புயல் ஓய்ந்த கடல்

ஜன்னல் வழி வீசிய உப்புக் காற்று அன்றுதான் அருகிலேயே கடலிருப்பதையும் நினைவூட்டியது. என்னை நோக்கிக் கையசைத்து அழைப்பது போல சின்னச் சின்ன அலைகள் எழும்பியெழும்பி கரைகளில் தலையை முட்டிக் கொண்டு கடைசியில் கையாலாமல் வீழ்ந்து ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருந்தன.

இத்தனை முறை வீழ்ந்து மீண்டும் எழும்பி அலைகள் கலகலத்துக் கொண்டிருந்தன. மனம் கால்களைச் செலுத்தியது. அலைகளுக்கு மிகச் சமீபத்தில் நின்று கொண்டு பார்க்கிறேன். கடலை இதற்கு முன் இத்தனை அருகிருந்து பார்த்தில்லை. பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்.

மிகப் பெரியதாக ஒலித்தபடி எழுந்த அலைகள் விழுங்கி விடும்போல இருந்தது. 'தம்' என்ற ஒலியோடு வீழ்ந்தது அலை. காலுக்கு அடியில் மணலை அரிப்பதும் மீண்டும் தள்ளுவதும் என நுரை பொங்க கடல் அலைந்து கொண்டிருந்தது. பாதங்கள் மணலில் மூழ்கியிருந்தன. அப்படியே புதைந்து போய் விடுமோ என்று பயமாக இருந்தது. சிறிது பின்வாங்கி வந்து கரையில் அமர்ந்து கொண்டேன். ஆனாலும் ஏனோ, கடல் மிகச் சமீபத்திலேயேதான் இருப்பதாகத் தோன்றுகிறது. கடல் பொங்கி தன் மனதினுள் புகுந்து விட்டதாகவே தோன்றுகிறது. அடங்காத சுழல் போல உள்ளுக்குள்ளேயே சுழன்றடிக்கிறது. ஒவ்வொரு பெரிய அலையும் திடுக்கிடச் செய்கிறது. அலைகள் பெருகி இன்னமும் என்னருகில் வந்தன.

அலைகளும் என்னை விடுவதாயில்லை. நானும் கடலை விட்டுத் திரும்பிச் செல்வதாயில்லை. இப்போது திடீரென அலைகள் மிகப் பயங்கரமானதாக காட்சியளிக்கின்றன. இந்தப் பயங்கரம் மிகவும் அற்புதமாக இருக்கிறது. ஈர்க்கிறது. இழுத்துச் செல்கிறது. மீண்டும் அலைகளில் நனைகிறேன். கரைக்குத் திரும்பிவிட வேண்டுமென்று பதற ஆரம்பிக்கிறது.

இந்த அலைகளுக்கு தன்னையே அர்பணிக்கலாமென்ற உணர்வு மேலேங்கியது. கடலுள் நடக்க ஆரம்பித்தேன். கடல் என்னை எங்கும் அழைத்துச் செல்லவில்லை. எங்கும் கொண்டு சேர்க்கவில்லை. அலைகள் என்னை துவட்ட ஆரம்பித்தன. என்னை கரையொதுக்கியது, நான் ஒதுக்கப்படத் தயாராக இல்லை. என்னிலிலும் விலகிய கடலை விடுவதாயில்லை. கடல் மெள்ள என்னுள் நிரம்பியது. மூழ்கினேன். குறிக்கோளேதுமின்றி கடலுள் நடந்துகொண்டேயிருந்தேன். இப்போது என் பாதங்களுக்கு மணல் தட்டுப்படவில்லை.

குரலெழும்பவில்லை, அமைதியான தனிமையுணர்வும் பிரம்மாண்டமான கடலின் ஆழங்களும் என்னை ஈர்த்து இழுத்துச் செல்கின்றன. காதுகளும் ஊமையாயின. காற்று தண்ணீரைச் சுழற்றியது. காற்றைப் பிடிக்க யத்தனிக்கிறேன். அலை நுரைகளில் கலந்த மணலோடு கரைத்து கடல் என்னை கரையில் வீசியது. மனம் கடலுக்குள் திரும்பவே விழைகிறது.

புயல் வீசிக் கொண்டிருப்பதாய் சொல்லும் குரல்கள் கேட்க ஆரம்பித்தன. கடல் தன் அற்புதமான ஈர்ப்பில் என்னை விசைப்படுத்தியது, அலைகளில் மீண்டும் நடக்கிறேன். கடலில் இனியெப்போதும் புயல் வீசாது.


===============================================================
  இந்தக் கதைக்கு அழகான தலைப்புக்கு பரிந்துரைத்த வாசுவுக்கு  நன்றி :- )

20 comments:

அகநாழிகை said...

அருமை. தலைப்புதான் பொருந்தவில்லை. புயல் ஓய்ந்த கடல் என்றிருக்கலாமோ?

Vidhoosh said...

வைத்திருக்கலாம். தோன்றவில்லை. அதான் நீங்க. அதான் நான் :-)) பயிற்சி பத்தலை.

Radhakrishnan said...

விவரிப்புதனில் கதைமாந்தரின் மனம் சந்தோசமா, துக்கமா? என நினைக்கும்போது கடைசி வரிகள் அமைதியை சொல்லிவிட்டு போகிறது.

தேவன் மாயம் said...

புயல் ஓய்ந்த மனம் - என்றிருக்கலாமோ?

இனியா said...

கலக்கலா இருக்கு வித்யா !

தேவன் மாயம் said...

இலக்கியவாதிக்கான அறிகுறிகள் தெரிகிறதே!

Chitra said...

தேவன் மாயம் said...

