இருக்கும் அனைவரும் தலை முழுகுவார்கள். அதாவது அவருடனான பந்தத்தை அன்றோடு விடுவித்ததாக ஆகும். இதனால்தான் யாராவது வீட்டை விட்டு கிளம்பியதும் துடைப்பதோ தலை குளிப்பதோ கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள்.


ஊருக்குப் போகும்போது தலைக்கு எண்ணெய் வச்சு தலைகுளிக்கக்கூடாது! 

முன்னெல்லாம் எண்ணெய் வைத்து தலை குளிப்பார்கள். உடல் அசதி ஏற்படும். எண்ணைக் குளியலுக்குப் பின் பயணம் செய்தால் உடல்நலக் குறைவு ஏற்படும். அதிக வேலைகள் / நடை பயணம் போன்றவற்றால் ஏற்படும் வியர்வையால் ஜலதோஷமும் உண்டாகும். இப்போதும் ஷாம்பூ போட்டுக் குளித்தாலும், பயணம் செய்தால் எனக்கெல்லாம் தலை வியர்த்து மதியத்திற்கு மேல் தலை வலிக்க ஆரம்பித்து விடுகிறது :(

===============================================

மூடநம்பிக்கைகளும் அதன் பின்னணியில் உள்ள உண்மைகளையும் நம்மிடம் திரித்துப் பேசிய அந்த முட்டாள் தாத்தாவும் மூடப் பாட்டியும் பற்றி இன்னும் பேசுவேன் தொடரும்  பதிவுகளில்.


--விதூஷ்.






.

மஹாபாரதத்தில் வெற்றிக்கு இரகசியம்

நன்றி: படங்களுக்கு போட்டோ பக்கெட்டுக்கு நன்றி.

இதில் பெரும்பாலான பகுதிகளை ஈமெயில்-லில் சமஸ்கிருதத்தில் இதை அனுப்பிய யாரோ (ரமேஷ் என்று மட்டும் இருந்தது) - அவருக்கு ரொம்ப நன்றி. இந்தப் பதிவை எழுதத் தூண்டியதும் அவர் அனுப்பிய செய்தியே. அதெப்படி ஈமெயில் முகவரி தெரியாமல் அனுப்புகிறார்கள் என்று தெரியவில்லை :(

தமிழாக்கம் செய்தது, மற்றும் சில பகுதிகளை இணைத்தது மட்டுமே என் வேலை:)

===============================================================

இந்தியாவின் இரண்டாவது மாபெரும் இதிகாசமான மஹாபாரதம், "பாரதத்தில் சொல்லாதது பாரதத்தில் இல்லை" என்று கூறுமளவுக்கு பரந்த விரிந்து அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கியது. இது கி.மு.3000-ஆம் ஆண்டு ஹரப்பா நாகரீகம் தோன்றிய சமயத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது.

