ஊழிக் கூத்து

தோத்திரப் பாடல்கள் - பாரதி

வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட - வெறும்
வெளியி லிரத்தக் களியோடு பூதம் பாடப் - பாட்டின்
அடிபடு பொருளுன் அடிபடு மொலியிற் கூடக் - களித்
தாடுங் காளீ சாமுண்டீ - கங் காளீ!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.

ஐந்நூறு பூதம் சிந்திப் போயொன் றாகப் - பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக - அங்கே
முந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத் - தோடே
முடியா நடனம் புரிவாய் அடுதீ சொரிவாய்
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.

பாழாம் வெளியும் பதறிப் போய்மெய் குலையச் - சலனம்
பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய - அங்கே
ஊழாம் பேய்தான் ஓஹோ ஹோ வென்றலைய - வெறித்
துறுமித் திரிவாய் செருவெங் கூத்தே புரிவாய்
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.

சத்திப் பேய்தான் தலையொடு தலைகள் முட்டிச் - சட்டச்
சடசட சட்டென் றுடைபடு தாளங்கொட்டி - அங்கே
எத்திக் கினிலும் நின்விழி யனல்போய் எட்டித் - தானே
எரியுங் கோலங் கண்டேசாகும் காலம்
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.

காலத் தொடுநிர் மூலம்படு மூவுலகும் - அங்கே
கடவுள் மோனத் தொளியே தனியா யிலகும்-சிவன்
கோலங் கண்டுன் கனல்செய் சினமும் விலகும் - கையைக்
கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக்கூத் திடுவாய்
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.

அடுத்து: யார் காளீ?

8 comments:

உண்மைத்தமிழன் said...

ஊழிக் காத்து ஆடுற அளவுக்கு இப்போ இங்க என்ன நடந்து போச்சு தாயி..?

Vijay said...

இது படிக்கும்போது வட இந்திய (லே), பாக்கிஸ்தானில் நடந்து கொண்டு இருக்கும் இயற்கையின் சீற்றம் தான் மனதில் வருகிறது.

KarthigaVasudevan said...

யார் காளீ ? காளி தான சரியான பதம் ஈ காரம் வருமா?
:)

Vidhya Chandrasekaran said...

ஸ்கூலில் இந்தப் பாடலை மியுசிக் டீச்சர் பாடியதாய் மங்கல் நினைவுகள்.

யார் காளி? நாந்தான்.
நீங்க - பத்ரகாளி:))))))))))))))

Vidhoosh said...

உத, விஜய், கார்த்திகா:
யார் காளீ என்ற ஒரு கட்டுரை எழுத ஆரம்பித்தேன். எதையோ படிக்கப் போய் பாரதியின் ஊழிக்கூத்து கண்ணில் சிக்கி விட்டது, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பரிமாணங்கள்.. ஆனால் அதே திகைப்புதான் எனக்கு...

வித்யா & co:
//பத்ரகாளி:))))))))))))))//ஆமா.. ஜ்ஜ்ஜ்ஜாக்கிரதை...


வித்யாவும் எறும்பும் இன்னிக்கு ஏமாந்து போயிருப்பீங்க. better luck next time :))

ஆதவா said...

பாரதியால் மட்டுமே முடியும்
இதை படிக்கும் பொழுது எழுத்துக்களின் வழியே ரெளத்திரம் ஏற,
இசையையும் கவிதையில் நுழைக்க.....

வால்பையன் said...

//அடுத்து: யார் காளீ?//


மாமியார் கூட எதாவது சண்டையா!?

:)

பா.ராஜாராம் said...

//வித்யாவும் எறும்பும் இன்னிக்கு ஏமாந்து போயிருப்பீங்க. better luck next time :))//

//ஊழிக் காத்து ஆடுற அளவுக்கு இப்போ இங்க என்ன நடந்து போச்சு தாயி..?//

//மாமியார் கூட எதாவது சண்டையா!?//

எறும்பு, வித்யா, நசர், சக்தி,

இதோ! :-))

Post a Comment