நாராயணீயம் ப்ரத²மத³ஶகம் - 1.4

நாராயணீயம் ப்ரத²மத³ஶகம்

ப்ரத²மத³ஶகம் (4)  


நிஷ்கம்பே நித்யபூர்ணே நிரவதி⁴பரமானந்த³பீயூஷரூபே

நிர்லீனானேகமுக்தாவலிஸுப⁴க³தமே நிர்மலப்³ரஹ்மஸிந்தௌ⁴ |

கல்லோலோல்லாஸதுல்யம் க²லு விமலதரம் ஸத்த்வமாஹுஸ்ததா³த்மா

கஸ்மான்னோ நிஷ்கலஸ்த்வம் ஸகல இதி வசஸ்த்வத்கலாஸ்வேவ பூ⁴மன் || 1-4 ||


निष्कम्पे नित्यपूर्णे निरवधिपरमाऩन्दपीयूषरूपे

निर्लीऩाऩेकमुक्तावलिसुभगतमे निर्मलब्रह्मसिन्धौ |

कल्लोलोल्लासतुल्यम् खलु विमलतरम् सत्त्वमाहुस्तदात्मा

कस्माऩ्ऩो निष्कलस्त्वम् सकल इति वचस्त्वत्कलास्वेव भूमऩ् || 1-4 ||


பகவானே! நீங்கள் எப்பொழுதும் நிறைந்து, மாற்றமில்லாத, மாறாத, சுத்த சத்வ வடிவம். அனைத்து உண்மையான பக்தர்களுக்கும் அளவற்ற மகிழ்ச்சியை அளிக்கும் இயல்புடையவர். எண்ணற்ற முக்தி பெற்ற ஆத்மாக்கள் உனது பிரம்மானந்தத்தில் மூழ்கி, இந்தப் பெருங்கடலின் அலைகளில் தூய முத்துக்கள் போல பதிக்கப்பட்டுள்ளன. எனவே அது மிகவும் பிரகாசமாக உள்ளது. பகவான் கிருஷ்ணர் மட்டுமே முழுமையானவர் என்று அழைக்கப்படுவார். எனவே உன்னை ஏன் பூர்ண அவதாரம் (நிஷ்கலா) என்று அழைக்கக் கூடாது?


========

சுத்த சத்வம் என்றால் என்ன?


வாழும் உயிரினம் நிர்ணய அமைப்பு ரீதியாக தூய்மையானது. 


அஸங்கோ³ ஹ்ய் அயம்ʼ புருஷ꞉ (ஸ்ரீமத் பாகவதம் 4.3.23)


வேத இலக்கியங்களில் ஆத்மா எப்பொழுதும் தூய்மையானதாகவும், பௌதிக பற்றுதலால் மாசுபடாததாகவும் இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஆன்மாவுடன் உடலை அடையாளம் காண்பது தவறான புரிதலின் காரணமாகும். ஒருவன் முழுதும் கிருஷ்ண உணர்வோடு இருக்கும்போதே, ஒருவன் தனது தூய, அசல் அமைப்பு (சுத்த சத்வ) நிலையில் இருப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த இருப்பு நிலை சுத்த-சத்வ என்று அழைக்கப்படுகிறது, அதாவது அது பொருள் குணங்களுக்கு அப்பாற்பட்டது. இந்த சுத்த-சத்வ இருப்பு உள் ஆற்றலின் நேரடி செயல்பாட்டின் கீழ் இருப்பதால், இந்த நிலையில் ஜட உணர்வின் செயல்பாடுகள் நிறுத்தப்படுகின்றன.


ஜடம் என்றால் உணர்வற்றது என்றல்லவா கற்றுறிக்கிறோம். அதென்ன ஜட உணர்வு?