மஹாபாரதம் மூன்று முறை விவரிக்கப்பட்டுள்ளது.
  • ஜெயம் - வைசிய மஹரிஷியால் விநாயகருக்கு சொல்லப்பட்டது
  • பாரதம் - வைசம்பாயண மஹரிஷியால் ஜன்மேஜயனுக்கு சொல்லப்பட்டது
  • மஹாபாரதம் - சூதர் (அ) சௌதர் (அ) உக்கிரஸர்வர் என்ற மஹரிஷியால் நைமிசாரண்யத்தில் உள்ள ரிஷிகளுக்கு விவரிக்கப்பட்டது (நைமிசாரண்யம் உத்திரப்பிரதேசத்தில் சீதாபூர் மாவட்டத்தில் உள்ளது).
நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பல விஞ்ஞானச் சான்றுகளை உள்ளடக்கியுள்ளது. பாரதத்தில் கூறப்பட்ட பெரும்பான்மையான விஷயங்கள் பின்பு விஞ்ஞானிகளால் / மருத்துவர்களால் உண்மைதான் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் (patent)பேடன்ட் என்னவோ இன்னும் அவர்கள் பெயரிலேதான் இருக்கிறது. சரி அதை விடுங்கள்.
  • விண்வெளி பற்றியக் குறிப்புக்களில் யுரேனஸ் (ஸ்வேதா) மற்றும் நெப்ட்யூன் (க்ஷரகா) போன்றவையும்,
  • புவியியல் குறிப்புக்களில் கம்போடியா (காம்போஜம்), கசாக்கிஸ்தான் மற்றும் ஸ்கான்திநேவியா (உத்திரகுரு) ஆகியவற்றைப் பற்றியக் குறிப்புக்கள்,
  • கணிதத்தில் 10, பத்தின் பவர் 10 to the power (+16) முதல் 10 to the power (- 16) வரையான எண்வரிசைகள்
  • போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் இன்றும் நாம் நியூக்ளியர் வெபன்ஸ் / கெமிக்கல் வெபன்ஸ் என்று கூறப்படும் அணு / இரசாயன ஆயுதங்களோடு இணைத்துப் பார்க்கும் அளவுக்கு ஒற்றுமையுள்ளதாக இருக்கிறது,
  • போர் முறைகள், போர் அமைப்புக்கள் மற்றும் போர் தந்திரங்கள்,
  • ஆன்மீகம், மனோதத்துவம், சமூகவியல், இறையாண்மை, வாழ்வியல் நெறிகள், அரசியல், மேலாண்மைத்தத்துவங்கள் (மேனேஜ்மண்ட் டெக்னிக்ஸ்)
இது போன்ற நாம் என்னவோ இப்போதுதான் கண்டுபிடித்ததாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும், இவையனைத்துமே பாரதத்தில் ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றன.

சரி, அதென்ன பாரதத்தில் வெற்றியின் இரகசியம்?

======

கௌரவ-பாண்டவ படைபலம் - ஒரு ஒப்பீடு

கௌரவர்கள் - 11 அக்ஸௌஹிணி
பாண்டவர்கள் - 7 அக்ஸௌஹிணி

சே, இவ்வளவுதானா என்கிறீர்களா? ஒரு அக்ஸௌஹிணி என்பது என்ன தெரியுமா?
  • 21870 தேர்கள் - இதில் ஒவ்வொரு தேருக்கும் ஒரு அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட குதிரை, தேரோட்டி மற்றும் ஒரு வீரர்
  • 21870 யானைகள் - ஒரு யானைப்பாகன் மற்றும் ஒரு வீரர்
  • 65610 குதிரைகள் - வீரர்கள்
  • 109350 காலாட்படை (மனிதர்கள் - ஆண் மற்றும் பெண்கள்)
இது 1:1:3:5 என்ற விகிதத்தில் இருப்பதையும் காணுங்கள்.

இதை தவிர படை குழுத்தலைவர்கள், தளபதிகள், சேனாதிபதிகள், அரசர்கள், மந்திரிகள், ஆலோசகர்கள் என அதிகம் பேர் உள்ளனர்.

======

தலைமை ஏற்றவர்கள்

(இது முதலிலிருந்து கடைசிவரை வரிசை தனிநபர் ஆற்றல் சார்ந்து அமைந்துள்ளது)

கௌரவர்களுக்கு பீஷ்மர், துரோணர், கர்ணன், சல்லியன், க்ருபாச்சாரியர், அஸ்வத்தாமன், துரியோதனன்

பாண்டவர்களில் அர்ஜூனன், பீமன், த்ருஷ்டத்தும்னன், அபிமன்யூ, கடோத்கஜன், சிகண்டீ, சத்யகீ

======

பிண்ணனி

பாண்டவர்கள் - 13 வருடங்கள் நாடு கடத்தப்பட்டனர். தனியாக இராஜ்ஜியம் ஏதுமில்லை. அவர்களுக்கு அரசியல் மற்றும் பொருளாதார உதவிக்கு பக்கபலமாக அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களே அமைந்திருந்தனர். பாஞ்சாலர்கள், யாதவர்கள், மகதர்கள், சேதீக்கள் போன்றவர்கள் மட்டுமே இதில் அடக்கம்.