இலக்கியவாதிக்கான அறிகுறிகள் தெரிகிறதே!


...... I second it! :-)

நசரேயன் said...

ஏன் இந்த குறிப்பை படிச்சிட்டு ஆண்கள் எல்லாம் தற்கொலை பண்ணிக்கமாட்டாங்களா?

KarthigaVasudevan said...

எனக்கென்னவோ இது தற்கொலை முடிவெடுத்த பெண்ணின் குறிப்புகளாகப் படலை.துன்பங்களையே மிகுதியாகக் கண்டு நொந்து போன ஒரு ஜீவன் கடைசியில் அந்தத் துன்பத்தையும் கடலில் கரைந்த பெருங்காயம் போல வாழ்வின் யதார்த்தமாகவே எடுத்துக் கொள்ளப் பழகி விட்டதற்கான அறிகுறி தான் மனதில் பட்டது.

ரொம்ப ஆழமா திங் பண்ணிட்டேனோ (ஐ மீன் சின்னக் கவுண்டர் படத்து செந்தில் மாதிரி!!!)
:))

sakthi said...

arumai vidhoosh

எறும்பு said...

நேசமித்திரன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.

எறும்பு said...

கடலின் பிரமாண்டத்தை விவரித்து ஒரு கதை, விகடனில் படித்திருக்கிறேன். கதையின் நாயகன் கடைசியில் கடலில் இறங்கி, பிரமாண்டத்தோடு கலந்து விடுவதாய் கதை முடியும்.

R.Gopi said...

தலைப்பே கதையை சொன்னது...

படித்து முடித்ததும், உங்கள் எழுத்து பிரம்மாண்ட, விஸ்வரூபம் எடுத்துள்ளது தெரிகிறது....

விதூஷ்... உங்கள் எழுத்தில் இலக்கிய எழுத்தின் வாசம் நிச்சயமாக வந்து விட்டது

Vidhya Chandrasekaran said...

நல்லாத்தானே இருந்தீங்க;))

கடலைப் பற்றிய விவரிப்புகள் சூப்பர்.

CS. Mohan Kumar said...

நல்லாருக்குங்க

Vidhoosh said...

Thanks வி.ரா. சார்

நன்றி தேவன்மாயம். இதுவும் நன்றாகவே இருக்கிறதே. :)

நன்றி இனியா

நன்றி சித்ரா

நன்றி நசர். அதுனால இப்போ தலைப்பை மாத்திட்டேன்.

நன்றி கார்த்திகா. :-))

நன்றி சக்தி : இப்டித்தான் முட்டு சந்துக்கு கூட்டிட்டு போவாங்க. என்னால சாருவோடல்லாம் சண்டை போட முடியாதுங்க. :-)) ஒன்லி சாகித்ய அகாடமி

நன்றி எறும்பு. கடல் பத்தி இது போல நிறையா பேர் எழுதி இருக்காங்க. :-)

கோபி: நன்றி

நன்றி வித்யா. அப்பப்போ இப்டி ஆவதுண்டு. :))

நன்றி மோகன் குமார்.

நேசமித்ரன் said...

ம்ம் நல்ல முயற்சி

இந்த ட்ராவல் பிடிச்சிருக்கு

இன்னும் நல்லா எழுதுவீங்கன்னு தெரியும் .

எழுதுங்க :)

rajasundararajan said...

உங்கள் கதையின் முதல் வரியிலேயே, ‘உப்புக்காற்று’ என்னும் வார்த்தை வந்திருப்பது என்னை மிகவும் கவர்ந்தது. அது கடலைப் பற்றிய சொரணையை உணர்த்துகிற பொருளில் நிற்கிறது.

//என்னை நோக்கிக் கையசைத்து அழைப்பது போல சின்னச் சின்ன அலைகள்//, //கடலை இதற்கு முன் இத்தனை அருகிருந்து பார்த்தில்லை//, //இந்தப் பயங்கரம் மிகவும் அற்புதமாக இருக்கிறது. ஈர்க்கிறது//, //கடலுள் நடக்க ஆரம்பித்தேன்//, //என்னை கரையொதுக்கியது, நான் ஒதுக்கப்படத் தயாராக இல்லை//, //மூழ்கினேன்//, //காதுகளும் ஊமையாயின//, //கடல் தன் அற்புதமான ஈர்ப்பில் என்னை விசைப்படுத்தியது//

There is a state, where there is neither coming nor going nor standing. It is without stability, without change. There is the end of sorrow.

Were there not this, there would be no escape from the world of born.

It is individual separateness and that egotism which begets envy and hatred. And there is no wrong in this world, no vise, no evil, except what flows from the assertion of self.

இது புத்தர் சொன்னது. ‘ஈஸ்வர்’ என்னும் personal God அவரால் நிராகரிக்கப்பட்டது. உங்கள் எழுத்திலும் கதைசொல்லி, அஞ்சியெச்சரிக்கும் பிறர், மணல் மற்றும் கடல் அன்றி ‘ஈஸ்வர்’ இல்லாதது என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. ஈஸ்வர், ‘ஸ்ருதி’ அளவிலானதோர் இருப்பு மட்டுமே என்பாரும் உண்டு. //காதுகளும் ஊமையாயின// என்பதில் நீங்களும் அப்படிப் பொருள்சுட்டுவதாகவே வாசிக்கிறேன்.

நல்ல எழுத்து. ஆனால் சந்தம் பயின்று வருமாறு முயன்றிருந்தால் இன்னும் மெருகு கூடியிருக்கும்.

பா.ராஜாராம் said...

அருமை சகோ!

anne, அருமை!

திவாண்ணா said...

நைஸ்!

Post a Comment