உதாரணமாக, இரும்பை நெருப்பில் போட்டால், அது சூடாகவும், சிவப்பாக எரியும் போது, ​​அது இரும்பாக இருந்தாலும், அது நெருப்பைப் போலவும் செயல்படுகிறது. இதேபோல், தாமிரத்தை மின்னூட்டம் செய்யும்போது, ​​தாமிரமாக இருக்கும் அதன் செயல் நின்றுவிடுகிறது; அது மின்சாரமாக செயல்படுகிறது. பகவத் கீதை (14.26) மேலும் இறைவனிடம் கலப்படமற்ற பக்தித் தொண்டில் ஈடுபடும் எவரும் ஒரே நேரத்தில் தூய பிரம்ம நிலைக்கு உயர்த்தப்படுவதை உறுதிப்படுத்துகிறது.


மாம்ʼ ச யோ (அ)வ்யபி⁴சாரேண

ப⁴க்தி-யோகே³ன ஸேவதே

ஸ கு³ணான் ஸமதீத்யைதான்

ப்³ரஹ்ம-பூ⁴யாய கல்பதே (BG 14.26)


நிறைவு குறைதலும் குறைவு நிறைதலும் உலகியலில் நாளும் நிகழ்தலின், பரம்பொருட்கு அது இல்லை யெனச் சொல்ல, “பூரணம்” என்கின்றார். சுத்தமாகிய சிவம் சுத்த சிவமெனப்படுகிறது. வேதங்களில் மந்திரங்களாலும் பிராமணங்களாலும் கூறப்படும், தெய்வப் பொருள்கள் அனைத்திற்கும் பெரிதாக உபநிடதங்கள் உரைக்கும், பிரமப் பொருள் என்பதை விளக்கப் “பெரிய பரம்பொருள்” எனக் குறிக்கின்றார். பிரமத்தைப் பெரிய பொருளெனவும். தத்துவமசி என்னும், உபதேச மந்திரத்தை மகாவாக்கியமென்றும் உரைப்பது தமிழ் மரபு. இவ்வாறே அகம்பிரமாஸ்மி என்னும் பாவனை மந்திரம் சிவோகம் பாவனை என்று வழங்கும் என அறிக. மலப்பிணிப்பால் உளதாகிய குறைபாட்டால் உலகிற், பிறந்து உழலுமாறு புலப்பட, “குறையணிந்து திரிகின்றேன்” என்று வருந்துகிறார் ஞானசம்பந்தப் பெருமான்.

பூரணம் என்றால் முழுமையான, நிறைவான என்று பொருள். இருப்பு நிலை என்றும் பூரணமாகவே இருக்கிறது. ஆனால் இயக்க நிலையான பிரபஞ்சத்தில் சிருஷ்டியின் நிமித்தம் ஏற்படும் குறைபாடுகளினின்று தன்னை நிறைவுபடுத்திக் கொள்வதற்கான இயக்கமே இயற்கையின் இயக்கமாக இருக்கிறது. 'தோற்றதுக்கு வராமலிருப்பது பூரணம். தோற்றதுக்கு வந்திருப்பதும் பூரணமே. பூரணத்தில் இருந்து பூரணம் வந்த பின்னும் பூரணம் பூரணமாகவே இருக்கிறது என்பது வேத வாக்கு. அது பூரணம்; இதுவும் பூர்ணம்; பூரணத்திலிருந்தே இந்த பூர்ணம்(பிரபஞ்சம்) உதித்திருக்கிறது; பூரணத்திலிருந்து இந்தப் பூரணத்தை (பிரபஞ்சத்தை) எடுத்து விட்டால், பூரணமே எங்கும் நிறைந்து இருக்கிறது.


ஓம் பூர்ணமத; பூரணமிதம் பூர்ணாத் பூர்ணம் உதச்யதே |

பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவ வசிஷ்யதே | ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்திஹி என்கிறது ஸ்ரீ உபநிஷத்.