கௌரவர்கள் - 13 வருடங்கள் ஆட்சியில் இருந்தனர். துரியோதனன் இளகிய மனம் கொண்ட, நல்லாட்சி புரிந்த அரசனாக இருந்திருக்கிறான். குடிமக்கள் பாண்டவர்கள் ஆட்சியில் இல்லாததால் துன்புற்றதாகவெல்லாம் கூறப்படவில்லை. துரியோதனனிடம் ஹஸ்தினாபுரம் போன்ற செல்வச்செழிப்பு மற்றும் வளமை மிகுந்த இடங்கள் இருந்தாலும், பாண்டவர் தம் கடின உழைப்பால் மேம்படுத்திய இந்திரப்பிரஸ்தம் ஹஸ்தினாபுரத்தை விட அதிக வளமையும் அழகும் கொண்டதாக இருந்தது. இந்திரப்பிரஸ்தத்தையும் தனதாக்கிக் கொண்டான் துரியோதனன். துரியோதனனுக்காக கர்ணன் நாடெங்கும் போரிட்டு முழு நாட்டையும் துரியோதனனின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான்.
======

கௌரவ-பாண்டவ போர் வந்த காரணம்


கௌரவர்கள் சார்பாக துரியோதனன் சொன்னது - போரில்லாமல் ஒரு ஊசி முனையளவு நிலம் கூட தரமாட்டோம், என்றான். துரியோதனன் போர் செய்வதிலேயே குறியாக இருந்தான். அந்த ஒன்று மட்டுமே நிகழும், நிகழ வேண்டும் என்றே விரும்பினான். அவன், எல்லாம் தனக்கே உரிமையானது என்பதால், சூழ்ச்சியாலோ, அநீதி இழைத்தோ, தனக்குக் கிடைத்த அனைத்தையும் தானே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக எந்தச் செயலையும் செய்யத் தயாராக இருந்தான்.

பாண்டவர்கள் சார்பாக யுதிஷ்டிரன் சொன்னது - நாய் எப்படி மாமிசத்துண்டிற்காகப் போராடுகிறதோ அதே போல நம் ராஜ்ஜியத்திற்காக போராடுவோம் என்றான். பாண்டவர்கள் இழிவுபடுத்தப் பட்டார்கள், அவர்களது மனைவி அவமானப்படுத்தப்பட்டாள். அவர் ராஜ்ஜியம் பறிக்கப்பட்டது. இருந்தாலும் யுதிஷ்டிரன் போரை தவிர்க்கவே விரும்பினான். ஐந்தே ஐந்து கிராமங்களைக் கொடுத்தால் கூட போரை நிறுத்துவதாக அறிவித்தான் யுதிஷ்டிரன்.
======

போரின் பலன்

இவ்வாறு, 18 நாட்கள் போர், 10 நாள் பீஷ்மர், 3 நாள் துரோணர், 1 1/2 நாள் கர்ணன், 1/2 நாள் பொது, 1 நாள் சல்லியன், 1 இரவு அஸ்வத்தாமன் என்று நடந்தது.

இப்போரில் பீஷ்மர், துரோணர், கர்ணன் மற்றும் அவனது மகன்கள், சல்லியன், பாகதத்தன், புரீஸ்வரன், சசர்மன், ஜயத்ரதன், துச்சாதனன், சகுனி, உலூகன், துரியோதனனின் 99 சகோதரர்களுமாகிய அனைவருமே கொல்லப்பட்டனர்.

பாண்டவர்களில் துருபதன், விராடன் மற்றும் அவனது மகன்கள், அபிமன்யூ, கடோத்கஜன், ஐரவன் ஆகியோர் கொல்லப்பட்டனர். 18-ஆம் நாளிரவு அஸ்வத்தாமன் பாண்டவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது கொன்றான்.
======

பாண்டவர்கள் எப்படி வென்றார்கள்?

கௌரவர்கள் சார்பாக கர்ணன் நாடெங்கும் போர் செய்து அடக்குமுறை மூலம் பல்வேறு இராஜ்ஜியங்களை வென்று கைப்பற்றினான். கௌரவர்கள் இதனால் அதிப்படியான உயிர்சேதம், ஆற்றல் இழப்பு, பொருள் விரயம் மற்றும் புதிய பகையையும் உண்டாக்கிக் கொண்டனர்.