பூர்ணம் அதாவது முழுமை என்னும் சொல்லே ஏழு முறை திரும்ப வருவதும் இருக்கும் இந்த ஸ்லோகம் மிக உயர்ந்த பொருள் கொண்டது. முக்கிய பிரச்சனை மொழிபெயர்ப்பில் உள்ளது. வேதாந்த சாஸ்திரத்தில், "அத ஹ" (அது) மற்றும் "இத" (இது) என்பவை மிகவும் ஆழமான அர்த்தம் கொண்டது. "அதம்" எப்போதும் பூர்ணமாக இருக்கும் வெளிப்படுத்தப்படாத பிரம்மனுக்கு ஒத்திருக்கிறது. இதம் உங்கள் முன் நாம் அன்றாடம் காணும் வெளிப்பட்ட பிரபஞ்சத்திற்கு ஒத்திருக்கிறது. இந்த ஸ்லோகம் கூறுவது, வெளிப்படுத்தப்படாத பிரம்மத்திற்கும், வெளிப்பட்ட பிரபஞ்சத்திற்கும் உள்ள தொடர்பை. வெளிப்பட்ட பிரபஞ்சம் பூர்ணத்திலிருந்து வெளிவருகிறது, எனவே இது பூர்ணம் என்றும் தெளிவாகக் குறிப்பிடப்படுகிறது. அது மீண்டும் பிரம்மனுக்குள் மூழ்கும்போது, ​​மீண்டும் எஞ்சியிருப்பது எப்போதும் பூர்ணமாக இருக்கும் வெளிப்படாத பிரம்மமே.


இந்த ஸ்லோகம் முடிவிலி முரண்பாட்டின் (infinity paradox) எண்ணிக்கையைக் குறிக்கிறது. இது பிரதிநிதித்துவமான உரையின் வடிவில் உள்ளது. “பூர்ணம்”=முழுமை அல்லது முடிவிலியைக் குறிக்கும் அனைத்தும். 


“பூர்ணம் அத” எனும் போது கட்டளை வாக்கியம் (imperative speech in English grammar) “அந்த முடிவிலியில்” (இடு அல்லது சேர்) 


“பூர்ணஸ்ய" =முடிவிலியிலிருந்து, 


"பூர்ணம் ஆதாயா" (ஆதா என்பது பாதியாக இருப்பது அல்லது அதில் சிறிது பகுதியை எடுத்துக் கொள்வது), 


"பூர்ணமேவ" (முடிவிலி மட்டும்), 

வசிஷ்யதே (இருக்கிறது).

இதை equation ஆக எழுதினால் ∞ + ∞ = (∞ + ∞) - (1/2 / 𝑥(எக்ஸ்)) ∞ = ∞



பிரபஞ்சம் மற்றும் மனதின் புரிந்துகொள்ள முடியாத பரந்த தன்மையைப் புரிந்துகொள்வதற்காக இது திரும்பத் திரும்பச் வருகிறது, மேலும் இந்த பெரிய முடிவிலியில் நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதை உணர்ந்து கொள்ளும்போது தாழ்மையுடன் பணிய உணர்கிறோம். அது "சாந்தி சாந்தி சாந்திஹி" என்று முடிகிறது. அதாவது "அமைதி நிலவட்டும்".


என் குறைபட்ட புரிதலில், இந்த ஸ்லோகம் முழு பிரபஞ்சமும் எல்லா நேரங்களிலும் பிரம்மனால் (கடவுள் / matter) நிறைந்திருக்கிறது என்பதை சாதகனுக்கு நினைவூட்டுகிறது, எனவே உபநிடதங்களில் நாம் காணும் அனைத்தும் கடவுளையே சுட்டிக்காட்டுகின்றன.


உதாரணத்துக்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வெய்யிலில் வைக்கும் போது சூரியனின் ப்ரதிபலிப்பு அதில் தெரியும். இதே போல எத்தனை பாத்திரங்களில் நீர் நிரப்பி வைத்தாலும் சூரியனின் ப்ரதிபலிப்பு எல்லாவற்றிலும் தெரியும். இப்போது பாத்திரங்களில் இருக்கும் நீரைக் கொட்டிவிட்டால் சூரியன் இல்லாமல் போய்விடுமா? They are both parts of the same reality, and any gain or loss we perceive is illusory. மாயை. The Whole அல்லது பூர்ணம் remains.