பாண்டவர்கள் நாடிழந்து மறைந்து வாழ வானப்ரஸ்த்தம் செய்த போதும் தன்னுடைய பலவீனங்களை அடையாளங்கண்டு பலமாக்கிக் கொண்டனர். யுதிஷ்டிரன் இன்னொரு முறை சூதாட்டத்திற்கு அழைக்கப்பட்டால் ஜெயிக்கும் வண்ணம், கந்தர்வ ச்சத்ரசேனா என்பவரிடமிருந்து சூதாடக் யாருமே அவனை ஜெயிக்க முடியாதளவு கற்றறிந்தான். மேலும் பல்வேறு ரிஷிகளையும் முனிவர்களையும் சந்தித்து அவர்அர்ஜுனன் திவ்யாஸ்திரங்களை கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றான். பீமன் அனுமனின் சகோதரனைச் சந்தித்து தன் பலத்தை மேம்படுத்தும் பயிற்சிகளில் ஈடுபட்டான்.

உங்கள் பலவீனங்களை அடையாளங் காணுங்கள். அதை பலமாக மாற்றுங்கள்.
======

நட்பு / உறவுகள்

கௌரவர்கள் ஒரே ஒரு தலைவனைக் கொண்டு அவன் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. பழைய உறவுகளான காந்தாரம் (சகுனி), சிந்து (ஜயத்ரன்) மற்றும் காம்போஜம் (பாகதத்தன்) ஆகியோரைத் தவிர புதிய நட்புக்கள் எதுவுமே உருவாக்கவில்லை. மாறாக அடக்குமுறை மூலம் புதிய பகைவர்களை உண்டாக்கினார்கள்.

பாண்டவர்கள் தனக்கென்ற அதிகாரம் ஏதுமின்றி இருந்தாலும், பாஞ்சாலம் (திரௌபதி), துவாரகை (சுபத்திரை), மகதம் (விஜயா - சகாதேவன் மனைவி), சேதீ (கரேன்மயீ - நகுலன் மனைவி), காசி (பலாந்தாரா - பீமன் மனைவி), காகேயம் (தேவிகா - யுதிஷ்டிரன் மனைவி), மத்ஸயம் (உத்தரா - அபிமன்யூ மனைவி), ராக்ஷஸர்கள் அனைவரும் (ஹிடம்பீ - பீமன் மனைவி), நாகர்கள் அனைவரும் (உலூபி - அர்ஜுனன் மனைவி) போன்ற திருமண பந்தங்கள் கொடுத்த உறவுகள் இந்தியா முழுதும் பரவியிருந்தனர்.

சான்றோர் மற்றும் ஆற்றல் மிக்கவரின் நட்பை / உறவைப் பேணுங்கள்

======

தலைமை

கௌரவர்களுக்கு ஒரு நேரத்தில் ஒரே ஒரு தலைவன் தான் படையை நடத்திச் சென்றான். அவனுக்கு மட்டுமே 11 அக்ஸௌஹிணி அனைத்தையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் முறையே பீஷ்மர், துரோணர், கர்ணன், சல்லியன் மற்றும் அஸ்வத்தாமன் ஆவார்கள். இவர்களும் கடமையால் கௌரவர்கள் சார்பில் இருந்தாலும் மனத்தால்/உணர்வால் பாண்டவர்களுக்கே அனுகூலமாக இருந்திருக்கிறார்கள்.

பாண்டவர்கள் ஏழு அக்ஸௌஹிணிக்கும் ஒவ்வொருவரென ஏழு தலைவர்கள் இருந்தனர், அவர்கள் முறையே மத்ஸய அரசரான விராடன், பாஞ்சால அரசரான துருபதன், மகத அரசரான சகாதேவன், சேதீயின் அரசரான த்ரஷ்டகேது, துவாரகையிலிருந்து வந்த ஒரே வீரனான சத்யகீ, பாஞ்சால இளவரசரான சிகண்டீ. த்ருஷ்டத்யும்னன் படைத்தளபதியாகவும், அர்ஜுனன் போர்தலைவனாகவும், கிருஷ்ணர் போர் ஆலோசகராகவும், அர்ஜுனனுக்கு சாரதியாகவும் இருந்ததாக கூறுகிறது.