கடலில் இருந்துதான் அலை எழுகிறது. அலை வேறு கடல் வேறு என்று தோன்றினாலும், அலை கடலுக்கு அன்னியமானதல்ல. அது கடலில் இருந்து தோன்றி, கடலில் நிலைபெற்று, கடலில் ஒடுங்கி விடுகிறது. இதில் கடல் பூரணம். அலை பிரபஞ்சம். அலை எழுவதால் கடலுக்கு குறைவு ஒன்றும் நேர்ந்து விடுவதில்லை.


இங்கு எதுவுமே அழிவதில்லை. அழிவு என்ற வார்த்தையே பொய்தான். ஒரு பொருளோ, ஆற்றலோ வேறொரு பொருளாகவோ, ஆற்றலாகவோ மாறுமே அல்லாது அழிவதில்லை. விஞ்ஞானத்தில் இதை Law of Conservation of Energy ''Energy can neither be created nor destroyed, but can be transformed from one form to another'' என்று சொல்வார்கள். பரம்பொருள் உலகைக் கடந்தும் இருக்கிறார். உலகில் ஊடுருவியும் இருக்கிறார். அத்தகைய பரம்பொருள் பஞ்ச இந்திரியங்களுக்கு எட்டாதவர். மனம், மொழி இவற்றிற்குத் தட்டுப்படாதவர். அத்தகைய அதீத நிலையில் அவர் பரிபூரணமாய் விளங்குகிறார். அவரே இப்பிரபஞ்சமாகவும், இதில் காணும் சேதன, அசேதனப் பொருட்களாகவும் விளங்குகிறார். இதனைத்தான் வள்ளுவர் ஆதிபகவன் முதற்கே உலகு என்று குறிபபிடுகிறார். நீரும், நிலமும், ஆகாயமும், காற்றும், நெருப்பும் அனைத்தும் அவரே. ஒளியாகவும், ஒளி பிரகாசிக்கும் வெளியாகவும் பஞ்சபூதங்களாவும் அவரே இருக்கின்றார். எப்படி பிரபஞ்சம் தோன்றியது என்பது பற்றி விஞ்ஞானிகள் கூறும் கருத்தும் இதுதான்.


எனவே பூரணம் என்பது தோற்றத்துக்கு அப்பாலுள்ள நிலை, தோன்றியுள்ள நிலை ஆகிய அனைத்தும் அதுவே என்பது கோட்பாடு. தோன்றியுள்ள அனைத்தும் தோற்றத்துக்கு அப்பாலுள்ள அதிலிருந்து தோன்றி, அதிலேயே நிலை பெற்று அதிலேயே ஒடுங்கி விடுகின்றன. எனவே அதற்கு அப்பால் எதுவுமில்லை. அதுவே யாதுமாகி நிற்கின்றது. எல்லையில் அடங்காதது பூரணம். இயற்கையில் உள்ளவைகள் அனைத்தும் எல்லைக்கு உட்பட்டவைகள். அவை அனைத்தும் பூரணத்தில் அடங்கி விடுகின்றன. மேலும் அதைப் பற்றி ஆராயுமிடத்து குறை ஒன்றுமில்லாத நிறை நிலையாக அது விளங்குவது தெரிகின்றது. எனினும் அதை முழுவதுமாக ஆராய முடிவதில்லை. 