======

குழுவுணர்வு / ஒத்த சிந்தனை


கௌரவர்களிடம் குழுவுணர்வோ ஒருமித்த சிந்தனையோ இல்லை. அவரவருக்கு தனிப்பட்ட சொந்த விஷயங்களுக்காக போரிட்டனர். பீஷ்மர் ஹஸ்தினாபுர அரியணையில் இருக்கும் அரசனைக் காக்க சபதமெடுத்ததாலும், துரோணரும் கிருபாச்சாரியாரும் கடமையுணர்வாலும், சல்லியன் பாண்டவர்கள் சபையிலிருந்து துரியோதனனால் ஏமாற்றப்பட்டு சூழ்ச்சியால் தம் பக்கம் இழுத்துக்கொண்டதாலும், கர்ணன் அர்ஜுனன் மீது கொண்ட பகையுணர்ச்சியாலும், துரியோதனன் மீதுள்ள நட்பின் நன்றிக்கடனுக்காவும் கூடி இருந்தனர். ஆனாலும் இவர்களுக்குள்ளே ஒருவருக்கொருவர் பிடிக்காமலும், பகையும் உள்ளுக்குள்ளேளே இருந்தது. அதாவது பீஷ்மருக்கு கர்ணனும், சகுனியும் விரோதிகள். சகுனிக்கு கர்ணன் விரோதி. கர்ணனுக்கு சல்லியன் விரோதி. சல்லியனுக்கு பீஷ்மர் விரோதி. இதனால் ஈக்களையும், கொசுக்களையும், வண்டுக்களையும் ஒரே குடுவையில் இட்டால் எப்படி சத்தமாக இருக்குமோ அதேபோல இவர்கள் கூடாரத்தில் எப்போதும் பகையுணர்ச்சியின் ரீங்காரம் கேட்டுக்கொண்டே இருந்தது.

பாண்டவர்களே, ஒரு குழு ஒரே நோக்கம். அனைவரும் கிருஷ்ணர் மற்றும் யுதிஷ்டிரன் என்ன சொன்னாரோ, அதன்படியே நடந்துகொண்டனர். போரிடச் செல்லும் போது, அர்ஜுனன் மற்றும் பீமன் சொற்படியே மற்ற அனைவரும் நடந்தனர். சகோதரர்கள், மாமன், மாமனார், கொழுந்தன் என அனைவருமே உறவினர்கள். அனைவருமே முடிவெடுக்கும் தருணங்களில் ஒன்றாவே இருந்தார்கள்.

உங்கள் பொறுப்புக்களை பகிருங்கள்.

========

தனிநபர் கருத்துக்கள்/நம்பிக்கைகள்

கௌரவர்கள் சபையில், துரியோதனனைத் தவிர வேறு யாருக்கும் போரில் விருப்பமில்லை. அவனைத் தவிர அவன் குழுவில் இருந்த தலைவர்கள் அனைவருமே பாண்டவர்கள் மீது அபிமானம் கொண்டவர்கள்.

  • பீஷ்மருக்கு பாண்டவர்கள் பேரக்குழந்தைகள் என்பதால் இவர் ஒவ்வொரு நாளும் போரில் ஆயிரம் பேரைக் கொன்றாலும் பாண்டவர்களைக் கொல்ல மாட்டேன் என்று சபதம் பூண்டார்.
  • துரோணருக்கு பாண்டவர்கள் மாணவர்கள், இவரும் பாண்டவர்களை சிறைபிடிப்பதாகவும் கொல்ல மாட்டேன் என்றும் சபதம் பூண்டார்.
  • சல்லியன் (நகுல சகாதேவனின் தாய்மாமன்) கர்ணனின் சாரதியாக இருந்தான். இவன் துரியோதனனின் சூழ்ச்சியால் கௌரவர்களை ஆதரிக்கும் படி ஆனதால், கௌரவர்கள் பக்கம் இருந்தாலும், கர்ணனை சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் தோல்விபயம் மற்றும் எதிர்மறை சிந்தனைகளைக் கொடுத்து அவன் ஆற்றலைக் குறைத்தான். இதனால் இவன் மறைமுகமாக பாண்டவர்களையே ஆதரித்தான்.
  • கர்ணன் பாண்டவர்களில் மூத்தவன், அதனால் குந்தியிடம் அர்ஜுனனைத் தவிர வேறு யாரையும் கொல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்கிறான். தாயே இந்தப் போர் முடியும் போது உங்களுக்கு நிச்சயம் ஐந்து மகன்கள் மிஞ்சுவார்கள் என்று இவன் சொல்லும் பகுதிகளைப் படிக்கும் போது, கர்ணன் மீது அளவில்லா பாசம் ஏற்படும் நமக்கு. கண்ணீரையே வரவழைக்கும் பகுதிகள் அவை. கர்ணனைப் பற்றி எழுதுவதென்றால் பக்கங்கள் போதாது.

ஆனால் பாண்டவர்களோ திட்டமிட்ட செயல்வடிவமும், யார் என்ன செய்ய வேண்டும் என்ற நோக்கமும், குழுவுக்கான செயல்பாடுகளையும் ஏற்கனவே நிர்ணயித்தனர். அதாவது, த்ருஷ்டத்யும்னன் துரோணரையும், சிகண்டீ பீஷ்மரையும், சத்யகீ புரிஸ்வரர்களையும், அர்ஜுனன் கர்ணனையும், பீமன் துரியோதன் மற்றும் அவன் சகோதரர்களையும், சகாதேவன் சகுனி மற்றும் அவன் மகன்களையும், நகுலன் கர்ணனின் மகன்களையும் குறித்து போரிட முடிவு செய்திருந்தனர். சூழ்நிலைக்கேற்ப செயல்முறைகளை மாற்றினார்கள் ஆனால் நோக்கத்தை கடைசி வரை மாற்றவேயில்லை.

ஒரே நோக்கமுடைய குழுவுணர்வை வளருங்கள்.
நோக்கங்களையும் செயல்பாடுகளையும் திட்டமிடுங்கள்.

========

ஈடுபாடு
  • கௌரவர்களிடம் ஏற்கனவே சொல்லியபடி பாண்டவ அபிமானிகளே அதிகம் இருந்தனர். இதைப் பற்றி மேலும் சொல்வதாயிருந்தால், பீஷ்மர் போரின் நோக்கத்திற்கு சம்பந்தமேயில்லாத, சாதாரணப் போர் வீரர்களை மட்டுமே கொன்று போரை வளர்த்தார். இவர் தனது பாரபட்சத்தால், சிகண்டீ போல முழுமையான ஈடுபாட்டுடன் போர் புரியவில்லை. தன்னைக் கொல்லும் இரகசியத்தை பாண்டவர்களிடம் மட்டும் கூறுகிறார்.
  • துரோணரும் தன்னிடம் அஸ்திரங்கள் இருக்கும் வரை மட்டுமே போரிடுவதாகக் கூறியதன் மூலம், அவரை வீழ்த்தும் இரகசியத்தைத் தெரிவிக்கிறார். கிருஷ்ணரின் தந்திரத்தால், அஸ்வத்தாமன் இறந்த செய்தி கேட்டதும் அஸ்திரங்களை விடுத்தார்.
  • கர்ணனோ பீமனையும் யுதிஷ்டிரனையும் சந்தர்ப்பம் வாய்த்தும் கொல்லவில்லை. அவன் தன் கவச குண்டலங்களை போருக்கு முன்பே தானம் செய்கிறான். மேலும் துச்சாதனனை பீமன் கொல்லும் போது, கர்ணன் அவனைக் காப்பாற்றவில்லை.
  • சல்லியனே கர்ணனை தாழ்த்திக்கொண்டே இருந்தான்.