எனவே புலப்படுகின்ற இந்தப் பிரபஞ்சத்தில் பூரணத்தைக் காண முயற்சி செய்கிறான் சாதகன். பூரணத்தை அதனுள் காண்கிறான் ஞானி. பூரணத்திலேயே புதைந்து கிடக்கிறான் நிறை ஞானி. பூரணத்தையே எப்பொழுதும் உணர்பவன் தானே பூரணமாக ஆகி விடுகிறான். பூரணம் அகண்டமானது. கண்டம் என்றால் துண்டுபட்டது. அகண்டம் என்றால் துண்டுபடாதது. கால தேச வர்த்தமானத்துக்கு அங்கு இடமில்லை. பூரணத்தில் இரண்டு என்பதே கிடையாது. எல்லாம் ஒன்றுதான். ஜீவபோதம் இருக்கும் வரை பூரணத்தின் தன்மை விளங்காது. பரபோதத்தில்தான் குறைவில்லாத நிறைநிலை வாய்க்கிறது. பூரணம் உணர்வுக்கு வருகிறது. உடல் உணர்வு கொண்டு விளங்குவது ஜீவபோதம். பரமாத்ம உணர்விலேயே திளைத்திருப்பது பரபோதம்.


எள்ளில் எண்ணெய் போன்றும், விறகில் தீ போன்றும், பாலில் நெய் போன்றும், ஊற்றில் நீர் போன்றும் பரம்பொருள் அனைத்தினுள்ளும் அந்தர்யாமியாகத் திகழ்கிறான். எள்ளும் எண்ணெயும் ஒரே வஸ்து. பிரிக்கும் பொழுது இரண்டாகிறது. அதுபோல பரம்பொருள் ஒருவனே என்றாலும், அவனே பிரபஞ்சமாகவும் விளங்குகிறான். எள், விறகு, ஊற்று, பால் இவற்றை முன்னணியில் வைத்துப் பார்க்கும் பொழுது அவற்றில் உள்ள எண்ணெய், நெருப்பு, நீர், நெய் இவையெல்லாம் மறைந்து பின்னணியில் இருக்கின்றன. அது போலவே ஜீவ உபாதிகளோடு கூடிய ஜீவனை முன்னணியில் வைத்துப் பார்க்கும் பொழுது பரம்பொருள் அந்தராத்மாவாக மறைவாக இருக்கிறார். ஜீவபோதம் அகலும் பொழுது ஜீவாத்மா பூரணமாகத் திகழும் பரமாத்மாவில் லயமாகி விடுகின்றான்.


பரம்பொருள் எல்லையற்றவர், எங்கும் நிறைந்தவர். அவரை நாம் மொழிகளைக் கொண்டு விளக்க முற்படும் பொழுது, எல்லையற்றப் பரம்பொருளை ஒரு எல்லைக்குள் கொண்டு வந்து விடுகிறோமல்லவா ? உவமைகளைச் சொல்லி இறைவன் இப்படி இருக்கிறார், இறைவன் அப்படி இருக்கிறார் என்று சொல்லும் பொழுது, சொல்லப்படாமல் விடுபட்டுப்போன மற்ற விஷயங்களில் இறைவன் இல்லையா ? என்ற கேள்வி வந்து விடுகுறதே ? அதனால்தான் வேதங்களுக்கும் அப்பாற்பட்டவர் அதாவது ''மறைக்கப்பாலாய்'' என்று சொல்கிறார்கள். நாம் காணுகின்ற பொருள்களெல்லாம் அவரே என்பதை ''எல்லாமாய்'' ''யாதுமாகி'' என்று சொல்கிறார்கள். அப்படியென்றால் நாம் காணும் இவை தவிர மற்றவற்றில் இறைவன் இல்லையா? ' என்ற கேள்வி எழுவதால் வருமே என்பால் அவர் அனைத்தையும் கடந்தவர், அப்பாற்பட்டவர், அல்லதுமாய் இருந்தனை என்கிறார்கள். எங்கும், எதிலும், எப்பொழுதும் பரவி, நிரம்பி நிற்பதோடு, அனைத்திற்கும் ஆதாரமாகக், அனைத்தையும் கடந்தும் நிற்பவர் அவரே பூரணமானவர்.



Sloka 1:https://vidhoosh.blogspot.com/2021/11/11.html

Sloka 2: https://vidhoosh.blogspot.com/2021/11/12.html

Sloka 3: https://vidhoosh.blogspot.com/2021/12/13.html

Sloka 4: https://vidhoosh.blogspot.com/2022/01/14.html