  • பாண்டவர்களிடமோ, 16 வயதேயான அபிமன்யூவோ, 13-ஆம் நாள் போரில் சக்கரவியூகத்தை உடைத்து, 7 மகாரதிகள் (பெரும் வீரர்கள்) சேர்ந்து பகல் முழுதும் போரிட்டு அவனை வீழ்த்தினர்.
  • கடோத்கஜன் இறக்கும் போது கூட, தன் பெருத்த உருவத்தோடு, அதிககூட்டமாக கௌரவ வீரர்கள் இருக்கும் பக்கமாக விழுந்தானாம். இதனால் கௌரவர்களுக்கு அதிக குதிரை மற்றும் போர்வீரர்கள் சேதம் மிகுந்ததாம்.
  • யுதிஷ்டிரனோ கர்ணனை எதிர்கொள்ள முடியாதென்றாலும், குழுவுக்கு தைரியமளிக்க போருக்குச் சென்றான். மேலும் சில சந்தர்ப்பங்களில் பொய்யுரைத்தும், உண்மையைத் திரித்துக் கூறியும், குழுவின் நன்மைக்காக தன் கொள்கைகளை விட்டுக்கொடுத்தான்.
  • கிருஷ்ணரோ, துரியோதனனுக்கு தான் ஆயுதம் ஏந்த மாட்டேன் என்று அளித்த வாக்கையும் மீறி இருமுறை ஆயுதங்களை எடுக்கிறார். ஆனால் அர்ஜுனன் அவரைத் தடுத்து விடுகிறான்.

தனிப்பட்ட விருப்பங்கள் குழுவின் நோக்கத்தை மீறக்கூடாது. தனிமனித ஆற்றலைக் காட்டிலும் நோக்கத்தைக் குறித்து செயல்படும் தனிமனிதரின் ஈடுபாடே முக்கியம். உங்களால் இயலாது என்றாலும் உங்கள் குழுவுக்கு நம்பிக்கை அளிக்க கடினமான செயல்களைச் செய்து காட்டுங்கள்.

========

மேலும் கிருஷ்ணர் பாண்டவர்கள் பலங்குறைந்தும் மனத்தைரியம் இழந்து காணப்பட்டபோதெல்லாம் அதை சரி செய்கிறார். யுதிஷ்டிரனோ அடக்கி வாசித்து ஜெயிப்பவன். போரின் முதல் நாளன்று கௌரவர் கூடாரத்திற்கு ஆபத்தையும் பொருட்படுத்தாமல் சென்று, தன் குடும்பத்தின் ஆறு மூத்தவர்களிடம் ஆசி பெறச் செல்கிறான். உண்மையாக இவன் அங்கு போரின் முதல் நாள் ஏன் போக வேண்டும்? அங்கு போய் அந்த ஆறு ஆற்றல் மிக்க சான்றோர்களிடமும், ஆசியும் பெற்று, அவர்கள் பாசமிகுதியால் அவர்களை வெல்லும் இரகசியத்தை கூற அதையறிந்து வந்தான். மேலும் அங்கு குழுமியிருந்த சபையோரிடம், துணிந்து எப்போது வேண்டுமானாலும் பாண்டவர்கள் கூடாரத்திற்கு வந்து அவர்களோடு சேர்ந்து கொள்ளலாம் என்று அறைகூவுகிறான். யுதிஷ்டிரனுக்கு கௌரவர்களிடம் ஒற்றுமை இல்லை என்பது நன்றாகத் தெரியும். இது கிடைத்தவரைக்கும் லாபம் என்ற கடைந்தெடுத்த போர்தந்திரம். இம்முறை திருதராஷ்டிரனின் வேறொரு மகனான யுயுத்சு என்பவன் கட்சி மாறுகிறான். இவன் மூலம் யுதிஷ்டிரன் கௌரவர்களைப் பற்றியும், அவர்களது பலம் மற்றும் பலவீனங்களையும் அறிகிறான்.

சரியான தலைமை குழுவின் வெற்றிக் காரணமாகிறது.
சரியான கணக்கிட்டு அபாயங்களை எதிர்கொள்ளுங்கள். எதிரிகளின் பலவீனத்தைப் பயன்படுத்தி அவர்களை வீழ்த்தும் வழியைக் காணுங்கள்.

=========

வாழ்க்கை முறை

கௌரவர்கள் அரண்மனைச்சூழலில், அதிகாரம் செலுத்தி, புகழ், துணிச்சல் எல்லாம் பெற்று, சமூக நடைமுறைகளை அறியாமலேயே இருந்தனர்.

பாண்டவர்கள், குழந்தைப்பருவத்தில் (5-13 வயது) ஹிமாலயத்தில் குருகுலம் பயின்றனர். ஒரு வருடம் குரு-பாஞ்சாலத்தில் மறைந்திருந்தனர். 12 வருடம் வனவாசமும், 1 வருட அஹ்யாதவாசமும் அவர்களுக்கு பல இன்னல்களையும் துன்பங்களையும் தாண்டி வரக் கற்றுக் கொடுத்தது. நிதர்சனங்களை சந்தித்தனர். பல்வேறு தரப்பு மக்களைச் சந்தித்து, சன்னியாசிகள், ஆச்சாரியார்கள், குருமார்கள், யோகிகள், வேதிகர்கள், சுரங்கம் செய்பவர், உழவர், குயவர், தச்சர் போன்ற அனைத்து தொழில் செய்யும் மக்களையும் சந்தித்து, அவர்களது தொழில் நுணுக்கங்களையும் கற்றறிந்தனர். ராக்ஷஸர்கள், காந்தர்வர்கள், அப்சரஸுகள், நாகார்கள் என உத்திரகுரு, வங்காளம் போன்ற பகுதிகள் அனைத்திலும் உறவுகளைப் பெறுக்கினர்.

நிதர்சனத்தை உணர்ந்து எதையும் தேவையில்லை என்று ஒதுக்காமல் கற்றறியுங்கள். தேவையான நேரத்தில் ஒப்பீடு செய்து பார்க்க எளிதாக இருக்கும். உறவுகளை வளருங்கள்.

==========

குழுவில் பெண்களின் பங்கேற்பு

கௌரவர்கள் கூடாரத்தில் பீஷ்மர், துரோணர், கிருபாச்சாரியார், த்ருதராஷ்டிரன், விதுரன், சகுனி, துரியோதனன், கர்ணன், துச்சாதனன் என அனைவருமே ஆண்கள். அதனால் முடிவெடுக்கும் செயலில் ஆளுமையுணர்வும் அதிகாரமுமே மேலோங்கியிருந்தது. இதனால் அதிகாரமும் பகைமையும் உட்பூசலும் அதிகரித்தது.

பாண்டவர்களுக்கு உதவியவர்கள் எல்லோருமே அவர்களின் மனைவி வீட்டைச் சார்ந்தவர்கள்.
  • குந்தி சொல்வதை வேதவாக்காக யுதிஷ்டிரன் மதித்தான். அவள் சொல்லே தன் தர்மமாக கருதினான்.
  • திரௌபதியோ பாண்டவர்கள் எதைச் செய்தாலும் அதற்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் இருந்தாள். பாண்டவர்களோடான அவளது உரையாடல்களைப் படிக்கையில் இப்போரில் அவளது முடிவுகள் எத்தனை தூரம் சென்று வெற்றிப் பாதையை காட்டியிருக்கின்றன என்றறியமுடிகிறது.
உங்கள் குழுவில் சமமான அளவில் (1:1 விகிதம்) பெண்களைக் கொள்ளுங்கள். இதனால் உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுக்கும் போதெல்லாம் நிதானமாக உணர்வுபூர்வமாக ஆலோசனை கூற பெண்கள் இருப்பார்கள்.

========


இந்தப் படங்களில் மகாபாரத காலத்தில் காணப்பட்ட இந்தியா (நன்றி விக்கிபீடியா). படத்தை கிளிக் செய்தால் இன்னும் விபரமாகப் பார்க்கலாம்.








.